சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Marati  
சேக்கிழார்  
சிறுத்தொண்ட நாயனார் புராணம்  

12 -ஆம் திருமுறை   12.360  
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
 
உருக்கொண்டிருந்து, உயிர்கள் மீது செலுத்தும் தன் ஆணைச் செயலை மன்மதன் ஒழியுமாறு, விழியினின்றும் வெளிப் படுத்தும் செந்தீத் தோன்றும் நாட்டத்தையுடைய சிவபெருமான் மகிழ்வுடன் வீற்றிருக்கும் திருப்பதி, வயல்களில் கருங்கண்களை யுடைய உழத்தியர் தம் களியாடல்களைக் காட்டுவதற்கு இடமான 'காவேரித் திருநாடு' என்று சொல்லப்படுகின்ற சோழ நாட்டில், வளம் வாய்ந்த திருச்செங்காட்டங்குடி என்பதாகும்.
குறிப்புரை:

நிலவும் அப்பதியில் நீண்ட சடையையுடைய சிவ பெருமானின் திருநீற்றுச் சார்பினால் உலகத்தில் தோன்றி வளர்கின்ற எல்லா உயிர்களுக்கும் உயர்வான மருத்துவத் தொழிலை மேற் கொண்டு, பெருகும் புகழையுடைய அம்மருத்துவர் குலத்தின் சீலம் பெருகுமாறு வந்து தோன்றியவர், பலரும் புகழ்கின்ற பரஞ்சோதியார் என்று அழைக்கப்படும் திருப்பெயரை உடையவர். *** : காவல் தொழில் - மருத்துவத் தொழில். அடுத்து வரும் 'ஆயுள் வேதக் கலையும்' எனவரும் திருப்பாடலால் இத் தொழிலு டைமை பெறப்படும். படைக்கலத் தொழிலிலும் வல்லுநராயினும், அதன் பயன் ஓரொருகால் நேர்ந்த தொன்றாதலின், இஃது அதனினும் சிறப்பாகக் குறிக்கப் பெறுவதாயிற்று. மாமாத்திரர் குலம் - வழிவழியாக மருத்துவம் செய்துவரும் மரபு. இம்மரபினர்க்கு முந்நூல் அணியும் மரபும் உண்டு. இவ்வர லாற்றில் வரும் 23ஆவது பாடலால் இவ்வுண்மை அறியப்படும்.
ஆயுள் வேதம் என்று கூறப்படுகின்ற மருத்துவ நூற் கலையும், எல்லை இல்லாத வடநூல்களில் உள்ள பல்வேறான கலை களும், தூய படைக்கலத் தொழிற்கலைகளும் ஆகிய இவற்றை யெல்லாம், அவ்வவற்றில் எல்லை காண்பளவும் பயின்றவர். அவற் றுடன் பாய்கின்ற மதம் பொழியும் யானைகளையும் குதிரைகளையும் செலுத்தும் தன்மை பொருந்திய வீரம் செறிந்த கலையிலும், உலகத்தில் மேம்பட்டவராக விளங்கினார். *** உயிர்கள் நோயின்றி வாழவும், நெடிது வாழவும் கூறும் நூல்கள் ஆயுள் வேதமாகும். தமிழில் உள்ள சித்தர் மருத்துவ நூல்கள் இவையாம். இவை போகர் முதலியவர்களால் செய்யப் பெற்றவை யாம். மருத்துவன் தாமோதரனார் என்பார் சங்கப் புலவர்களில் ஒருவாராய் இருந்துள்ளமையும் எண்ணத்தக்கது. மறைகளின் சங்கங்களுள் இம்மருத்துவக் கலையும் ஒன்றுதல் பற்றி இதனை ஆயுள் வேதம் என்றனர். தமக்கினி தென்று பிறர்க்கின்னா செய்தல் நன்றன்று. எந்நாட்டிற்கும் எந்நிலையிலும் தீங்குவாராமல் காக்கும் நோக்கில் இக்கலையைப் பயின்றும், பயன்படுத்தியும் வந்தார். ஆதலின், 'தூய படைக்கலத் தொழில்' என்றார்.
தம் உள்ளம் நிறைவு பெறச் செய்யும் கலைத் துறைகளை எல்லாம் இடைவிடாது கற்று, 'அவை எல்லாவற்றாலும் தெளிவு பெற வடித்து எடுத்த பொருளாவது, சிவனடிகளில் பொருந் திய அன்புடைமையான ஒழுக்கமேயாகும்' என்று கொள்ளும் உணர் வினால் முதன்மை பெற, இயமனை உதைத்த திருவடியிடத்தே அன்பு கொண்ட ஒழுக்கம், பள்ள மடையில் நீர் ஓடுவது போல், தடையில்லாது விரைவாக என்றும் பயின்றுவரும் பண்பை உடையவரானார். *** இடையீடின்மைக்கும், விரைவிற்கும் பள்ளத்தில் பாயும் வெள்ள நீரைக் காட்டல் இயல்பு. அவ்வகையிலேயே ஆசிரியர் சேக்கி ழாரும் 'அன்பு பள்ளமடை யாய்' என்றார். 'பள்ளந்தாழ் உறுபுனலில்' (தி. 8 ப. 5 பா. 21) என மணிவாசகர் அருளுவதும் நினைவு கூர்தற் குரியதாம்.
சிவனடியார்களுக்கு எந்நாளும் இயல்பால் பொருந்திய தொண்டுகளைச் செய்தே, குற்றம் அற்ற புகழையுடைய மன்னனிடத்து அன்பினால் பக்கத் துணையாயிருந்து, அவனுக்காகப் போரில் செலுத்தப்படுகின்ற யானைப் படையைச் செலுத்திப் பல போர்களில் வெற்றி கொண்டு, போரில் எதிர்த்து நின்ற மன்னர்களின் நாடுகள் பலவற்றையும் கைக்கொண்டு, தேர்ப்படையையுடைய தம் மன்னனிடம் சிறப்பைப் பெற்றார். *** மன்னவன் - மகேந்திரவர்மனின் மகன் நரசிம்மவர்மன். இவன் காலம் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.
அம் மன்னனுக்காகப் படையெடுத்துச் சென்று வடநாட்டில் 'வாதாபி' என்ற பழைய நகரம் தூளாக ஆகும்படி, யானைப் படையைச் செலுத்தி வென்று, பல மணிகளையும், பொருட் குவைகளையும், யானைக் கூட்டங்களையும், குதிரைத் தொகுதிகளை யும், இன்னும் இத்தகைய எண்ணில்லாதவற்றையும் கைக்கொண்டு, போர்செய்தலில் விருப்புடைய தம் மன்னன் முன் கொணர்ந்தார். *** வாதாபி - மும்பை மாகாணத்தின் பெல்காம் மாவட்டத்தில் பதாமி என அழைக்கப் பெறும் நகரமாகும். இது சாளுக்கிய அரசனான புலிகேசிக்குத் தலைநகரமாயிருந்ததென்றும், அவனுக்கும் நரசிம்மவர்மனுக்கும் நிகழ்ந்த போரில், பல்லவனுக்குத் தானைத் தலைவராக இருந்த பரஞ்சோதியார் போர்முகத்துட் சென்று வென்று கொண்டு வந்த பொருள்கள் பல என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுவர். திருத்தொண்டர்களின் கால ஆய்விற்கு, இனைய பல இடங்கள் பெரிதும் துணை செய்கின்றன. 'எண்ணில கவர்ந்தே' என்பதால் இங்குக் கூறப்படும் பொருள்களுடன் வேறு பல பொருள்களும் கவர்ந்து வந்தமை புலனாம். அவற்றுள் மூத்த பிள்ளையாரின் திருவுருவம் ஒன்று என்றும், அப்பெருமானே, திருச்செங்காட்டங்குடியில் இன்று காணப்பெறும் 'வாதாபி கணபதி' என வணங்கப் பெற்று வருகிறார் என்றும் கூறுவர். இதனால் மூத்த பிள்ளையார் வணக்கமே ஆறாம் நூற்றாண்டு முதல்தான் வந்தது என்பது எவ்வாற்றானும் பொருந்துவதன்றாம். 'கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட அமரமுனிவன் அகத்தியன் தனாது கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை' (மணிமேகலை பதிகம் 10 - 12) என வரும் கூற்றாலும், சுமத்திராவிலுள்ள 'லாரா யோங்ராங்' என்னும் இடத்தில், மூத்த பிள்ளையாரின் படிமங்கள் பல காணப்படுகின்றன என ந. சி. கந்தையா தரும் குறிப்பாலும் (சிவன். பக். 87) மூத்த பிள்ளையாரின் வணக்கம் தொன்மையானது என அறியலாம்
ஒளி பொருந்திய முடியுடைய மன்னனும் இவர்தம் யானைப் படை செலுத்துவதற்குரிய வல்லமையைப் பார்த்து, வியந்து, புகழ்ந்து கூற, அவரை அறிந்த அமைச்சர்கள் எடுத்துக் கூறுவாராய்ப், 'பிறைச்சந்திரனைச் சூடிய சிவபெருமானின் திருத்தொண்டு வாய்க்கப் பெற்ற வல்லமையினால், இவரை எதிர்த்து நிற்பவர் எவரும் இவ் வுலகத்தில் இல்லை' என்று உரைத்தார்கள்.
குறிப்புரை:

