குறிப்பறிந் தேன்உடலோடுயிர் கூடிச் செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான் கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே.
| [ 1]
|
கற்றறி வாளர் கருதிய காலத்துக் கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங் கற்றறி காட்டக் கயலுள வாக்குமே.
| [ 2]
|
நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல் கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள் சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின் மற்றொன் றிலாத மணிவிளக் காமே.
| [ 3]
|
கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார் பல்லி யுடையார் பரம்பரிந் துண்கின்றார் எல்லியுங் காலையும் ஏத்தும் இறைவனை வல்லியுள் வாதித்த காயமு மாமே.
| [ 4]
|
துணையது வாய்வருந் தூயநற் சோதி துணையது வாய்வருந் தூயநற் சொல்லாம் துணையது வாய்வருந் தூயநற் கந்தம் துணையது வாய்வருந் தூயநற் கல்வியே.
| [ 5]
|
Go to top |
நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார் பாலொன்று பற்றினாற் பண்பின் பயன்கெடும் கோலொன்று பற்றினாற் கூடா பறவைகள் மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.
| [ 6]
|
ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும் தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும் ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு வாய்ந்த மனமல்கு நூல்ஏணி யாமே
| [ 7]
|
வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன் கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும் வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.
| [ 8]
|
பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின் முற்றது எல்லாம் முதல்வன் அருள்பெறில் கிற்ற விரகிற் கிளரொளி வானவர் கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே.
| [ 9]
|
கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத் துடலுடை யான்பல ஊழிதொ றூழி அடல்விடை யேறும் அமரர்கள் நாதன் இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே. 24,
| [ 10]
|
Go to top |