முறி உறு நிறம் மல்கு முகிழ்முலை மலைமகள் வெருவ, முன், வெறி உறு மதகரி அதள் பட உரிசெய்த விறலினர்; நறி உறும் இதழியின் மலரொடு, நதி, மதி, நகுதலை, செறி உறு சடைமுடி அடிகள் தம் வள நகர் சேறையே.
| [ 1]
|
புனம் உடை நறுமலர் பலகொடு தொழுவது ஒர் புரிவினர் மனம் உடை அடியவர் படு துயர் களைவது ஒர் வாய்மையர், இனம் உடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வது ஒர் சினம் முதிர் விடை உடை அடிகள் தம் வள நகர் சேறையே.
| [ 2]
|
புரிதரு சடையினர்; புலி அதள் அரையினர்; பொடி புல்கும் எரி தரும் உருவினர்; இடபம் அது ஏறுவர்; ஈடு உலா வரி தரு வளையினர் அவர் அவர் மகிழ்தர, மனைதொறும் திரிதரு சரிதையர்; உறைதரு வள நகர் சேறையே.
| [ 3]
|
துடி படும் இடை உடை மடவரல் உடன் ஒரு பாகமா, இடிபடு குரல் உடை விடையினர்; படம் உடை அரவினர்; பொடி படும் உருவினர்; புலி உரி பொலிதரும் அரையினர் செடி படு சடைமுடி அடிகள் தம் வள நகர் சேறையே.
| [ 4]
|
அந்தரம் உழிதரு திரிபுரம், ஒரு நொடி அளவினில் மந்தர வரிசிலை அதன் இடை அரவு அரிவாளியால், வெந்து அழிதர எய்த விடலையர்; விடம் அணி மிடறினர் செந்தழல் நிறம் உடை அடிகள் தம் வள நகர் சேறையே.
| [ 5]
|
Go to top |
மத்தரம் உறு திறல் மறவர் தம் வடிவுகொடு, உருவு உடைப் பத்து ஒரு பெயர் உடை விசயனை அசைவு செய் பரிசினால், அத்திரம் அருளும் நம் அடிகளது அணி கிளர் மணி அணி சித்திர வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே.
| [ 6]
|
பாடினர், அருமறை முறைமுறை; பொருள் என அரு நடம்- ஆடினர்; உலகு இடை அலர்கொடும் அடியவர் துதிசெய, வாடின படுதலை இடு பலி அதுகொடு மகிழ்தரும் சேடர் தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே.
| [ 7]
|
கட்டு உரம் அதுகொடு கயிலை நல் மலை நலி கரம் உடை நிட்டுரன் உடலொடு நெடு முடி ஒருபதும் நெரிசெய்தார் மட்டு உரம் மலர் அடி அடியவர் தொழுது எழ அருள் செயும் சிட்டர் தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே.
| [ 8]
|
பன்றியர், பறவையர், பரிசு உடை வடிவொடு படர்தர, அன்றிய அவர் அவர், அடியொடு முடி அவை அறிகிலார் நின்று இரு புடை பட, நெடு எரி நடுவே ஒர் நிகழ் தரச் சென்று, உயர் வெளி பட அருளிய அவர் நகர் சேறையே.
| [ 9]
|
துகள் துறு விரி துகில் உடையவர், அமண் எனும் வடிவினர் விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல; வினவிடல்! முகிழ்தரும் இளமதி அரவொடும் அழகு உற, முது நதி திகழ்தரு சடைமுடி அடிகள் தம் வள நகர் சேறையே.
| [ 10]
|
Go to top |
கற்ற நல்மறை பயில் அடியவர் அடி தொழு கவின் உறு சிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறைமேல், குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன சொல்,-தகவு உற மொழிபவர் அழிவு இலர்; துயர் தீருமே.
| [ 11]
|