சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

2.068   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கடம்பூர் - காந்தாரம் அருள்தரு சோதிமின்னம்மை உடனுறை அருள்மிகு அமுதகடேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=Q-PqFOi6AJw  
வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை,
தேன் அமர் கொன்றையினானை, தேவர் தொழப்படுவானை,
கான் அமரும் பிணை புல்கிக் கலை பயிலும் கடம்பூரில்
தான் அமர் கொள்கையினானை, தாள் தொழ, வீடு எளிது
ஆமே.


[ 1]


அரவினொடு ஆமையும் பூண்டு, அம் துகில் வேங்கை
அதளும்,
விரவும் திரு முடி தன் மேல் வெண்திங்கள் சூடி,
விரும்பிப்
பரவும் தனிக் கடம்பூரில் பைங்கண் வெள் ஏற்று
அண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய, இன்பம் நமக்கு அது ஆமே.


[ 2]


இளி படும் இன்சொலினார்கள் இருங்குழல்மேல் இசைந்து
ஏற,
தெளிபடு கொள்கை கலந்த தீத் தொழிலார் கடம்பூரில்
ஒளிதரு வெண்பிறை சூடி, ஒண்ணுதலோடு உடன் ஆகி,
புலி அதள் ஆடை புனைந்தான் பொன்கழல் போற்றுதும்,
நாமே.


[ 3]


பறையொடு சங்கம் இயம்ப, பல்கொடி சேர் நெடுமாடம்
கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர்
கடம்பூரில்
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று, ஆடல் மகிழும்
பிறை உடை வார்சடையானைப் பேண வல்லார்
பெரியோரே.


[ 4]


தீ விரிய, கழல் ஆர்ப்ப, சேய் எரி கொண்டு, இடுகாட்டில்,
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய, நட்டம்
நவின்றோன்
கா விரி கொன்றை கலந்த கண்நுதலான் கடம்பூரில்,
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே.


[ 5]


Go to top
தண்புனல் நீள் வயல்தோறும் தாமரைமேல் அனம் வைக,
கண் புணர் காவில் வண்டு ஏற, கள் அவிழும் கடம்பூரில்,
பெண் புனை கூறு உடையானை, பின்னுசடைப்
பெருமானை,
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர் தாமே.


[ 6]


பலி கெழு செம்மலர் சார, பாடலொடு ஆடல் அறாத,
கலி கெழு வீதி கலந்த, கார் வயல் சூழ் கடம்பூரில்,
ஒலி திகழ் கங்கை கரந்தான், ஒண் நுதலாள் உமை
கேள்வன்,
புலி அதள் ஆடையினான் தன் புனைகழல் போற்றல்
பொருள்


[ 7]


பூம் படுகில் கயல் பாய, புள் இரிய, புறங்காட்டில்
காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில்,
மேம்படு தேவி ஓர்பாகம் மேவி! எம்மான்! என வாழ்த்தி,
தேம் படு மா மலர் தூவி, திசை தொழ, தீய கெடுமே.


[ 8]


திரு மரு மார்பில் அவனும், திகழ்தரு மா மலரோனும்,
இருவரும் ஆய், அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன்
கருவரை காலில் அடர்த்த கண் நுதலான் கடம்பூரில்
மருவிய பாடல் பயில்வார் வான் உலகம் பெறுவாரே.


[ 9]


ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும், அம் துவர்
ஆடைச்
சோடைகள், நன்நெறி சொல்லார்; சொல்லினும், சொல்
அலகண்டீர்!
வேடம் பல பல காட்டும் விகிர்தன், நம் வேதமுதல்வன்,
காடு அதனில் நடம் ஆடும் கண் நுதலான், கடம்பூரே.


[ 10]


Go to top
விடை நவிலும் கொடியானை, வெண்கொடி சேர்
நெடுமாடம்
கடை நவிலும் கடம்பூரில் காதலனை, கடல் காழி
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும்,
படை நவில் பாடல், பயில்வார் பழியொடு பாவம் இலாரே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கடம்பூர்
2.068   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வான் அமர் திங்களும் நீரும்
Tune - காந்தாரம்   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
5.019   திருநாவுக்கரசர்   தேவாரம்   தளரும் கோள் அரவத்தொடு தண்மதி
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
5.020   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song