sivasiva.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.003
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் இந்தளம் (திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் சத்தியம்மாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=CekV2gQOEpA |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.003  
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும்
பண் - இந்தளம் (திருத்தலம் திருத்தெளிச்சேரி ; (திருத்தலம் அருள்தரு சத்தியம்மாளம்மை உடனுறை அருள்மிகு பார்வதீசுவரர் திருவடிகள் போற்றி )
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொன்கழல் தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர்! மே வரும் தொழிலாளொடு கேழல்பின் வேடன் ஆம் பாவகம்கொடு நின்றதுபோலும், நும் பான்மையே? | [1] |
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே, திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர்! வளைக்கும் திண் சிலைமேல் ஐந்துபாணமும் தான் எய் களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே? | [2] |
வம்பு அடுத்த மலர்ப்பொழில் சூழ, மதி தவழ் செம்பு அடுத்த செழும் புரிசைத் தெளிச்சேரியீர்! கொம்பு அடுத்தது ஒர் கோல விடைமிசை, கூர்மையோ அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே? | [3] |
கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம் கரைப் பெயும் தேர் உலாம் நெடுவீதிஅது ஆர் தெளிச்சேரியீர்! ஏர் உலாம் பலிக்கு ஏகிட, வைப்புஇடம் இன்றியே வார் உலாம் முலையாளை ஒர்பாகத்து வைத்ததே? | [4] |
பக்கம் நும்தமைப் பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும் செக்கர் மா மதி சேர் மதில் சூழ் தெளிச்சேரியீர்! மைக் கொள் கண்ணியர் கைவளை மால் செய்து வௌவவே, நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே? | [5] |
தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழ, நல் திவள மா மணி மாடம் திகழ் தெளிச்சேரியீர்! குவளை போல் கண்ணி துண்ணென, வந்து குறுகிய கவள மால்கரி எங்ஙனம் நீர் கையின் காய்ந்ததே? | [6] |
கோடு அடுத்த பொழிலின்மிசைக் குயில் கூவிடும் சேடு அடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர்! மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கை நங்கையைத் தோடு அடுத்த மலர்ச் சடை என்கொல் நீர் சூடிற்றே? | [7] |
கொத்து இரைத்த மலர்க் குழலாள், குயில்கோலம் சேர் சித்திரக் கொடி மாளிகை சூழ் தெளிச்சேரியீர்! வித்தகப் படை வல்ல அரக்கன் விறல் தலை, பத்து, இரட்டிக் கரம், நெரித்திட்டது, உம் பாதமே? | [8] |
கால் எடுத்த திரைக்கை கரைக்கு எறி கானல் சூழ் சேல் அடுத்த வயல் பழனத் தெளிச்சேரியீர்! மால் அடித்தலம், மா மலரான் முடி, தேடியே ஓலம் இட்டிட, எங்ஙனம் ஓர் உருக் கொண்டதே? | [9] |
மந்திரம் தரு மா மறையோர்கள், தவத்தவர், செந்து இலங்கு மொழியவர், சேர் தெளிச்சேரியீர்! வெந்தல் ஆகிய சாக்கியரோடு சமணர்கள் தம் திறத்தன நீக்குவித்தீர்; ஓர் சதிரரே? | [10] |
திக்கு உலாம், பொழில் சூழ், தெளிச்சேரி எம் செல்வனை, மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய தக்க பாடல்கள்பத்தும் வல்லார்கள், தட முடித் தொக்க வானவர் சூழ இருப்பவர், சொல்லிலே. | [11] |