சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
793   திருவிடைக்கழி திருப்புகழ் ( - வாரியார் # 802 )  

இரக்கும் அவர்க்கு

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத்
     தனத்தனதத் தனத்தனதத் ...... தனதான

இரக்குமவர்க் கிரக்கமிகுத் தளிப்பனசொப் பனத்திலுமற்
     றெனக்கியலுக் கிசைக்கெதிரெப் ...... புலவோரென்
றெடுத்துமுடித் தடக்கைமுடித் திரட்டையுடுத் திலச்சினையிட்
     டடைப்பையிடப் ப்ரபுத்துவமுற் ...... றியல்மாதர்
குரக்குமுகத் தினைக்குழலைப் பனிப்பிறையொப் பெனப்புயலொப்
     பெனக்குறுகிக் கலைக்குள்மறைத் ...... திடுமானின்
குளப்படியிற் சளப்படுமிப் பவக்கடலைக் கடக்கஇனிக்
     குறித்திருபொற் கழற்புணையைத் ...... தருவாயே
அரக்கரடற் கடக்கஅமர்க் களத்தடையப் புடைத்துலகுக்
     கலக்கணறக் குலக்கிரிபொட் ...... டெழவாரி
அனைத்தும்வறப் புறச்சுரர்கற் பகப்புரியிற் புகக்கமலத்
     தனைச்சிறையிட் டிடைக்கழியிற் ...... பயில்வோனே
கரக்கரடக் களிற்றுமருப் புலக்கையினிற் கொழித்தமணிக்
     கழைத்தரளத் தினைத்தினையிற் ...... குறுவாளைக்
கணிக்குறவக் குறிச்சியினிற் சிலைக்குறவர்க் கிலச்சைவரக்
     கயத்தொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே.
Easy Version:
இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன
சொப்பனத்திலும் அற்ற எனக்கு
இயலுக்கு இசைக்கு எதிர் எப் புலவோர் என்று எடுத்து முடித்
தடக் கை முடித்து இரட்டை உடுத்து இலைச்சினை இட்டு
அடைப்பை இடப் ப்ரபுத்துவம் உற்று இயல் மாதர் குரக்கு
முகத்தினைக் குழலைப் பனிப் பிறை ஒப்பு எனப் புயல் ஒப்பு
எனக் குறுகி
கலைக்குள் மறைத்திடு மானின் குளப்பு அடியில் சளப்பம்
இடும் இப் பவக் கடலைக் கடக்க இனிக் குறித்து இரு பொன்
கழல் புணையைத் தருவாயே
அரக்கர் அடல் கடக்க அமர்க் களத்து அடையப் புடைத்து
உலகுக்கு அலக்கண் அறக் குலக் கிரி பொட்டு எழ
வாரி அனைத்தும் வறப்புறச் சுரர் கற்பகப் புரியில் புகக்
கமலத்தனைச் சிறையிட்டு இடைக்கழியில் பயில்வோனே
கரக் கரடக் கழிற்று மருப்பு உலக்கையினில் கொழித்த
மணிக் கழைத் தரளத்தினைத் தினையில் குறுவாளை
கணிக் குறவக் குறிச்சியினில் சிலை குறவர்க்கு இலச்சை வரக்
கயத்தொடு கைப் பிடித்த மணப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன
சொப்பனத்திலும் அற்ற எனக்கு
... யாசிப்பவர்களுக்கு மிக்க
இரக்கம் கொண்டு கொடுப்பன என்பது கனவிலும் இல்லை என்று
சொல்லும்படியான எனக்கு,
இயலுக்கு இசைக்கு எதிர் எப் புலவோர் என்று எடுத்து முடித்
தடக் கை முடித்து இரட்டை உடுத்து இலைச்சினை இட்டு
...
இயற்றமிழிலோ, இசைத்தமிழிலோ எதிர் நிற்கக் கூடிய எந்தப் புலவர்
உள்ளார் என்று மமதையுடன் பாடல்கள் அமைத்து, தலையையும் பெரிய
