சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

11.021   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை

-
அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான்
அந்தியே போலும் அவிர்சடையான் அந்தியின்
தூங்கிருள்சேர் யாமமே போலும் சுடுநீற்றான்
வீங்கிருள்சேர் நீல மிடறு.


[ 1]


மிடற்றாழ் கடல்நஞ்சம் வைக்கின்ற ஞான்று மெல் லோதிநல்லாள்
மடற்றா மரைக்கைகள் காத்தில வேமழு வாளதனால்
அடற்றா தையைஅன்று தாளெறிந் தாற்கருள் செய்தகொள்கைக்
கடற்றாழ் வயற்செந்நெல் ஏறும்வெண் காட்டெங் கரும்பினையே.


[ 2]


கருப்புச் சிலை அநங்கன் கட்டழகு சுட்ட
நெருப்புத் திருநெற்றி நாட்டம் திருச்சடையில்
திங்கள் புரையும் திரள்பொன் திருமேனி
எங்கள் இமையோர் இறைக்கு.


[ 3]


இறைக்கோ குறைவில்லை உண்டிறை யேஎழி லார்எருக்கு
நறைக்கோ மளக்கொன்றை துன்றும் சடைமுடி நக்கர்சென்றிப்
பிறைக்கோர் பிளவும் பெறுவிளிக் கொண்டெம் பிரான்உடுக்கும்
குறைக்கோ வணமொழிந் தாற்பின்னை ஏதுங் குறைவில்லையே.


[ 4]


இல்லை பிறவிக் கடலேறல் இன்புறவில்
முல்லை கமழும் முதுகுன்றில் கொல்லை
விடையானை வேதியனை வெண்மதிசேர் செம்பொற்
சடையானைச் சாராதார் தாம்.


[ 5]


Go to top
தாமரைக் கோவும்நன் மாலும் வணங்கத் தலையிடத்துத்
தாம்அரைக் கோவணத் தோடிரந் துண்ணினுஞ் சார்ந்தவர்க்குத்
தாமரைக் கோமளத் தோடுஉல காளத் தருவர்கண்டீர்
தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடிச் சங்கரரே.


[ 6]


சங்குகோள் எண்ணுவரே பாவையரைத் தம்அங்கம்
பங்குபோய் நின்றாலும் பாய்கலுழிக் கங்கை
வரியராப் போதும் வளர்சடையாய் நின்போல்
பெரியர்ஆ வாரோ பிறர்.


[ 7]


பிறப்பாழ் குழியிடை வீழ்ந்துநை வேற்குநின் பேரருளின்
சிறப்பார் திருக்கை தரக்கிற்றியேதிரி யும்புரமூன்
றறப்பாய் எரியுற வான்வரை வில்வளைத் தாய்இரவாய்
மறப்பா வரியர நாணிடைக் கோத்தகை வானவனே.


[ 8]


வானம் மணிமுகடா மால்வரையே தூணாக
ஆன பெரும்பார் அரங்காகக் கானகத்தில்
அம்மா முழவதிர ஆடும் பொழுதாரூர்
எம்மானுக் கெய்தா திடம்.


[ 9]


இடப்பா கமுமுடை யாள்வரை யின்இள வஞ்சியன்ன
மடப்பால் மொழியென்பர் நின்வலப் பாகத்து மான்மழுவும்
விடப்பா சனக்கச்சும் இச்சைப் படநீ றணிந்துமிக்க
கடப்பார் களிற்றுரி கொண்டுஎங்கும் மூடும்எங் கண்ணுதலே.


[ 10]


Go to top
கண்ணி இளம்பிறையும் காய்சினத்த மாசுணமும்
நண்ணி இருந்தால் நலம்இல்லை தண்அலங்கல்
பூங்கொன்றை யின்தேன் பொதியுஞ் சடைப்புனிதா
வாங்கொன்றை இன்றே மதித்து.


[ 11]


மதிமயங் கப்பொங்கு கோழிருள் கண்டவ விண்டவர்தம்
பதிமயங் கச்செற்ற கொற்றவில் வானவ நற்றவர்சூழ்
அதிகைமங் கைத்திரு வீரட்ட வாரிட்ட தேனுமுண்டு
கதிமயங் கச்செல்வ தேசெல்வ மாகக் கருதுவதே


[ 12]


கருதுங் கருத்துடையேன் கையுடையேன் கூப்பப்
பெரிதும் பிறதிறத்துப் பேசேன் அரிதன்றே
யாகப் பிறையான் இனியென் அகம்புகுந்து
போகப் பெறுமோ புறம்.


