359 திருவானைக்கா திருப்புகழ் ( குருஜி இராகவன் # 442 - வாரியார் # 511 ) |
ஓல மறைகள் முன் திருப்புகழ் அடுத்த திருப்புகழ் |
தான தனன தனதந்த தந்தன தான தனன தனதந்த தந்தன தான தனன தனதந்த தந்தன ...... தனதான |
ஓல மறைக ளறைகின்ற வொன்றது மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர் ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ...... ரெவராலும் ஓத வரிய துரியங் கடந்தது போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும் ஊனு முயிரு முழுதுங் கலந்தது ...... சிவஞானம் சால வுடைய தவர்கண்டு கொண்டது மூல நிறைவு குறைவின்றி நின்றது சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ...... னவியோமஞ் சாரு மநுப வரமைந்த மைந்தமெய் வீடு பரம சுகசிந்து இந்த்ரிய தாப சபல மறவந்து நின்கழல் ...... பெறுவேனோ வால குமர குககந்த குன்றெறி வேல மயில எனவந்து கும்பிடு வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ...... களைவோனே வாச களப வரதுங்க மங்கல வீர கடக புயசிங்க சுந்தர வாகை புனையும் ரணரங்க புங்கவ ...... வயலூரா ஞால முதல்வி யிமயம் பயந்தமின் நீலி கவுரி பரைமங்கை குண்டலி நாளு மினிய கனியெங்க ளம்பிகை ...... த்ரிபுராயி நாத வடிவி யகிலம் பரந்தவ ளாலி னுதர முளபைங் கரும்புவெ ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே. |
Easy Version: ஓல மறைக ளறைகின்ற வொன்றது மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர் ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவரெவராலும் ஓத வரிய துரியங் கடந்தது போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும் ஊனுமுயிரு முழுதுங்கலந்தது சிவஞானம் சாலவுடைய தவர்கண்டு கொண்டது மூல நிறைவு குறைவின்றி நின்றது சாதி குலமு மிலதன்றி அன்பர்சொனவியோமம் சாரும் அநுபவர் அமைந்து அமைந்த மெய் வீடு பரம சுகசிந்து இந்த்ரிய தாப சபலம் அறவந்து நின்கழல் பெறுவேனோ வால குமர குககந்த குன்றெறி வேல மயில எனவந்து கும்பிடு வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் களைவோனே வாச களப வரதுங்க மங்கல வீர கடக புய சிங்க சுந்தர வாகை புனையும் ரணரங்க புங்கவ வயலூரா ஞால முதல்வி யிமயம் பயந்தமின்நீலி கவுரி பரைமங்கை குண்டலி நாளு மினிய கனியெங்க ளம்பிகை த்ரிபுராயி நாத வடிவி யகிலம் பரந்தவள் ஆலின் உதர முள பைங் கரும்புவெண் நாவ லரசு மனை வஞ்சி தந்தருள் பெருமாளே. |
Add (additional) Audio/Video Link
|
|
ஓல மறைக ளறைகின்ற வொன்றது ... ஓம் என்று ஒலிக்கும்
வேதங்களால் பேசப்பெறும் ஒப்பற்ற ஒன்று அது.
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர் ... பிரம்மாந்தரத்திற்கும்
அப்பாலுள்ள மேலைப் பெருவெளியில் ஒளிர்கின்ற அருட்பெருஞ்
ஜோதி அது.
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவரெவராலும் ... நூல்களில்
சொல்லப்படும் சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று வழிகளை
அநுசரித்தவர்களாலும்
ஓத வரிய துரியங் கடந்தது ... சொல்லுதற்கு அரியதாகிய துரிய
நிலையைக் கடந்தது அது.
போத அருவ சுருபம் ... உணர்வு மயமாகிய அருவம், உருவம்
என்ற இரண்டு நிலையிலும்,
ப்ரபஞ்சமும் ஊனுமுயிரு முழுதுங்கலந்தது ... உலகம், உயிர்,
உடம்பு இவற்றோடு முழுவதாகக் கலந்தது அது.
