வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை, தேன் அமர் கொன்றையினானை, தேவர் தொழப்படுவானை, கான் அமரும் பிணை புல்கிக் கலை பயிலும் கடம்பூரில் தான் அமர் கொள்கையினானை, தாள் தொழ, வீடு எளிது ஆமே.
| [ 1]
|
அரவினொடு ஆமையும் பூண்டு, அம் துகில் வேங்கை அதளும், விரவும் திரு முடி தன் மேல் வெண்திங்கள் சூடி, விரும்பிப் பரவும் தனிக் கடம்பூரில் பைங்கண் வெள் ஏற்று அண்ணல் பாதம் இரவும் பகலும் பணிய, இன்பம் நமக்கு அது ஆமே.
| [ 2]
|
இளி படும் இன்சொலினார்கள் இருங்குழல்மேல் இசைந்து ஏற, தெளிபடு கொள்கை கலந்த தீத் தொழிலார் கடம்பூரில் ஒளிதரு வெண்பிறை சூடி, ஒண்ணுதலோடு உடன் ஆகி, புலி அதள் ஆடை புனைந்தான் பொன்கழல் போற்றுதும், நாமே.
| [ 3]
|
பறையொடு சங்கம் இயம்ப, பல்கொடி சேர் நெடுமாடம் கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர் கடம்பூரில் மறையொடு கூடிய பாடல் மருவி நின்று, ஆடல் மகிழும் பிறை உடை வார்சடையானைப் பேண வல்லார் பெரியோரே.
| [ 4]
|
தீ விரிய, கழல் ஆர்ப்ப, சேய் எரி கொண்டு, இடுகாட்டில், நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய, நட்டம் நவின்றோன் கா விரி கொன்றை கலந்த கண்நுதலான் கடம்பூரில், பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே.
| [ 5]
|
Go to top |
தண்புனல் நீள் வயல்தோறும் தாமரைமேல் அனம் வைக, கண் புணர் காவில் வண்டு ஏற, கள் அவிழும் கடம்பூரில், பெண் புனை கூறு உடையானை, பின்னுசடைப் பெருமானை, பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர் தாமே.
| [ 6]
|
பலி கெழு செம்மலர் சார, பாடலொடு ஆடல் அறாத, கலி கெழு வீதி கலந்த, கார் வயல் சூழ் கடம்பூரில், ஒலி திகழ் கங்கை கரந்தான், ஒண் நுதலாள் உமை கேள்வன், புலி அதள் ஆடையினான் தன் புனைகழல் போற்றல் பொருள்
| [ 7]
|
பூம் படுகில் கயல் பாய, புள் இரிய, புறங்காட்டில் காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில், மேம்படு தேவி ஓர்பாகம் மேவி! எம்மான்! என வாழ்த்தி, தேம் படு மா மலர் தூவி, திசை தொழ, தீய கெடுமே.
| [ 8]
|
திரு மரு மார்பில் அவனும், திகழ்தரு மா மலரோனும், இருவரும் ஆய், அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன் கருவரை காலில் அடர்த்த கண் நுதலான் கடம்பூரில் மருவிய பாடல் பயில்வார் வான் உலகம் பெறுவாரே.
| [ 9]
|
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும், அம் துவர் ஆடைச் சோடைகள், நன்நெறி சொல்லார்; சொல்லினும், சொல் அலகண்டீர்! வேடம் பல பல காட்டும் விகிர்தன், நம் வேதமுதல்வன், காடு அதனில் நடம் ஆடும் கண் நுதலான், கடம்பூரே.
| [ 10]
|
Go to top |
விடை நவிலும் கொடியானை, வெண்கொடி சேர் நெடுமாடம் கடை நவிலும் கடம்பூரில் காதலனை, கடல் காழி நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும், படை நவில் பாடல், பயில்வார் பழியொடு பாவம் இலாரே.
| [ 11]
|