[ 13]


புறமறையப்புரி புன்சடை விட்டெரி பொன்திகழும்
நிறமறையத்திரு நீறு துதைந்தது நீள் கடல்நஞ்
சுறமறை யக்கொண்ட கண்டமும் சால உறைப்புடைத்தால்
அறமறையச்சொல்லி வைத்தையம் வேண்டும் அடிகளுக்கே.


[ 14]


அடியோமைத் தாங்கியோ ஆடை யுடுத்தோ
குடியோம்ப மாநிதியங் கொண்டோ பொடியாடும்
நெற்றியூர் வாளரவ நீள் சடையாய் நின்ஊரை
ஒற்றியூர் ஆக்கிற் றுரை.


[ 15]


Go to top
உரைவந் துறும்பதத் தேயுரை மின்கள்அன் றாயினிப்பால்
நரைவந் துறும்பின்னை வந்துறுங் காலன்நன் முத்திடறித்
திரைவந் துறுங்கரைக் கேகலம் வந்துறத் திண்கைவன்றாள்
வரைந் துறுங்கடல் மாமறைக் காட்டெம் மணியினையே.


[ 16]


மணியமரும் மாமாட வாய்மூரான் தன்னை
அணியமர ரோடயனும் மாலும் துணிசினத்த
செஞ்சூட்ட சேவற் கொடியானு மாய்நின்று
நஞ்சூட்ட எண்ணியவா நன்று.


[ 17]


நன்றைக் குறும்இரு மல்பெரு மூச்சுநண் ணாதமுன்னம்
குன்றைக் குறுவது கொண்டழி யாதறி வீர்செறிமின்
கொன்றைக் குறுநறுங் கண்ணியி னான்றன்கொய் பூங்கயிலைக்
குன்றைக் குறுகரி தேனும்உள் ளத்திடைக் கொள்மின்களே.


[ 18]


கொண்ட பலிநுமக்கும் கொய்தார்க் குமரர்க்கும்
புண்டரிக மாதினுக்கும் போதுமே மண்டி
உயிரிழந்தார் சேர்புறங்காட் டோரிவாய் ஈர்ப்ப
மயிரிழந்த வெண்டலைவாய் வந்து.


[ 19]


வந்தா றலைக்கும் வலஞ்சுழி வானவ வானவர்தம்
அந்தார் மகுடத் தடுத்தபைம் போதில்அந் தேனுழக்கிச்
செந்தா மரைச்செல்வி காட்டும் திருவடிக் குஞ்செல்லுமே
எந்தாய் அடித்தொண்டர் ஒடிப் பிடித்திட்ட இன்மலரே.


[ 20]


Go to top
மலர்ந்த மலர்தூவி மாமனத்தைக் கூப்பிப்
புலர்ந்தும் புலராத போதும் கலந்திருந்து
கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக் காண்பெளியன்
தெண்ணீர் சடைக்கரந்த தே.


[ 21]


தேவனைப் பூதப் படையனைக் கோதைத் திருஇதழிப்
பூவனைக் காய்சினப் போர்விடை தன்னொடும் போற்றநின்ற
மூவனை ஈருரு வாயமுக் கண்ணனை முன்னுமறை
நாவனை நான்மற வேன் இவை நான்வல்ல ஞானங்களே.


[ 22]


நானுமென் நல்குரவும் நல்காதார் பல்கடையில்
கானிநிமிர்த்து நின்றிரப்பக் கண்டிருக்கும் வானவர்கள்
தம்பெருமான் மூவெயிலும் வேவச் சரந்தூற்றல்
எம்பெருமான் என்னா இயல்பு.


[ 23]


இயல் இசை நாடக மாய் எழு வேலைக ளாய்வழுவாப்
புயலியல் விண்ணொடு மண்முழு தாய்ப்பொழு தாகிநின்ற
மயிலியல் மாமறைக் காடர்வெண் காடர்வண் தில்லைமல்கு
கயலியல் கண்ணியங் காரன்பர் சித்தத் தடங்குவரே.


[ 24]


அடங்காதார் ஆரொருவர் அங்கொன்றை துன்று
மடங்காதல் என்வளைகொள் வார்த்தை நுடங்கிடையீர்
ஊருரன் சென்றக்கால் உண்பலிக்கென் றங்ஙனே
ஆரூரன் செல்லுமா றங்கு.