சிவஞானம் சாலவுடைய தவர்கண்டு கொண்டது ... சிவஞானம்
மிகுத்த தவசீலர்கள் கண்டுகொண்டது அது.
மூல நிறைவு குறைவின்றி நின்றது ... மூலப்பொருளாக
நிறைந்துள்ளதாய், குறைவேயின்றி நிற்பது அது.
சாதி குலமு மிலதன்றி ... சாதி, குலம் முதலியன இல்லாதது
அது. மேலும்,
அன்பர்சொனவியோமம் சாரும் ... அன்புள்ள அடியார்கள்
கூறும் ஞான ஆகாயத்தைச் சார்ந்துள்ள
அநுபவர் அமைந்து அமைந்த ... அநுபவம் கொண்ட
பெரியோர்கள் மனம் ஒடுங்கிப் பொருந்தியுள்ள
மெய் வீடு பரம சுகசிந்து ... உண்மையான மோக்ஷ வீட்டு
இன்பமும் பரம ஆனந்தக்கடலும் போன்றது அது. (இத்தனை
பெருமை வாய்ந்தது நின் கழல்).
இந்த்ரிய தாப சபலம் அறவந்து ... ஐந்து இந்திரியங்களினால்
ஏற்படுகின்ற தாக ஆசைகள், மெலிவுகள் ஒழிய அருகில் வந்து
நின்கழல் பெறுவேனோ ... அத்தகைய கழலினை நான் பெறும்
பாக்கியம் உடையவனோ?
வால குமர குககந்த குன்றெறி வேல மயில ... பால குமாரா,
குகனே, கந்தனே, கிரெளஞ்சமலையைப் பிளந்த வேலாயுதனே,
மயில் வாகனனே,
எனவந்து கும்பிடு ... என்று சொல்லித் துதித்துக் கொண்டு வந்த
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் களைவோனே ...
வானத்து அமரர்களின் தலைவன் இந்திரனின் கொடும்
துயரத்தைப் போக்கியவனே,
வாச களப வரதுங்க மங்கல ... வாசம் மிகுந்த சந்தனத்தையும்,
சிறந்த தூய்மையான மங்கலத்தையும்,
வீர கடக புய ... வீரத்திற்கு அறிகுறியான கடகத்தையும் அணிந்த
புயங்களை உடையவனே,
சிங்க சுந்தர ... சிங்க ஏறு போன்ற அழகியவனே,
வாகை புனையும் ரணரங்க புங்கவ ... வெற்றி மாலை சூடும்,
போர்க்களத்தில் சிறந்த வீர சிகாமணியே,
வயலூரா ... வயலூரில் வாழ்பவனே,
ஞால முதல்வி யிமயம் பயந்தமின்நீலி ... உலகங்களுக்குத்
தலைவியும், இமவான் பெற்ற மின்னொளி போன்றவளும், நீல
நிறமுடையவளும்,
கவுரி பரைமங்கை குண்டலி ... பொன்னிறமுடன் கெளரி
எனப்படுபவளும், பராசக்தியும், மங்கைப் பருவத்தாளும், குண்டலினி
சக்தியாக விளங்குபவளும்,
நாளு மினிய கனியெங்க ளம்பிகை த்ரிபுராயி ... என்றும் இனிய
கனி போன்றவளும், எங்களுக்கு அருள் புரியும் அன்னையும், மூன்று
உலகங்களையும் பெற்றெடுத்தவளும்,
நாத வடிவி யகிலம் பரந்தவள் ... நாத வடிவாக விளங்குபவளும்,
உலகெங்கும் பரவி நின்றவளும்,
ஆலின் உதர முள ... ஆலிலை போன்று வயிறை உடையவளும்,
பைங் கரும்புவெண் நாவ லரசு மனை ... பசிய கரும்பு
அனையவளும், வெள்ளை நாவல் மரத்தின் கீழ் வீற்றிருக்கும் அரசன்
ஜம்புநாதனின் மனைவியும் ஆன
வஞ்சி தந்தருள் பெருமாளே. ... வஞ்சிக்கொடி போன்ற உமாதேவி
பெற்றருளிய பெருமாளே.