திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும், கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும், வரைவிலால் எயில் எய்த, மயேந்திரப்பள் அரவு அரை, அழகனை அடி இணை பணிமினே!
| [ 1]
|
கொண்டல் சேர் கோபுரம், கோலம் ஆர் மாளிகை, கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும், வண்டு உலாம் பொழில், அணி மயேந்திரப்பள் செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணிமினே!
| [ 2]
|
கோங்கு இள வேங்கையும், கொழு மலர்ப்புன்னையும், தாங்கு தேன் கொன்றையும், தகு மலர்க்குரவமும், மாங் கரும்பும், வயல் மயேந்திரப்பள் ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணிமினே!
| [ 3]
|
வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு சங்கம் ஆர் ஒலி, அகில் தரு புகை கமழ்தரும் மங்கை ஓர் பங்கினன், மயேந்திரப்பள் எங்கள் நாயகன் தனது இணை அடி பணிமினே!
| [ 4]
|
நித்திலத் தொகை பல நிரை தரு மலர் எனச் சித்திரப் புணரி சேர்த்திட, திகழ்ந்து இருந்தவன், மைத் திகழ் கண்டன், நல் மயேந்திரப்பள் கைத்தலம் மழுவனைக் கண்டு, அடி பணிமினே!
| [ 5]
|
Go to top |
சந்திரன், கதிரவன், தகு புகழ் அயனொடும், இந்திரன், வழிபட இருந்த எம் இறையவன்- மந்திரமறை வளர் மயேந்திரப்பள் அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்மினே!
| [ 6]
|
சடை முடி முனிவர்கள் சமைவொடும் வழிபட நடம் நவில் புரிவினன், நறவு அணி மலரொடு படர்சடை மதியினன், மயேந்திரப்பள் அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்மினே!
| [ 7]
|
சிரம் ஒருபதும் உடைச் செரு வலி அரக்கனைக் கரம் இருபதும் இறக் கனவரை அடர்த்தவன், மரவு அமர் பூம்பொழில் மயேந்திரப்பள் அரவு அமர் சடையனை அடி பணிந்து உய்ம்மினே!
| [ 8]
|
நாக(அ)ணைத் துயில்பவன், நலம் மிகு மலரவன், ஆக(அ)ணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர்; மாகு அணைந்து அலர்பொழில் மயேந்திரப்பள் யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்மினே!
| [ 9]
|
உடை துறந்தவர்களும், உடை துவர் உடையரும், படு பழி உடையவர் பகர்வன விடுமின், நீர் மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள் இடம் உடை ஈசனை இணை அடி பணிமினே!
| [ 10]
|
Go to top |
வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள் நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல், நம் பரம் இது என, நாவினால் நவில்பவர் உம்பரார் எதிர்கொள, உயர் பதி அணைவரே.
| [ 11]
|