[ 25]


Go to top
அங்கை மறித்தவ ராலவி உண்ணுமவ் வானவர்கள்
தங்கை மறித்தறி யார்தொழு தேநிற்பர் தாழ்சடையின்
கங்கை மறித்தண வப்பண மாசுணக் கங்கணத்தின்
செங்கை மறித்திர விற்சிவன் ஆடுந் திருநட்டமே.


[ 26]


நட்டம்நீ ஆடும் பொழுதத்து நல்லிலயம்
கொட்டக் குழிந்தொழிந்த வாகொல்லோ அட்டுக்
கடுங்குன்ற மால்யானைக் காருரிவை போர்த்த
கொடுங்குன்ற பேயின் கொடிறு.


[ 27]


கொடிறு முரித்தனன் கூறாளன் நல்லன் குருகினஞ்சென்
றிடறுங் கழனிப் பழனத் தரசை எழிலிமையோர்
படிறு மொழிந்து பருகக் கொடுத்துப் பரவைநஞ்சம்
மிடறு தடுத்தது வும்மடி யேங்கள் விதிவசமே.


[ 28]


விதிகரந்த வெவ்வினையேன் மென்குழற்கே வாளா
மதுகரமே எத்துக்கு வந்தாய் நதிகரந்த
கொட்டுக்காட் டான்சடைமேர் கொன்றைக் குறுந்தெரியல்
தொட்டுக்காட் டாய்கழல்வாய் தொக்கு.


[ 29]


தொக்கு வருங்கணம் பாடத்தொல் நீறணிந் தேநிலவு
நக்கு வருங்கண்ணி குடிவந் தார்நறும் புன்னைமுன்னம்
அக்கு வருங்கழிக் கானல்ஐ யாறரைக் காணஅன்பு
மிக்கு வரும்அரும் போதரைக் காண வெள்குவனே.


[ 30]


Go to top
வெள்காதே உண்பலிக்கு வெண்டலைகொண் டூர்திரிந்தால்
எள்காரே வானவர்கள் எம்பெருமான் வள்கூர்
வடதிருவீ ரட்டானத் தென்னதிகை மங்கைக்
குடதிருவீ ரட்டானங் கூறு.


[ 31]


கூறு பெறுங்கன்னி சேர்கருங் கூந்தல்சுண் ணந்துதைந்து
நீறு பெறுந்திரு மேனி நெருப்புப் புரைபொருப்பொத்
தாறு பெறுஞ்சடை அங்கொன்றை யந்தேன் துவலைசிந்த
வீறு பெறுஞ்சென்று சென்றெம் பிரானுக்கு வெண்ணிறமே.


[ 32]


நிறம்பிறிதாய் உள்மெலிந்து நெஞ்சுருகி வாளா
புறம்புறமே நாள்போக்கு வாளோ நறுந்தேன்
படுமுடியாய்ப்பாய்நீர் பரந்தொழுகும் பாண்டிக்
கொடுமுடியாய் என்றன் கொடி.


[ 33]


கொடிக்குல வும்மதிற் கோவலூர் வீரட்ட கோளரவம்
பிடிக்கில அம்முடிப் பூணலை யத்தொடு மால்விடையின்
இடிக்குரல் கேட்டிடி என்றிறு கக்கடி வாளெயிற்றால்
கடிக்க லுறுமஞ்சி நஞ்சம் இருந்தநின் கண்டத்தையே.


[ 34]


கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக் கருங்கடல்நஞ்
சுண்டல் புரிந்துகந்த உத்தமற்குத் தொண்டடைந்தார்
கூசுவரே கூற்றைக் குறுகு வரேதீக்கொடுமை
பேசுவரே மற்றொருவர் பேச்சு.


[ 35]


Go to top
பேய்ச்சுற்றம் வந்திசை பாடப் பிணமிடு காட்டயலே
தீச்சுற்ற வந்துநின் றாடலென் னாம்செப்பு முப்பொழுதும்
கோச்சுற்ற மாக்குடை வானவர்கோன் அயன் மால்முதலா
மாச்சுற்றம் வந்திறைஞ் சுந்திருப் பொற்சடை மன்னவனே.


[ 36]


மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து வாளரக்கன்
துன்னுஞ் சுடர்முடிகள் தோள்நெரியத் தன்னைத்
திருச்சத்தி முற்றத்தான் சித்தத்துள் வைத்தான்
திருச்சத்தி முற்றாத்தான் தேசு.


[ 37]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song