கைகளையும் அலங்கரித்து, ஆடம்பரமான அரை ஆடை, மேல்
ஆடைகளை உடுத்து, முத்திரை மோதிரம் அணிந்து,
அடைப்பை இடப் ப்ரபுத்துவம் உற்று இயல் மாதர் குரக்கு
முகத்தினைக் குழலைப் பனிப் பிறை ஒப்பு எனப் புயல் ஒப்பு
எனக் குறுகி
... ஒருவர் வெற்றிலைப் பை ஏந்தி வர, பெரிய தலைவனின்
ஆடம்பரங்களை மேற்கொண்டு, அங்கு வந்து பொருந்திய மாதர்களின்
குரங்கு போன்ற முகத்தை குளிர்ந்த நிலவுக்கு ஒப்பென்றும், கூந்தலை
மேகத்துக்கு ஒப்பென்றும் சொல்லி, அணைந்து,
கலைக்குள் மறைத்திடு மானின் குளப்பு அடியில் சளப்பம்
இடும் இப் பவக் கடலைக் கடக்க இனிக் குறித்து இரு பொன்
கழல் புணையைத் தருவாயே
... ஆடைக்குள் மறைத்து
வைக்கப்பட்டிருக்கும் மானின் குளம்படி போன்ற பெண்குறியில்
துன்பப்படும் பிறப்பு என்ற கடலை நான் தாண்டி உய்ய, இனி
அடியேனாகிய என்னைக் கண் பார்தது, உனது அழகிய திருவடி என்னும்
தெப்பத்தைத் தந்தருளுக.
அரக்கர் அடல் கடக்க அமர்க் களத்து அடையப் புடைத்து
உலகுக்கு அலக்கண் அறக் குலக் கிரி பொட்டு எழ
...
அசுரர்களின் வலிமையைத் தொலைக்க, போர்க் களத்தில் நன்றாக
அலைத்து அடித்து உலகின் துன்பம் நீங்க, உயரிய கிரெளஞ்ச மலை
பொடிபட்டு உதிர,
வாரி அனைத்தும் வறப்புறச் சுரர் கற்பகப் புரியில் புகக்
கமலத்தனைச் சிறையிட்டு இடைக்கழியில் பயில்வோனே
...
எல்லாக் கடல்களும் வற்றிப் போக, தேவர்கள் கற்பக லோகமாகிய
பொன்னுலகில் குடியேற, தாமரையில் வீற்றிருக்கும் பிரமனைச் சிறையில்
அடைத்து, திருவிடைக்கழி என்னும் தலத்தில் பொருந்தி இருப்பவனே,
கரக் கரடக் கழிற்று மருப்பு உலக்கையினில் கொழித்த
மணிக் கழைத் தரளத்தினைத் தினையில் குறுவாளை
...
துதிக்கையையும், மதநீர் பாய்ந்த சுவட்டையும் உடைய யானையின்
தந்தமாகிய உலக்கையைக் கொண்டு, தேர்ந்து எடுக்கப்பட்ட
ரத்தினங்களையும் மூங்கில் முத்தையும் தினை குத்துவது போல
இடித்து விளையாடுபவளான வள்ளியை,
கணிக் குறவக் குறிச்சியினில் சிலை குறவர்க்கு இலச்சை வரக்
கயத்தொடு கைப் பிடித்த மணப் பெருமாளே.
... வேங்கை
மரங்கள் உள்ள குறிஞ்சி மலை நில ஊரில் வில்லை ஏந்தும் குறவர்களுக்கு
வெட்கம் உண்டாகும்படி, கணபதியாகிய யானையின் உதவியோடு
கைப்பிடித்த மணவாளப் பெருமாளே.

Similar songs:

793 - இரக்கும் அவர்க்கு (திருவிடைக்கழி)

தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத்
     தனத்தனதத் தனத்தனதத் ...... தனதான

Songs from this thalam திருவிடைக்கழி

792 - அனல் அப்பு அரி

793 - இரக்கும் அவர்க்கு

794 - பகரு முத்தமிழ்

795 - படி புனல் நெருப்பு

796 - பழியுறு சட்டகமான

797 - பெருக்க மாகிய

798 - மருக்குலாவிய

799 - முலை குலுக்கிகள்

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song