நறவம் நிறை வண்டு அறை தார்க்கொன்றை நயந்து, நயனத்தால் சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான், புறவம் உறை வண்பதியா, மதியார் புரம் மூன்று எரி செய்த இறைவன், அறவன், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
| [ 1]
|
உரவன், புலியின் உரி-தோல் ஆடை உடைமேல் பட நாகம் விரவி விரி பூங்கச்சா அசைத்த விகிர்தன், உகிர்தன்னால் பொரு வெங்களிறு பிளிற உரித்து, புறவம் பதி ஆக, இரவும் பகலும் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
| [ 2]
|
பந்தம் உடைய பூதம் பாட, பாதம் சிலம்பு ஆர்க்க, கந்தம் மல்கு குழலி காண, கரிகாட்டு எரி ஆடி, அம் தண்கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி, எம் தம்பெருமான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
| [ 3]
|
நினைவார் நினைய இனியான், பனி ஆர் மலர் தூய், நித்தலும்; கனை ஆர் விடை ஒன்று உடையான்; கங்கை, திங்கள், கமழ்கொன்றை, புனை வார்சடையின் முடியான்; கடல் சூழ் புறவம் பதி ஆக, எனை ஆள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
| [ 4]
|
செங்கண் அரவும், நகுவெண்தலையும், முகிழ் வெண் திங்களும், தங்கு சடையன்; விடையன்; உடையன், சரி கோவண ஆடை; பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக, எங்கும் பரவி இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
| [ 5]
|
Go to top |
பின்னுசடைகள் தாழக் கேழல் எயிறு பிறழப் போய், அன்ன நடையார் மனைகள் தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து, புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக, என்னை உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
| [ 6]
|
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு, ஒரு தோழம்தேவர் விண்ணில் பொலிய, அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல், பண்ணில் சிறைவண்டு அறை பூஞ்சோலைப் புறவம் பதி ஆக, எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
| [ 7]
|
விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன் திண்தோள் உடலும் முடியும் நெரியச் சிறிதே ஊன்றிய புண்தான் ஒழிய அருள்செய் பெருமான், புறவம் பதி ஆக, எண்தோள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
| [ 8]
|
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடிக் காண்கில்லாப் படி ஆம் மேனி உடையான், பவளவரை போல்-திருமார்பில் பொடி ஆர் கோலம் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக, இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
| [ 9]
|
ஆலும் மயிலின் பீலி அமணர், அறிவு இல் சிறுதேரர், கோலும் மொழிகள் ஒழிய, குழுவும் தழலும் எழில் வானும் போலும் வடிவும் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக, ஏலும் வகையால் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
| [ 10]
|
Go to top |
பொன் ஆர் மாடம் நீடும் செல்வப் புறவம் பதி ஆக மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை, தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ்மாலை பல்-நாள் பாடி ஆட, பிரியார், பரலோகம்தானே.
| [ 11]
|