சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.017
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மரு அமர் குழல் உமை பண் - காந்தாரபஞ்சமம் (திருவிசயமங்கை விசயநாதேசுவரர் மங்கைநாயகியம்மை) |
5.071
திருநாவுக்கரசர்
தேவாரம்
குசையும் அங்கையில் கோசமும் கொண்ட பண் - திருக்குறுந்தொகை (திருவிசயமங்கை விசயநாதேசுவரர் மங்கைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=SotjI4uHrC4 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.017  
மரு அமர் குழல் உமை
பண் - காந்தாரபஞ்சமம் (திருத்தலம் திருவிசயமங்கை ; (திருத்தலம் அருள்தரு மங்கைநாயகியம்மை உடனுறை அருள்மிகு விசயநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
மரு அமர் குழல் உமை பங்கர், வார்சடை அரவு அமர் கொள்கை எம் அடிகள், கோயில் ஆம் குரவு, அமர் சுரபுனை, கோங்கு, வேங்கைகள் விரவிய பொழில் அணி விசயமங்கையே. | [1] |
கீதம் முன் இசைதரக் கிளரும் வீணையர் பூதம் முன் இயல்பு உடைப் புனிதர், பொன் நகர் கோதனம் வழிபட, குலவு நால்மறை வேதியர் தொழுது எழு விசயமங்கையே. | [2] |
அக்கு அரவு அரையினர், அரிவை பாகமாத் தொக்க நல் விடை உடைச் சோதி, தொல்-நகர் தக்க நல் வானவர், தலைவர், நாள்தொறும் மிக்கவர், தொழுது எழு விசயமங்கையே. | [3] |
தொடை மலி இதழியும் துன் எருக்கொடு புடை மலி சடை முடி அடிகள் பொன் நகர் படை மலி மழுவினர், பைங்கண் மூரி வெள் விடை மலி கொடி அணல், விசயமங்கையே. | [4] |
தோடு அமர் காதினன், துதைந்த நீற்றினன், ஏடு அமர் கோதையோடு இனிது அமர்வு இடம் காடு அமர் மா கரி கதறப் போர்த்தது ஓர் வேடம் அது உடை அணல் விசயமங்கையே. | [5] |
மைப் புரை கண் உமை பங்கன், வண் தழல் ஒப்பு உரை மேனி எம் உடையவன், நகர் அப்பொடு மலர்கொடு அங்கு இறைஞ்சி, வானவர் மெய்ப்பட அருள்புரி விசயமங்கையே. | [6] |
இரும் பொனின் மலைவிலின், எரிசரத்தினால், வரும் புரங்களைப் பொடிசெய்த மைந்தன் ஊர் சுரும்பு அமர் கொன்றையும், தூய மத்தமும், விரும்பிய சடை அணல் விசயமங்கையே. | [7] |
உளங்கையில், இருபதோடு ஒருபதும் கொடு, ஆங்கு அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை, தளர்ந்து உடல் நெரிதர, அடர்த்த தன்மையன் விளங்கிழையொடும் புகும், விசயமங்கையே. | [8] |
மண்ணினை உண்டவன் மலரின்மேல் உறை அண்ணல்கள் தமக்கு அளப்பு அரிய அத்தன் ஊர் தண் நறுஞ்சாந்தமும் பூவும் நீர்கொடு விண்ணவர் தொழுது எழு விசயமங்கையே. | [9] |
கஞ்சியும் கவளம் உண் கவணர் கட்டுரை நஞ்சினும் கொடியன; நமர்கள் தேர்கிலார் செஞ்சடைமுடி உடைத் தேவன் நன்நகர் விஞ்சையர் தொழுது எழு விசயமங்கையே. | [10] |
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை, நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன், பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர் புண்ணியர்; சிவகதி புகுதல் திண்ணமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.071  
குசையும் அங்கையில் கோசமும் கொண்ட
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருவிசயமங்கை ; (திருத்தலம் அருள்தரு மங்கைநாயகியம்மை உடனுறை அருள்மிகு விசயநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அவ் வசை இல் மங்கல வாசகர் வாழ்த்தவே, இசைய மங்கையும் தானும் ஒன்று ஆயினான் விசைய மங்கையுள் வேதியன்; காண்மினே! | [1] |
ஆதிநாதன்; அடல் விடைமேல் அமர் பூதநாதன்; புலி அதள் ஆடையன்; வேதநாதன் விசயமங்கை உளான்; பாதம் ஓத வல்லார்க்கு இல்லை, பாவமே. | [2] |
கொள்ளிடக் கரைக் கோவந்த புத்தூரில் வெள்விடைக்கு அருள்செய் விசயமங்கை- யுள் இடத்து உறைகின்ற உருத்திரன் கிள்ளிட, தலை அற்றது, அயனுக்கே. | [3] |
திசையும் எங்கும் குலுங்க, திரிபுரம் அசைய, அங்கு எய்திட்டு, ஆர் அழல் ஊட்டினான் விசைய மங்கை விருத்தன்; புறத்து அடி விசையின் மங்கி விழுந்தனன், காலனே. | [4] |
பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள் கள்ளம் ஆக்கிக் கலக்கிய கார் இருள் விள்ளல் ஆக்கி, விசயமங்கைப் பிரான், உள்ளல் நோக்கி, என் உள்ளுள் உறையுமே. | [5] |
கொல்லை ஏற்றுக் கொடியொடு பொன்மலை- வில்லை ஏற்று உடையான், விசயமங்கைச் செல்வ, போற்றி! என்பாருக்குத் தென்திசை- எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே. | [6] |
கண் பல் உக்க கபாலம் அங்கைக் கொண்டு உண் பலிக்கு உழல் உத்தமன், உள் ஒளி வெண்பிறைக்கண்ணியான், விசயமங்கை நண்பனை, தொழப்பெற்றது நன்மையே. | [7] |
பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து, வேண்டும் நல் வரம் கொள் விசயமங்கை ஆண்டவன்(ன்) அடியே நினைந்து, ஆசையால் காண்டலே கருத்து ஆகி இருப்பனே. | [8] |
வந்து கேண்மின்: மயல் தீர் மனிதர்காள்! வெந்தநீற்றன், விசயமங்கைப் பிரான், சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப் பந்து ஆக்கி, உயக்கொளும்; காண்மினே! | [9] |
இலங்கை வேந்தன் இருபதுதோள் இற விலங்கல் சேர் விரலான் விசயமங்கை வலம் செய்வார்களும், வாழ்த்து இசைப்பார்களும், நலம் செய்வார் அவர், நன்நெறி நாடியே. | [10] |