'தம் இறைவரின் திருத்தொண்டர் இவர்' என்று அமைச்சர்கள் கூறக் கேட்ட மாலைசூடிய மன்னன், 'எம்பெருமானின் அடியவரான இவரை இத்தகையவர் என்று அறியாது கெட்டேன்! மிக்க கொடிய போர்முனையில் சென்று போர் செய்யுமாறு விட்டிருந்தேனே!' என்று நினைத்து, நடுக்கம் அடைந்து, அவரை நோக்கி, 'எம்பெருமானே! இப்பிழையைப் பொறுத்தருள வேண்டும்!' என்று இறைஞ்சினான்.
குறிப்புரை:

அங்ஙனம் மன்னன் வணங்கவும், அதன் முன்பு தாம் இறைஞ்சி, 'என் உரிமையான படைத்தொழிலுக்கு ஏற்றதான பொருந்திய திறத்தை யான் செய்தேன். அதனால் ஒரு தீங்கும் இன்று' என்று பரஞ்சோதியார் உரைக்க, அறவழிச் செங்கோல் செலுத்தும் மன்னன், அப்போது அவருக்கு நிறைந்த செல்வக் குவியல்களுடன், நெடிது துய்த்தற்குரிய நிலங்களையும் அளித்து அவரை வணங்கி உரைப்பானாகி, *** நீடுவிருத்திகள் அளித்தல் - தம் வாழ்விற்கெனப் பிறர் பால் பொருள்வேண்டாதிருக்க இறையிலியாக நிலங்கள் பலவற்றை அளித்தல்.
'உம் உண்மை நிலையான திருத்தொண்டை, யாம் இதுகாறும் அறியாதவாறு செய்து வந்தீர்! எம் மனக் கருத்திற்கு இனிமை பெற இசைந்த, உம் மெய்ம்மைத் திருத்தொண்டின் வழி ஒழுகி, இனி நீர் வேண்டியவாறே, செம்மை தரும் நெறியான சிவ நெறித் தொண்டு செய்வீராக!' என்று சொல்லித், தம் கீழ் அவர் ஆற்றிவரும் பணியினின்றும் விடுவித்து விடைதந்தான். *** சரித்தல் - வேண்டியவாறு ஒழுகல். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
புகழ்ந்து கூறப்படும் பரஞ்சோதியாரும் அம் மன்னனிடம் விடைபெற்றுக்கொண்டு, தம் பதியான செங்காட்டங் குடியை அடைந்து, குளிர்ந்த பிறைச் சந்திரன் வாழ்வதற்கு இடமான திருமுடியையுடைய சிவபெருமானைக் 'கணபதீச்சரம்' என்ற கோயி லில் வணங்கித், திருத்தொண்டினை முன்னைய நிலைமையி னின்று வழுவாது முறையாக அன்புடன் செய்து வருவாராயினார், *** அரசன் அரசுபுரிந்து வந்த இடம் காஞ்சிமா நகராகும். திருச்செங்காட்டங்குடியிலுள்ள திருக்கோவிலின் பெயர் கணபதியீச் சரம் ஆகும். கயமுகாசுரனைக் கொன்ற பாவம் நீங்கத் திருச்செங்காட் டங்குடியில் கணபதி சிவலிங்கத் திருமேனியை எழுந்தருளுவித்து வழிபாடாற்றிய திருக்கோயில் கணபதியீச்சரம் எனப் பெயர் பெறுவ தாயிற்று. எனவே மூத்த பிள்ளையார் (கணபதி) வழிபாடாற்றிய இடமும், அவரைப் பற்றிய வழிபாடும் அக்காலத்திற்கு முன்னமேயே இருந்திருத்தல் வேண்டும் என இதன்வழி அறியலாம்.
மறைகள் தோன்றற்குக் காரணரான சிவபெருமா னின் அடியவர்களுக்கு வேண்டிய உண்மைப் பணிகளை யெல்லாம் செய்வாராய், குற்றம் அற்ற குடியில் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்ற காதலையுடைய இல்லக் கிழத்தியாருடன், இருவர் கருத்தும் ஒன்றாய்ப் பொருந்த வரும் பெருமையுடையதாய், நீதியின் வழியே வரும் இல்லறம் நடத்தி வாழும் தன்மையில் நிலை நிற்பாராய், *** இயற்பெயர் அறிய இயலாமையின் ஊர்ப்பெயரோடு கூட்டித் திருவெண்காட்டுநங்கை என்றே அழைத்து வந்தனர் எனத் தெரிகிறது. 'தீதில் குடி - குற்றமற்ற தம் கணவர் குடியிலேயே தாமும் பிறந்தவர். 'இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல்குடி' என்னும் திருமுரு காற்றுப்படையும் (தி. 11 ப. 17 வரி. 181).
தேனையுடைய கொன்றை மலர் மாலையைச் சூடிய சடையையுடைய சிவபெருமானின் அடியவர்களை நூல் விதிப்படி நாள்தோறும், முறையாக முன்னமேயே உணவு உண்ணச் செய்து, அதன் பின்னர்த் தாம் உண்ணுதலான பெருவிருப்பத்தால் அதனை வழக்கமாகக் கொண்டு ஒழுகும் நிலையில், தவறாது ஒழுகுதலான தூய்மையான தொழிலில் சிறந்து விளங்கினார். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
தூய திருவமுதும், பழவகைகளும், அறு சுவைகளை யுடைய கறிவகைகளும், நெய்யும், உறைந்த தயிரும், பாலும், இனிய பலகாரங்களும், அமுது போன்ற உண்ணீரும் என்ற இவற்றைப் பொருந்தியவாற்றால், திருவமுது செய்விக்க, அதற்கு இசைந்து அடியார்கள் வந்து அமுதுண்டு, பெரிய உலகம் போற்ற வரும் இவரிடம், உள்ளம் மகிழ்ச்சி கொண்டனர். *** பண்ணியம் - இனிப்பொடும் காரத்தொடும் கூட்டிச் செய்யப்பட்ட பலகாரங்கள். உண்ணீர் அமுதம் - அருந்துதற்கெனத் தூய்மையும் மணமும் பெற்ற நீர். 'அமிழ்தம் என்று உணரற்பாற்று' (குறள், 11) என்பர் திருவள்ளுவனாரும்.
குளிர்ந்த பிறைச் சந்திரனுடன், பாம்பையும் செஞ் சடைமீது அணிந்து கொண்டுள்ள இறைவரின் அடியவர்களுக்கு விருப்புடன் செய்யும் வழிபாட்டு வகையால், மேன்மையுடைய அவ்வடியவர்களின் முன்பு, தம்மை மிகவும் சிறியவராய்க் கருதி ஒழுகி வந்தமையின், அவர், சிறுத்தொண்டர் என்ற பெயருடன் உலகில் விளங்கலானார். *** தாழ்வெனும் தன்மை கொண்டு அவர் வாழ்ந்துவரினும், அவர்தம் பண்பாலும் செய்கையாலும் மிகப்பெரிய தொண்டராவர். 'நீரோ பெரிய சிறுத்தொண்டர்' என இறைவரால் பின்னர் அழைக் கப்படுதலும் காண்க. நயப்பாட்டு வழிபாட்டால் - விருப்பத்துடன் கூடிய வழிபாட்டால்.
நெற்றியில் கண்ணையுடைய இறைவரின் கணபதீச் சரத்தில் கருத்துப் பதிய, உள்ளம் நிறையும் அன்பினால் தொண்டுகள் பலவும் செய்து ஒழுகுபவரான அவர், குறைவின்றி அளவில்லாத பெருமையுடைய சிறந்த அடியார்கள் இடைவிடாது வந்து உணவு உண்டருளப் பொருந்திய மகிழ்ச்சியுடன் விரும்பி வாழ்ந்திருக்கும் நாள்களில்,
குறிப்புரை:

கங்கைநீர் பொருந்திய சடையையுடைய சிவபெரு மானின் திருவருளால், நிறைந்த தவத்தையுடைய அவருக்குப் பெரு கும் சிறந்த இல்லறத்தின் வேராகி விளங்கும் திருவெண்காட்டு நங்கையாரின் மணிவயிற்றில் 'சீராள தேவர்' என்னும் திருமகனார் தோன்றினார். *** மனையறத்திற்கு வேராக விளங்குபவர், வீட்டிலிருக்கும் மனைக்கிழத்தியர்களேயாவர். 'இல்லதென் இல்லவள் மாண்பானால்' (குறள், 53), 'மனைக்கு விளக்கம் மடவார்' (தண்டி. மேற்கோள்) என்றெல்லாம் பண்டைப் பனுவல்கள் கூறுதல் காண்க. இவ்விரு பாடல் களும் ஒருமுடிபின.
பிறர் எவரும் பெறுதற்கரிய அருமையான ஒப்பற்ற நன்மகவு தோன்றியபொழுது, மனையை அழகுபடுத்தி, மகவு தோன் றிய பெருமையால் சுற்றத்தார்கள் மகிழ, பெறற்கரிய அம்மகவைப் பெற்றமையால் பெருகிவரும் மனமகிழ்ச்சி, தந்தையாரின் மனத்தில் அடங்குதற்கரிய நிலையில் வளர்ந்து வரச் சிறப்புமிக்க நெய்யாடல் விழாவினைத் திருச்செங்காட்டங் குடியிலுள்ளார் கொண்டாட, *** நெய்யாடல் - எண்ணெய் தேய்த்துக் குழந்தையைக் குளிக்கப் படுத்துதல்.
மங்கலமான நல்ல இயங்களின் ஒலியும், மறை களின் ஒலியும் வானத்தில் ஓங்க, இறைவரின் சிறப்புடைய அடியார் களுக்கு அளவில்லாத பொருள்களைத் தந்து, தங்கள் குல மரபிற்கு உரிய செயற்பாடுகளைப் பத்து நாள்களிலும் மேன்மேலும் மிக மகிழ்ச்சியுடன் செய்து, காப்பு அணிவித்தனர். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
மிக்க விருப்பமுடைய சுற்றத்தவர்கட்கு எல்லாம் உள்ளம் மகிழக் கொடுத்து, உலகத்தில் பெருகும் மகிழ்ச்சியுடன் அவ் வப் பருவங்கள் தோறும் செய்யப்பெறும் செயற்பாடுகளை எல்லாம் சிறப்பாகச் செய்ய, வளரும் திருமகனாரான சீராளதேவர், தம் சிறப்பு மிகுந்த அடிகளில் மாலையாகக் கோத்த கிண்கிணிச் சதங்கை அசை யும்படி தளர்நடைப் பருவத்தை அடைந்தார். *** பருவமுறைப் பாராட்டு - செங்கீரை முதலாகச் சொல்லப் படும் பருவங்களில் செய்யப்பெறும் சிறப்புக்கள்.
சுருண்ட மயிர் நிறைந்த நெற்றியில் சுட்டியும், இரண்டு காதுகளில் குதம்பைகளும், திருக்கழுத்தில் பொருந்தும் கண்டசரமும், மார்பில் ஐம்படைத் தாலியும், கைகளில் ஒப்பில்லாத வயிரத்தால் ஆன சரிகளும், இடையில் பொன் அரைஞாணும், திரு வடிகளில் சதங்கைகளும் விளங்கத் தெருவில் ஒளிவிளங்க, வளரும் பிள்ளைத் திருவிளையாட்டினைச் சீராளதேவர் செய்து வந்தார். *** கண்ட சரம் - கழுத்தொடு விளங்கும் நாண். இது பொன் னாலாயது. ஐம்படைத் தாலி - திருமாலின் சங்கு, சக்கரம், வாள், தண்டு, வில் என்பன. சரிகள் - கை வளையல்கள்.
முறைமையாக வளர்கின்ற அவரின் மூன்றாம் ஆண்டில் மயிர் நீக்கும் மணவினையைச் செய்வித்துத், தந்தையாரும் தாயாரும் ஒப்பில்லாத சிறிய தோன்றலான மகனாருக்கு, மனம் மலர் வதற்குக் காரணமான சொற்களின் தெளிவையுடைய செழுங்கலை களைப் பயில்வதற்காகத் தம் பிறவிப் பிணிப்பு நீங்க வந்த அவரை ஐந்தாம் ஆண்டில் பள்ளியில் சேர்த்தனர். *** ஐந்தாம் ஆண்டில் பள்ளியிற் சேர்க்கும் மரபு, சண்டேசுவர நாயனார் வரலாற்றாலும் அறியப்படும்.
அந்நாளில் சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் அங்கு வந்தருள, முப்புரி நூல் அணிந்த மார்பையுடைய சிறுத்தொண் டர் முன்னாகச் சென்று எதிர்கொண்டு வரவேற்று, அழைத்து வந்து, நகருள் புகுந்து, தம் மனையில் இருக்கச் செய்து, அச்சீகாழித் தலைவ ரின் நலமும் பெருமையும் மிக்க திருவடிகளைப் போற்றி நலம் பெற்றார்.
குறிப்புரை:

சீகாழியினரின் தலைவரான ஞானசம்பந்தரும் அளவிடற்கரியதாய், மேன்மேலும் வளரும் அரிய பத்திமைப் பண் புடைய சிறுத்தொண்டருடன் பயின்று, அவரை உலகம் போற்றும் திருப்பதிகத்தால் பாராட்டிச் சிறப்புச் செய்து, தம் நட்பினராகும் பேற் றையும் வழங்கியருளி, இன்பமும் விருப்பமும் மிக அங்கு அமர்ந் திருந்தார். *** திருச்செங்காட்டங்குடிக்குப் பாலறாவாயர் அருளிய பதிகங்கள் இரண்டுள்ளன (தி. 1 ப. 61, தி. 3 ப. 63). இவற்றுள்ளும் பின்னைய திருப்பதிகத்தில் மூன்றாவது செய்யுள் காணக் கிடைத் திலது. தி. 1 ப. 61 10 ஆவது பாடலில், 'பொடிநுகரும் சிறுத் தொண்டர்க்கருள் செய்யும் பொருட்டாகக் கடி நகராய் வீற்றிருந்தான் கணபதியீச்சுரத்தானே' என்று சிறப்பிக்கிறார். தி. 3 ப. 63இல் பாடல் தொறும் சிறுத்தொண்டரைச் சிறப்பிக்கும் ஞானசம்பந்தர், அப்பதிகத் தின் முதற் பாடலில், 'செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய' என்று குறிப்பிடுகின்றார். மற்ற இடங்களில் எல்லாம் அவர்தம் சீர்மையும் நீர்மையும் விளங்கப் பலபடக் குறிக்கப் பெற்றுள்ளன. 'கன்னவில் தோள் சிறுத்தொண்டன்' (தி. 3 ப. 63 பா. 2), 'சீருலாம் சிறுத் தொண்டன்' (தி. 3 ப. 63 பா. 5), 'செருவடி தோள் சிறுத்தொண்டன்' (தி. 3 ப. 63 பா. 7), 'சிறப்புலவாச் சிறுத் தொண்டன்'(தி. 3 ப. 63 பா. 9) என்பன அவற்றுட்சில.
இவ்வாறாக நிகழ்ந்துவரும் சிறுத்தொண்டரின் திருத்தொண்டானது, உயர்ந்த திருக்கயிலாய மலையில் வீற்றிருக் கின்ற இறைவரின் திருவடிக் கீழ்ப் போய்ச்சேர, ஆனேற்றூர்தியை யுடைய இறைவர், தாமே அவர்தம் மெய்யார்ந்த அன்பை நுகர்ந்து அருள் புரிவதன் பொருட்டு, உள்ளம் மகிழும் வயிரவக் கோலத் துடனே திருமலையினின்று நீங்கி எழுந்தருளி வருவாராய்,
குறிப்புரை:

இதழ்களையுடைய கொன்றை மலரைச் சூடிய நீண்ட சடையையே அழகுபொருந்த, கருநீலக் கடலில் சேர்ந்து நீரை யுண்டு மேலே எழுந்த கரிய மேகத்தின் சுருள் போலத் தொடர்ந்து, நீண்ட தலைமயிராகக் காடு என அடர்ந்து, நெறிப்பும் அசைவும் உடையதாகச் செறித்துப் படரும் வரிசை கொண்ட கருங்குஞ்சிக் கொத்தைப் போல் ஆக்கி அழகுடையதாய்ப் பரப்பி முடித்து, *** திருச்சடையை மயிர்க்கொத்தாக ஆக்கி என்பதே இதன் கருத்தாகும். இதன் கருமை, நீரை முகந்த மேகத்தின் கருமையதாம். இம்மயிர் முடி சுருண்டு, இருண்டு, காடென அடர்ந்து, கருமணலின் நிரல் எனச் செறிந்து, அசைவுடையதாகி இருந்தது என ஆசிரியர் குறித்தருளுகின்றார். ஒரு மயிர் முடிக்கு இதனினும் அழகு அமைய இயலாதவாறு குறித்திருக்கும் நுண்மை அறிந்து இன்புறத்தக்கதாம். தொடர்பங்கி - தொடர்ந்து நீண்ட மயிர். குஞ்சி - ஆண்களின் தலை மயிர். கொந்தளம் - கொத்து.
மைக்குழம்பை மூழ்கச் செய்ததைப்போல், அழகு மிகும் கரிய மயிரான மேகத்திடையே எழுந்து தோன்றும் விண்மீன் களின் பரப்பைப் போன்று திரட்சியாய், வரிசையாய்ப் பல வண்டின் கூட்டங்கள் அருகே சூழ்ந்து ஒலிக்க நிலைபெறும் வரிசைகளில் தும்பை மலர்கள் விளங்க, *** மேற்கூறியவாறமைந்த திருமுடியில் தும்பை மலர்கள் விளங்குவன, மேகத்தினிடையே விண்மீன்கள் தோன்றுவனபோல் இருந்தனவாம். பம்பை - சுருண்டு விரிந்த மயிர். புஞ்சம் - திரட்சி. துஞ்சின் நுனி - நிலைபெறும் மயிர்ச்செறிவின் நுனி.
திருமுடியின் ஒரு மருங்கில், செருகும் மாலையில் தோன்றும் பிறைச் சந்திரனையே ஒளி பெருகும் சிறிய முழுமதி போலே ஆக்கி, மீண்டும் நெற்றியில் அணிந்ததைப்போல் விரியும் ஒளி பொருந்திய சிவந்த பவளக் கதிர்களை விரித்து வீசும் விளக்கமுடைய சுடர்த்திரு நெற்றியின்மீது, திருநீற்றின் ஒற்றைப் பொட்டு ஒளி வீசி விளங்க, *** இளம்பிறையை முழுமதியாக்கி வைத்தது போன்று, நெற்றியில் திருநீற்றின் பொட்டு விளங்கியது என்பது கருத்து. 'நீற்றின் பேரொளி போன்றது நீள்நிலா' (தி. 12 திருமலைச் சரு. தடுத்தாட். பா. 162) என ஆசிரியர், தாமே கூறியிருத்தலின் நிலவின் ஒளி, நீற்றின் ஒளிக்கு உவமையாயிற்று என அறியலாம். 'பெரியோன் தருக திருநுதலாகென' என வரும் பகுதிக்குச் சிவபெருமான் சூடிய பிறை இரண்டுகலை யுடையதாதலின், அதனை எட்டாம் பிறையாக்கித் தருக என அடியார்க்கு நல்லார் உரைத்த உரையும் ஈண்டு நினைவு கூரத் தக்கதாம்.
வெம்மையுடைய கதிரவன், விளக்கமான சந்திரன், நெருப்பு ஆகிய மூன்றும் தாம்தாமும் விளக்கமுறும் இடங்களுடன் ஒன்றாகக் கூடினாற் போல, அழகைத் தன் வயமாக்கும் செவியில், அழகான சங்குக் குழையை வளைத்து அணிந்து, அதனுள் செவ்வரத்தம்பூவைச் செறித்த தோடு, இருமருங்கும் சிறந்து விளங்க, *** கதிரவன், சந்திரன், தீ ஆகிய முச்சுடர்களும் இறைவற்கு முக்கண்களாக விளங்க, அவற்றின் ஒளிப்பரப்பு முறையே காதிலும், குழையிலும், மலரிலும் விளங்கலாயின என்பது கருத்து. மண்டலம் - வளைவு. 'பருதி பலவும் எடுத்து சுடர் பாலித்தாற் போலக் குலவும் மகரக் குழையும்' எனவரும் குமர குருபர அடிகளின் திருவாக்கும் நினைவுகூர்தற்குரியதாம்.
திருக்கழுத்தில் கொண்ட நஞ்சை மறைத்தருளும் பொருட்டுப் பாற்கடலில் தோன்றிய அமுதத்தின் குமிழிகளின் வரிசையாய் வாய்ந்த ஒளியுடைய வெள்ளிய திரட்சிகளின் தூய வடத்தை அணிந்ததுபோல, உள்ளத்துள் நினைப்பவரின் உடலும் உயிரும் உருகும்படி மிக விளங்கும் திருக்கழுத்திலே வெண்மையான பளிங்கு மாலை விளங்க, *** அமுதம் வெண்மையானது. ஆதலின் அமுதக் குமிழி எனப் பளிங்கின் வடம் இருந்தது என்றார். நஞ்சு - கறுப்பு. வெண்மை அதனை மறைத்தது.
சிவந்த கதிரவன் கடலில் குளிக்கும் சமயத்தில் தோன்றும் செவ்வான ஒளியை, அந்தி முதிர வரும் இருள் அடர்ந்த இராப்போது படர்ந்து வந்து சூழ்வதைப்போல், அழகிய பவளம் போன்ற மேனியின் மீது தம் பழைய யானைத் தோலைக் கொண்டு ஆக்கிய சட்டையின் அழகு விளங்க, *** சிவந்த கதிரவன் கடலில் குளிக்கும் சமயத்தில் தோன்றும் செவ்வான ஒளியை, அந்தி முதிர வரும் இருள் அடர்ந்த இராப்போது படர்ந்து வந்து சூழ்வதைப்போல், அழகிய பவளம் போன்ற மேனியின் மீது தம் பழைய யானைத் தோலைக் கொண்டு ஆக்கிய சட்டையின் அழகு விளங்க,
அடியாரிடத்தில் மேல் ஓங்கி எழும் அன்பானது தம் திருமேனியின் மீது அங்கங்கும் வடிவு கொண்டு வளைந்தாற் போல, எலும்பு மணிகளால் அமைந்த வெற்றி மாலையும், கோவை களும், கைகளுக்கு அணியும் கங்கணங்களும், இடுப்பில் அணியும் அரைஞாணும், கால்களில் அணியும் காலணிகளும் அணிந்த ஒன்றிய பேரொளி விளங்க, *** சன்னவீரம் - வெற்றிமாலை. சன்னவீரம், ஆரம், வடம் ஆகியவை மார்பில் அணியத்தக்கன. வளைச்சரி - வளை விளங்க : சரித்தல் - சலிப்பது; விளங்குவது. கடிசூத்திரம் - அரைஞாண். இவ் வணிகளனைத்தும் அடியவர்களின் அன்பு என வளைந்து இலங்கின.
ஒப்பில்லாத தொண்டரான சிறுத்தொண்டருக்கு, இவ்வுலகத்தில் வந்து அருள் செய்யும் பெருகிய அருளின் தன்மை யைக் கண்டு இறைவரின் திருவருளையே விரும்பிப் போற்றுவீர்! வளர்கின்ற அன்பின் வழியில் நிற்கக் கடவீர்! என்று மறைகள் குறிக் கொண்டு கூறுவன போலத், திருவடிகளின் மீதுள்ள சிலம்புகளின் ஒலி எல்லாத் திசைகளிலும் செல்லுமாறு ஒலிக்க, *** மறைஒலி எனச் சிலம்பொலிகள் இசைத்தன என்பதாம்.
நான்முகனின் மண்டையோட்டை எடுத்த இடக் கையினால், அணைத்த விளங்கும் ஒளியையுடைய மூவிலைச் சூலமா னது அழகிய தோள்களில் விளங்க, விளங்கி வீசும் ஒளியையுடைய வலத்திருக்கையிலே பிடித்த தமருகத்தின் ஒலி ஒலிக்க, முன்னைத் தவத்தால் பயன் பெறும் நிலமும் அடித் தாமரைகளைத் தாங்க, *** இடத்திருக்கையில் சூலமும், வலத் திருக்கையில் துடியும் விளங்க, நடந்தருளி வர என்பதாம்.
அருள் பொழியும் திருமுகத்தில் புன்முறுவலானது நிலவைப் போன்று குளிர்ந்த ஒளி வீச, மயக்கத்தை மிகச் செய்யும் மும் மலங்களின் வலியையும் போக்கும் கூரிய சூலம் வெயில் ஒளி வீச, உண்மைப் பொருளை விளக்கும் பெருகும் அன்பு மேலும் மேலும் தழைத்து ஓங்கி இவ்வுலகம் போற்ற, அறிவு விளக்கம் செய்யும் வளமையுடைய தமிழ்நாட்டில் உள்ள திருச்செங்காட்டங்குடியை அடைந்தார். *** இப்பதினொரு பாடல்களும் ஒருமுடிபின.
குறையாத பசியை உடையவரைப் போலத், தம்முன் வருபவர்களைப் பார்த்துச் 'சிறுத்தொண்டரின் இல்லம் எங்குள்ளது?' என்று கேட்டு அறிந்து, விரைவில் அங்கு வந்து, 'சிவபெருமானது தொண்டருக்கு எந்நாளும் சோற்றை அளிக்கின்ற தொண்டரான, வண்டுகள் மொய்க்கும் மலர் மாலையைச் சூடிய சிறுத்தொண்டர் இந்த இல்லத்தில் உள்ளாரோ?' என்று வினவ,
குறிப்புரை:

வந்து சேர்ந்து வினவுகின்றவர் மாதவரான அடியவரே என்று எண்ணிச் சந்தனத்தாதியார் என்ற அம்மையார், முன் வந்து, அவர்தம் திருவடிகளை வணங்கி, 'எல்லையில்லாத சிறப் புடைய அடியவரைத் தேடும் பொருட்டு அவர் வெளியே சென்றுள் ளார்; எம்மை ஆள்பவரான முதல்வரே! மனையகத்து எழுந்தருளுக!' என்று கூற,
குறிப்புரை:

(இறைவர்) அந்த அம்மையாரைப் பார்த்துப், 'பெண்கள் தனித்திருக்கும் இடத்தில் நாம் தனியே புகமாட்டோம்!' என்று உரைப்ப, அதைக்கேட்டு, அவர் அங்கிருந்து நீங்கிச் சென்று விடுவார் போல் தோன்றுகின்றார் என்று அச்சம் கொண்டு, விரைந்து, மனைத்தக்க மாண்பு உடையவரான திருவெண்காட்டு அம்மையார், உள்ளிருந்து மனையின் முன்வந்து, *** அற்றேல் காரைக்காலம்மையார் தனித்திருப்ப, அடியவ ராக வந்த இறைவர் அவரிடத்தில் சென்று உணவருந்தியது என்னை யெனில், அங்குத் தமிழ் நாட்டவராகவும், எளிய இனிய வயது முதிர்ந்த அடியவராயும் வந்தமையானும், தம் தீப்பசி நீங்க உணவு ஒன்றே தேவையாம் நிலையில் திருவுள்ளம் பற்றியமையாலும், அதனைத் தீர்த்தற்கு அம்மையார் ஒருவரே இருப்பினும் அமையுமாத லானும், அங்கு அவர் தனித்திருப்ப எழுந்தருளியது தகவாயிற்று. இங்கு அந்நிலைமைக்கு முற்றிலும் மாறானதாய் இருத்தலின், இவ் வாறு திருவுள்ளம் கொண்டாராயிற்று.
பேரவையை இடனாகக் கொண்டிருக்கும் இறைவ ரின் அடியவர்களைத் திருவமுது செய்விக்கின்ற நியமம் உடையவர், அச்செயலை முடிப்பதற்கு, 'எம்பெருமானே! இன்று அடியார் எவரை யும் காணாமையால் தேடிச் சென்றுள்ளார், புதிதாய் நீங்கள் எழுந் தருளி வரும் இத்திருக்கோலத்தைக் கண்டால் தம் பேறே என்று மிக வும் மகிழ்ச்சி அடைவார், இனிக்காலம் தாழ்க்க மாட்டார்',
குறிப்புரை:

'இப்பொழுதே வந்து சேர்வார். இங்குத் தங்கி யிரும்' என்று சொல்ல, 'ஒப்பற்ற இல்லறத்தைத் தவறாது நடத்துபவரே! யாம் வடநாட்டில் உள்ளோம். சொல்வதற்குரிய சிறப்புடைய சிறுத் தொண்டரைக் காணும்பொருட்டு இங்கு வந்து அடைந்தோம், எவ்வகையாலும் அவர் இல்லாதபோது இங்கே நாம் இருக்க மாட்டோம்!' என்று கூறியருளி, *** முன்னிருந்த தோழியரின் மொழிக்கு அடியவர் இணங்காமை கேட்ட நங்கையார், உள்ளிருந்து முன்வந்து, தாமே அவருக்கு முழுமையாகவும், இனிமையாகவும் விடை பகர்ந்தது அவர்தம் பொறுப்புணர்வையும், விருப்புணர்வையும் காட்டி நிற்கின் றன. இந்நிலையில் வந்தருளிய வயிரவரும், வரலாற்றின் எதிர் நிகழ்வை உளங்கொண்ட நிலையில் வழங்கிய விடையும் உளங் கொளத்தக்கதாய் அமைந்துள்ளது.
நெற்றிக்கண்ணை மறைத்தவாறு வந்த அவர், 'கணபதியீச்சரத்தில் அழகிய மலர்களையுடைய திருவாத்தி மரத்தின் கீழ்ச் சென்று அமர்ந்து இருப்போம், அவர் மீண்டு இங்கு வரும் பொழுது, அங்கு நாம் இருக்கும் தன்மையினைச் சொல்வீராக!' என்று கூறி, இறைவர் திருவாத்தி மரத்தின் அடியைச் சேர்ந்து, அங்கு விரும்பி எழுந்தருளியிருந்தார். *** இவ்வாறு பாடல்களும் ஒருமுடிபின.
சிறப்பு மிகுந்த தவத்தையுடைய சிறுத்தொண்டர், கங்கையாற்றைத் திருச்சடையிலுடைய சிவபெருமானின் அடியவரை எங்கும் தேடிக் காணாது, மீண்டும் இல்லத்தை அடைந்து, அளவு கடந்த அன்பினையுடைய மனைவியாருக்கு அதைச் சொல்லி வருந்த, அவரும் உலகம் அன்புகூரும் கோலம் கொண்ட ஒருவர் அங்கு வந்து சென்றவாற்றை அவருக்குச் சொன்னார்.
குறிப்புரை:

'அடியேன் வாழ்ந்தேன்! அவர் எங்கு இருக்கின் றார்? சொல்வாயாக!' என்று வினவ, அவ்வம்மையாரும் கூறுவா ராய்க் ' கூர்மையுடைய சூலத்தையும், மண்டை ஓட்டையும் கையிற் கொண்ட அவர், நாம் வடநாட்டில் உள்ளோம்' என்றார்: அவர் வள மான துடியை ஒரு கையில் பிடித்த வயிரவக் கோலத்தவர்: நாங்கள் இல்லத்தில் எழுந்தருளி இருக்குமாறு சொல்லி வேண்டவும், இங்குத் தங்கி இராமல் சென்று கணபதியீச்சரத்தில் மணம் பொருந்திய திருவாத்தி மரத்தின் நிழலில் தங்கி உள்ளார்.
குறிப்புரை:

என்று மனைவியார் கூற, அதைக் கேட்ட சிறுத் தொண்டர், மேன்மேல் எழுந்த விருப்பினால் விரைவாகச் சென்று, அவருடைய திருவடிகளை வணங்கி நின்றார். வணங்கி நின்ற சிறுத் தொண்டரைப் பார்த்து, 'நீர் தாமோ பெரியவராய்ச் சொல்லப்படுகின்ற சிறுத்தொண்டர்' எனத் திருவாய் மலர்ந்தருள, அவர் இறைவரை வணங்கிச் சொல்வாராய்,
குறிப்புரை:

'திருநீற்றுத் திருத்தொண்டர்களின் முன் சென்று போற்றி வழிபடவும் தகுதியற்றவனாயினும், அடியேன் அடியவர்க ளின் அருளால் அப்பெயருடையவன்' எனக் கூறுவர், குற்றம் தீர்ந்த அடியவரை அமுது செய்விப்பதற்காகப் பழமை வாய்ந்த இப்பதியில், பெருவிருப்பத்தால் எங்கும் தேடியும் கண்டிலேன், முன்பு செய்த தவப்பயனால் உம்மைக் கண்டேன்,
குறிப்புரை:

'அடியவனின் இல்லத்தில் தாங்கள் எழுந்தருளி வந்து திருவமுது செய்தல் வேண்டும்!' என்று சிறுத்தொண்டர் வேண்ட, நீண்ட திருமாலும் அறிய மாட்டாத அவ்வடியவர் தாமும், 'விளங்கும் தவத்தை உடையவரே! உம்மைக் காண்பதற்காக வந்தோம்! வடநாட்டில் உள்ளோம், எம்மை அன்புடன் உண்ணச் செய்ய இயலாது, அஃது அரியதாகும்! ஆதலால் உம்மால் செய்ய ஒண்ணாது' என்று கூறியருள,
குறிப்புரை:

'அடியேன் எண்ணிப் பாராது கூறமாட்டேன். கண் நிறைந்த அழகையுடைய நிறை தவத்தவரே! தாங்கள் திருவமுது செய்யும் இயல்பை, விரைவாக அமைப்பதன் பொருட்டுக் கூறியருள் செய்வீராக! குளிர்ந்த கொன்றை மாலையைச் சூடிய இறைவரின் அடி யார்கள் கிடைக்கப் பெற்றால், தேடினும் கிடைக்காதனவும் கிடைக்க உள்ளனவாகும், எனக்கு அருமை இல்லை' என்று சொன்னார். *** இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.
'அரியது இல்லை' என்று சிறுத்தொண்டர் கூறக் கேட்ட அமையத்தில், அழகைச் சொரிகின்ற பெரிய வயிரவக் கோலத்துடன் வந்துள்ள இறைவர், 'அன்புத் தொண்டரே! நாம் ஆறு திங்களுக்கு ஒருமுறை, பசுவை வீழ்த்தி அமுது இட உண்பது வழக்க மாகும். அங்ஙனம் உண்பதற்குரிய நாளும் இன்றே யாம். ஆனால் அவ்வாறு உண்பித்தல் உமக்கு அருமையுடையதாகும்!' என அருள் செய்தார். *** ஓர் இருது, இரு திங்களை நிலைக்களனாகக் கொண்டது. மூவிருது ஆறு திங்கள். ஈண்டுப் பசு என்றது உயிர் என்ற பொதுப் பொருளில் வந்துள்ளது.
அதுகேட்ட சிறுத்தொண்டர், 'மிகவும் நல்லது. அடியேன், ஆடு, எருமை, பசு என்ற மூன்று நிரைகளையும் பெற்றி ருக்கின்றேன், எனக்கு இங்குக் குறைவில்லை. நஞ்சை உண்ட சிவ பெருமானின் அன்பராம் தாங்கள், உண்டற்குரிய அப்பசுதான் இன் னது என்றருளின், அடியேன் விரைவாகச் சென்று உணவு சமைத்து அதற்குரிய காலம் தவறாது வருவேன்!' எனக் கூறிக் கை தொழுதார். *** முந்நிரை - பசு, ஆடு, எருமை ஆகியன.
அடிமைப் பண்பு மிகுந்த சிறுத்தொண்டரின் அன்பைக் கண்டு, பயிரவக் கோலத்தராய் வந்த சிவபெருமானும், 'அடியாரிடம் அன்பு உடையவரே! நாம் உண்பதற்குக் கொல்லப் படுகின்ற பசுவும் மானிடப் பசுவாகும். ஐந்து வயதாயும், உடற் குறையற்றதாயும் இருத்தல் வேண்டும். அதுவே யாம் உண்பதாகும்; நோய் செய்யும் புண்ணிலே வேலைப் பாய்ச்சியதைப் போல், மேலும் கூறத்தக்கது ஒன்றுண்டு!' என்று உரைப்பவர், *** 'புண்ணுலாம் பெரும்புழையிற் கனல்நுழைந்தால் எனப்புகுத லோடும்' (கம்ப. கையடை. 12) எனக் கம்பர் கூறும் இடனும் ஈண்டு எண்ணற்குரியதாகும்.
அதைக் கேட்ட சிறுத்தொண்டர் 'எனக்கு ஏதும் அரியது இல்லை, விரைவாய்க் கூறியருளுக' என்று உரைக்க, இறை வரும், 'ஒரு குடிக்கு ஒரே மகனாக உள்ள அவனைத் தந்தை அரிய வும், தாய் பிடிக்கவும், அந்நிலையில் அவர்கள் இருவரும் உளம் உவந்து அமைத்த கறியே நாம் உண்பதாகும்' என உரைத்தருளினார்.
குறிப்புரை:

அவ்வுரையையும் முதல்வர் உரைத்தருளக் கேட்ட சிறுத்தொண்டர், 'எம் இறைவரான தாங்கள் திருவமுது செய்யும் பேற்றைப் பெற்றால் எனக்கு இதுவும் அரியதன்று' எனக்கூறி, விரைவாக அவரிடம் விடை பெற்று, மிக்க மகிழ்ச்சியால் ஆசை யோடும் அவரது தேன்பொருந்திய மென்மையான தாமரையனைய திருவடிகளை வணங்கிச் சென்று, தம் வீட்டை வந்தடைந்தார்.
குறிப்புரை:

அன்புமிக்க பெருங்கற்பையுடைய பெண்ணான திருவெண்காட்டு நங்கையார், சிறுத்தொண்டரின் வரவை எதிர்நோக்கி வாயிலின் முன் நின்று இன்பம் மிக மலர்ந்திருந்த அவரது முகத்தைப் பார்த்து, அவருடைய திருவடிகளில் வணங்கிப் பின்பு, தம் கணவரான அவரை முகம் நோக்கி, அத்தவ முனிவரைப் பற்றி வினவ,
குறிப்புரை:

வள்ளல் தன்மையுடைய சிறுத்தொண்டரும், மனைவியாரான திருவெண்காட்டு நங்கையைப் பார்த்து, 'வந்திருக்கும் மாதவர், ஒரு குடும்பத்துக்கு ஒரு மகனாக, ஐந்து வயது உள்ளவனாக, உறுப்புகளில் குறைவு ஒன்றும் இல்லாதவனாக இருக்கும் மைந்தனைத் தாய் பிடிக்கத் தந்தை மகிழ்வுடன் அரிந்து அமுது சமைக்கப் பெற்றால், உள்ளம் மகிழும்படி உணவு உண்டருளலாம் என இசைந்துள்ளார்' என்று இயம்பினார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
அரிய கற்பையுடைய மனைவியார் அங்ஙனம் உரைத்த அவரைப் பார்த்து, மேலும் உரைப்பாராய்ப் 'பெருமை யுடைய வயிரவத் தொண்டர் உணவு உண்ணப் பெறுவதற்கு இங்கு உரிய வகையினால் அமுது அமைப்போமானால் ஒரு குடும்பத்துக்கு ஒரு மகனாகிவரும் அந்தச் சிறுவனை நாம் பெறுவது எங்ஙனம்?' எனக் கூறி வணங்கவும்,
குறிப்புரை:

அதைக்கேட்ட சிறுத்தொண்டர் மனைவியாரின் முகத்தைப் பார்த்து, 'இத்தகைய தன்மை பொருந்திய மைந்தர்தமை, அவ்வவர் எண்ணம் நிரம்பும் அளவு நிதியம் அளித்தால் கொடுப்பவர் களும் இருப்பர்; ஆனால் நேர் நின்று, தம் மைந்தனைத் தந்தையும் தாயுமாக அரிபவர் இவ்வுலகத்தில் இல்லை! எனவே, இனியும் காலம் தாழ்த்தாது இங்கு என்னை உய்யச் செய்வதற்கு நீ பெற்ற மகனை நாம் இதன் பொருட்டு அழைப்போம்!' என உரைத்தார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
என்று கணவர் உரைக்கவும், அதற்கு அவ்வம் மையாரும் இசைந்து, 'எம் இறைவரின் தொண்டர் இன்று காலம் தாழ்க்காது அமுது செய்யப்பெற்று அவர்தம் மகிழ்ச்சி பொலியும் திருமுகத்தை நாம் காண்பது இங்கு செய்யத்தக்கதாகும்!' என விரும்பி, கணவரைப் பார்த்து 'நம்மைக் காக்க வரும் மணி போன்ற மகனைப் பள்ளியில் போய் அழைத்துக் கொண்டு வாருங்கள்' என்று உரைத்தார். *** 'இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு' (குறள்,224), 'ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்' (குறள்,228) என்பனவாய குறட் பாக்கள் நினைவுகூர்தற்குரியன.
அன்பையுடைய மனைவியார் மேற்கூறியபடி உரைக்க, கணவனாரான சிறுத்தொண்டரும் குற்றம் நீங்கப் பெற்ற எல்லாப்பேறும் அப்போதே பெற்று விட்டவரைப் போல் மகிழ்ந்து, இறைவருக்கு அங்குத் திருஅமுதாக ஆக்குதற்கு, நல்ல மென்மையான மழலை மொழி பயிலும் மைந்தர், கல்வி பயிலச் சேர்ந்துள்ள பள்ளியி னின்றும் உடன் கூட அழைத்து வருவதற்கு விரைவாகச் சென்றார்.
குறிப்புரை:

சிறுத்தொண்டர் பள்ளியை அடையவும், காலில் அணிந்த சதங்கை மணிகள் ஒலிக்கப் பிள்ளை அவர் எதிரே ஓடி வந்து தழுவிக் கொள்ள, அவனை எடுத்துத் தோள்மீது வைத்துப் பொருந் தும் படி அணைத்துக்கொண்டு, மீண்டு வந்து தம் இல்லத்துக்குள் புகுந்திடவும், நற்குலத்தில் தோன்றிய திருவெண்காட்டுநங்கையார், வள்ளலார் சிறுத்தொண்டரின் முன்பு போய், அம்மைந்தனை எதிரில் தாம் வாங்கிக் கொண்டு,
குறிப்புரை:

அம்மைந்தனின் தலைமயிரைத் திருத்தி, முகத்தைத் துடைத்துக், காதணியிலும், அரைஞாணிலும் படிந்த தூசியைப் போக்கி, அணிந்த கலவைச் சாந்து அழிந்ததற்கு வருந்திக், கண்ணில் அணிந்த மையினையும் கண்ணில் படாமல் ஒழுங்காகப் பக்கத்தில் அமைய ஒதுக்கிப், பஞ்சும் அஞ்சத்தக்க மென்மையுடைய அடியையுடைய அம்மையார், அன்புடன் எடுத்து நீராட்டிக், குறையாத கோலத்தைச் செய்து, கணவரான சிறுத்தொண்டரின் கையிலே அம்மைந்தனை அளித்தார். *** கொட்டை - காதணி. 'அரைநாண்' எனப்பின் வருதலின் கொட்டை என்பது பஞ்சைக் குறித்தலும் ஆம்.
திருத்தொண்டருக்கு ஆக்கும் அமுதுக்கு உதவும் பொருள் என்பதால் அச்சம் கொண்டு அரிய மைந்தனை உச்சிமோவா ராய், மார்பில் அணைத்து முத்தம் தாராராய்க், குற்றம் இல்லாத திருத் தொண்டராம் புனிதரான அடியவருக்குக் கறியை ஆக்குதற்கு விரும் பும் உள்ளத்தால், அடுக்களையில் மேவாராகி வேறு தனியிடத்திலே கொண்டு செல்பவராய், *** பொச்சம் - குற்றம். அடுக்களை - சமையல் செய்யும் இடம்; அது மாதவருக்கு அமுதாக்குதற்குரிய இடம் ஆதலின், அங்கு அச்செயலைச் செய்யலாகாது என வேறிடம் கொண்டனர். இந்நிகழ் வுகள் கண்களில் நீர் மல்கச் செய்யும்.
ஒன்றுபட்ட உள்ளம் கொண்டு அவ்விருவரும் உலகத்தவர் இதன் உண்மை இயல்பை அறியமாட்டார் என்று நினைத்து, மறைவான இடத்தை எய்திப் பிள்ளையைப் பெற்ற தாயார் திருவெண்காட்டு நங்கையார் செழுமையான கொள்கலங்களை நன்றாய்க் கழுவி எடுத்துக்கொண்டு செல்ல, நல்ல மைந்தனாரை எடுத்து, உலகியலை முற்றும் வென்ற தந்தையாரான சிறுத்தொண்டர் தலையைப் பிடித்துக் கொள்ள, மெய்த் தாயாரான அம்மையார் விரைந்து,
குறிப்புரை:

குழந்தையின் இனிய ஒலிதரும் கிண்கிணி அணிந்த கால்கள் இரண்டையும் மடியின் இடையே பிறழாமல் அமிழ்த்தி வைத்துக்கொண்டு, கொவ்வைக் கனியைப் போன்ற வாயையுடைய மகனின் கைகள் இரண்டையும் தம் கையால் பிடிக்க, அவ்வன்பின் சிறுவனும் தம் பெற்றோர் தம்மை மிகவும் அணைத்து மகிழ்ச்சி கொள்கின்றார்கள் என்று மகிழ்ந்து நகைக்க, ஒப்பில்லாத பெருமை யுடைய மகனாரைத் தந்தையாரான சிறுத்தொண்டர் வாள் கொண்டு தலையை அரிவார்,
குறிப்புரை:

அத்தந்தையார், 'ஒப்பில்லாத பெருமை மிகுந்த மகன், மெய்யாம் தன்மையை எனக்கு அளித்தான்' என்று பொருந்திய மகிழ்ச்சியடைய, அவருடைய மனைவியாரான அம்மையாரும், 'கணவனாரின் அரிய உயிரை எனக்கு இம்மைந்தன் அளித்தான்' என்று மிகவும் மனம் மகிழ, இங்ஙனம் இருவருள்ளமும் பெரு மகிழ்ச்சி பொருந்த இவ்வரிய செயலைச் செய்தனர். *** மெய்யாம் தன்மை - மெய்ம்மை பெறுந்தன்மை : மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிதரும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தலாதலின் அன்னதாயிற்று. இச் செயற்கு ஊறுநேரின் கணவர் உயிர் வாழார். அவ்வூறுநேராமை காத்தவன் மைந்தன் ஆதலின், 'கணவனார் அருமையுயிரை எனக் களித்தான்' என்றார் அம்மையார். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.
அறுத்து எடுத்த தலையின் இறைச்சி, உணவுக்கு ஆகாது எனக் கழித்து, அதை மறைத்து ஒதுக்கும் பொருட்டுச் சந்தனத் தாதியார் என்ற மங்கையின் கையிலே அளித்து, மற்ற உறுப்புகளின் இறைச்சி எல்லாவற்றையும் கொத்தியும், அறுத்தும், எலும்பினுள்ளே உள்ள மூளைப் பகுதியைத் திறந்து எடுத்து இட்டும், கறியாக்குதற்கு வேண்டும் பலவகையான காய வகைகளை அமைத்துக் கூட்டியும் விரைவில் அமுது சமைப்பாராய், *** கறிக்கு வேண்டும் பலகாயம் - கறிக்குக் கூட்டப்படும் பெருங்காயம், சோம்பு, இலவங்கப்பட்டை முதலியன என்பர்.
மணம் கமழும் மலர்களை அணிந்த கூந்தலை யுடைய அம்மையார், அவற்றை ஒரு கலத்தில் வைத்து அடுப்பிலே ஏற்றி, உள்ளம் மகிழ்ந்து சமைத்த கறியைப் பக்குவம் அறிந்து அடுப்பினின்றும் இறக்கி வைத்து, வேறு பல கறிகளையும் சமைத்து, நன்றாகச் சோற்றையும் விரைவில் சமைத்து, தாம் சமைத்து முடித்ததைத் தம் கணவனாருக்கு உரைத்தார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
தம்மை அடிமையாக உடைய இறைவர் திருவமுது செய்வதற்கு, அவர் அருளியவாறே அமைத்தமைக்குப் பெரிதும் மகிழ்ச்சியுற்று, அம்மகிழ்ச்சி மீதூர்வால், விடைமீது வருபவரான சிவ பெருமானின் தொண்டரான சிறுத்தொண்டர் விரைந்து சென்று, மென்மையான மலர்களில் வண்டுகள் ஒலித்தற்கு இடமான திரு வாத்தியின் கீழ் வீற்றிருந்தருளிய தூயவரான வயிரவரிடம் சென்றார்.
குறிப்புரை:

இறைவரின் திருமுன்பு சென்று வணங்கி, அன்ப ரான சிறுத்தொண்டர் சொல்லத் தொடங்கியவர், 'அடியேனிடத்து எழுந்தருளித் தாங்கள் அமுது செய்தருள வேண்டும்; அடியவனின் அன்பிற்கு இணங்கிப் பசித்திருந்து, இதுவரைக் காலம் தாழ்க்க நேர்ந்தது என்றாலும், தங்கள் ஆணையின்படி சமைத்துள்ளேன். அடியவனின் விருப்பப்படி எழுந்தருள வேண்டும்' என்று சொல்லி, மேலும் கூறுபவராய்,
குறிப்புரை:

'இனிச் சிறிதும் காலம் தாழ்க்காது எழுந்தருளி உணவு உண்டருளல் வேண்டும்!' எனக் கூறி வணங்கக் கழுத்தில் உள்ள நஞ்சினை மறைத்தும், நெற்றியில் உள்ள கண்ணை மறைத்தும் வந்தவரான இறைவர், 'நிறைந்த பெருமையுடைய சிறுத்தொண்டரே! செல்வோம்!' என்று அருள, வறியவனான ஒருவன் சங்கநிதி, பதுமநிதி என்ற இரண்டையும் பெற்று மகிழ்ந்தாற்போல, உடன் அழைத்துக்கொண்டு தம் இல்லத்துள் புகுந்தார்.
குறிப்புரை:

அங்ஙனம் இல்லத்துள் புகுந்தருளிய அளவில் மனைவியார் அம்மாதவத்தவரின் முன்வந்து எதிர்கொண்டு அழைத் துச் சென்று, திருவடிகளில் விழுந்து வணங்கி, மணம் கமழும் மலர் மாலைகளும், முத்தால் இயன்ற மாலைகளும் தொங்கவிடப்பெற்ற தால் முற்றும் அழகுபடுத்திய அந்த இல்லத்தில், மணமுடைய மலர் மாலைகள் பரப்பிய இருக்கையில் அமர்ந்தருளுமாறு வேண்டி, மணமுடைய நீர் நிறைந்த கரகத்தை எடுத்து ஏந்தி நின்று நீரை வார்க்க,
குறிப்புரை:

தூய்மையான அந்நீரால், சிறுத்தொண்டர், இறைவ ரின் திருவடிகளை விளக்கி, அங்ஙனம் விளக்குவதால் பெற்ற நீரைத் தலைமீது நிறையத் தெளித்துக்கொண்டு, இன்பம் பொருந்திய மனை யின் எப்பக்கத்தினும் வீசி இறைத்து, மணமுடைய மெல்லிய மலர்கள் கொண்டு போற்றியுரை செய்து, சந்தனக் கலவை சாத்திப், பொருந்திய வாறு நறுமணமும் ஒளிவிளக்கும் காட்டி, அடியவருக்கு ஆற்றத்தக்க வழிபாட்டு முறைகளை எல்லாம் செய்து வணங்குவாராய்,
குறிப்புரை:

குளிர்ந்த பிறைச் சந்திரனைச் சூடிய சடையை விரித்த, மலர்களைச் சூடிய, தலைமயிரை உடைய வயிரவராம் தூய பெருமானைச் சோற்றையும் கறிவகைகளையும் படைக்கும் வகையை அழகிய மாதராரும் கணவனாரும் வணங்கி, 'இன்னவாறு என்று அருள் செய்ய வேண்டும்' என்று வேண்ட, அவர் தாமும் 'இனிய சோறு உடன் கறி வகைகளையும் ஒருசேரப் படைப்பீராக!' என்று சொல்ல,
குறிப்புரை:

பண்பு விளங்குமாறு உண்கலத்தை விளக்கி, அதனைப் பாவாடையின் மேல் வைத்து, அமுது வகைகள் வெவ் வேறாக நன்கு தெரியும்படி செந்நெல்லரிசியான செழுஞ் சோற்றையும் கறிவகைகளையும் நிரல்பட முன்னே வைத்து, அந்தப் பரிகலத்தை எடுத்து நிலையான முக்காலியின்மேல் விரித்த வெண்மையான ஆடைமீது வைக்க, குற்றம் அற்றவரான இறைவர் பார்த்து, அப்போது கூறியருளுவாராய்,
குறிப்புரை:

'யாம் சொன்ன முறையில், பசுவினது தொடர்ந்த உறுப்புக்கள் எல்லாவற்றையும் கொண்டு சுவைபெறச் சிறப்பாக அமைத்தீர்களோ?' என்று வினவ, அன்னம் போன்ற அம்மையார், 'தலை இறைச்சி திருவமுதுக்கு ஆகாது எனக் கருதி அதனை நீக்கி னோம்' எனக் கூற, அடியார்களின் இடர்களை எல்லாம் முற்ற நீக்கு பவராய இறைவர் 'அதனையும் நாம் உண்பது ஆம்' என்றருளினார். *** இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.
உள்ளம் கலங்கிய சிறுத்தொண்டர், மனைவி யாருடன் சேர்ந்து மனம் தடுமாறச் சந்தனத் தாதியார், 'அந்தத் தலையின் இறைச்சியானது அருள் செய்ய வந்த திருத்தொண்டர் உணவு உண்ணும் பொழுது நினைக்க நேரிடும் என்று எண்ணியே முன் உணர்வால் முன்னமேயே அதனைக் கறியமுதாக அமைத்துள் ளேன்!' எனக் கூறி எடுத்துக் கொடுக்க, அவர்கள் முகம் மலர்ந்தனர்.
குறிப்புரை:

சந்தனத் தாதியார் தந்த தலை இறைச்சியைப் பெற்று, மகிழ்ந்து, படைத்தபின்பு, வணங்கி நின்ற தொண்டரைப் பார்த்து, மாதவர்தாமும், 'இப்போது தனித்து உண்ண எமக்கு இய லாது, சிவனடியார் எவரேனும் இப்பக்கத்தில் இருக்கக் கூடியவரை அழைத்து வருவீராக!' என்று அருளச், சிறுத்தொண்டர் மனம் வருந்திக், 'கெட்டேன். இவர் உணவு உண்பதற்கு இதுவோ இடையூறாய் வருவது?' என நினைவாராகி,
குறிப்புரை:

இல்லத்திற்கு வெளியே சென்று தேடியும் இறைவன் திருவருட் செயலால் எங்கும் அடியவரைக் காணாராய், முகத்தில் மிகவும் வாட்டம் கொண்டு திரும்பி வந்து, முதல்வருக்குச் சொல்லுப வராய், 'இகத்தினும் பரத்தினும் இனியவரான சிவனடியார்களைத் தேடியும் காணேன், அடியேன் அறியேனாயினும் உலகத்தில் திருநீறு இடுவார்களைப் பார்த்து நானும் திருநீற்றை இடுவேன்!' எனத் தாழ்ந்து வணங்க, *** சிறுத்தொண்டர், தம்மை யடியார் என எண்ணாது, திருநீறிடுவார் தமைக் கண்டு யானும் இடுவேன் என்றது அவர்தம் பணிவுடைமையைக் காட்டுகிறது. சிவனடியார்கள் எவரையும் காணாமையின், தாமே அந்நிலையிலிருந்து உண்ணலாமோ என அவர்தம் குறிப்புணரவும் நின்றது.
அதைக் கேட்ட அம்மாதவர், 'உம்மைப் போல் திருநீற்றைச் சிறப்பாய் இட்ட அடியவரும் உளரோ? நீவிர், எம்முடன் இருந்து உண்பீராக!' என்று சொல்லி, செம்மை பொருந்திய கற்பை யுடைய திருவெண்காட்டு நங்கையை நோக்கிப் 'பரிகலம் திருத்தி விரும்பத்தக்க இறைச்சியும் சோறும் ஆகிய இவற்றின் மற்றப் பகுதியையும் இவருக்குப் படைப்பீராக' என்று இறைவர் ஆணையிட, அவரும் அவ்வாறே படைத்தனர். இறைவரை உண்பிக்க வேண்டி அவர் விரைந்து உண்ணத் தொடங்க, அப்போது தடுத்தருளி,
குறிப்புரை:

'ஆறு திங்கள் கழிய நாம் ஒருமுறை உண்போம், நீவிர் ஒவ்வொரு நாளும் உண்பீர்! அங்ஙனமாக நாம் உண்பதற்கு முன் நீவிர் உண்ணப் புகுந்தது ஏன்? நம்முடன் இருந்து உண்பதற்கு ஒப்பில்லாத மகனைப் பெற்றீரானால் அவனையும் இப்போது அழையும்!' என்று அம்மாதவர் கூற, அங்ஙனம் கூறிய முதலும் இறுதியும் இல்லாத இறைவருக்குச் சிறுத்தொண்டர், 'அவன் இப்போது இங்கு உதவான்' என்று விடையளித்தனர். *** இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.
'அவன் இங்கு வரின் நாம் உண்ண முடியும். ஆதலால் அவன் வருகையை நாடி அழையும்!' என்று இறைவர் அருள, சிறுத்தொண்டர் அதைத் தவிர்க்க இயலாதவராகித் தலைவ ரான இவ்வடியார் உணவு உண்டருள இங்கு நாம் என்ன செய்தால் முடியும்? என்று ஏங்கியவாறு, விரைவாய் எழுந்து, இறைவரின் அருளா ணையின் வழியில் நின்று, மலர்சூடிய கூந்தலையுடைய அம்மையா ருடனே, வீட்டின் புறத்தே சென்று, அழைக்கத் தொடங்கும் பொழுது,
குறிப்புரை:

உலகத்தில் என்றும் நிலைபெறும் புகழையுடைய சிறுத்தொண்டர், 'மகனே! வருவாய்' எனக் கூவி அழைத்தார். தலைவர்தம் ஆணைவழி நிற்கும் அம்மையாரும், தாமும் அழைப் பாராய், 'சிவந்த மணியே! சீராளா! சிவனடியார் நாம் உய்யும்படி உடன் உண்பதற்கு அழைக்கின்றார். வா!' என்று அழைத்து ஓலமிட,
குறிப்புரை:

இறைவர் அருளால், அழைக்கும் ஒலிகேட்டுப் பள்ளியினின்றும் ஓடி வருபவனைப் போல எதிரே ஓடிவந்த ஒப்பில் லாத அழகுடன் விளங்கிய, தன் மகனை அம்மையார் எடுத்துத் தழுவிக் கொண்டு, கையால் அணைத்துக் கணவனின் கையில் தர, 'முப்புரங்க ளையும் எரித்த இறைவனின் தொண்டர் உணவு உண்ணப்பெறும் பேற்றைப் பெற்றோம்' என்று மகிழ்ச்சியுடன் விளங்கினார். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
அங்ஙனம் வந்த மகனை அழைத்துக் கொண்டு இறைவரை உண்ணச் செய்யும்பொருட்டு விரைந்து வந்தவர், அதற்கு முன்னமேயே வயிரவராக வந்த முதல்வர் அவ்விடத்தினின்றும் மறைந்தருள, அவரைக் காணாமல் உள்ளம் கலங்கித் திகைப்படைந் தார்; விழுந்தார்; எழுந்தார், அச்சமுற்றார். வெந்த இறைச்சிக் கறியை யும் பரிகலத்தில் காணாதவராய்த் திடுக்கிட்டார்.
குறிப்புரை:

'சிவந்த மேனியும் கரியமுடியும் செழிய போர்வை யும் கொண்ட வயிரவர், நாம் உய்யும்படி உணவு உண்ணாமல் எங்கு ஒளிந்தார்?' என்று தேடியவராகி, மயங்கி வெளியே வர, மறைந் தருளிய அவ்வயிரவர் தாமே, மலைமகளாரான உமையம்மையா ருடனும் சரவணப் பொய்கையில் வளர்ந்த திருமகனாரான முருகப் பெருமானொடும் அணைவாராகி,
குறிப்புரை:

சிவபூதக் கணத்தலைவரும், முனிவரும், தேவரும், வித்தியாதரரும் முதலாக உள்ளவர்கள் போற்றி செய்ய, இனிய கறியையும் உணவையும் அமைத்த அவர்கள் காணும்படி, நீண்ட விண்வெளியில் ஒப்பில்லாத வெண்மையான விடையின்மீது வெளிப் பட்டு எழுந்தருளிக் குளிர்ந்த வெண்மையான சந்திரனைச் சூடிய திருமுடி அசைய, பரந்த அருள் நோக்கத்தை அருளினார். *** தாய் தந்தையரொடு தனயரும் சேர, இவ்வரிய செயல் நிகழ்ந்திருத்தலின், இறைவரும் தையலோடும் சரவணத்துத் தனயரோ டும் காட்சியருளினார். யார் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் என எண்ணுமாறு நிகழ்ந்த இவ்வரிய அருளிப்பாடும், இவ்வருந்தொண்டர் குடும்பத்திற்கே வாய்த்தது. குடி முழுதாண்டு வாழ்வற வாழ்வித்த கருணைப் பெருக்கு ஈதாம்.
அன்பின் உறைப்பினால் உலகியல் வழிப்பட்ட உணர்வை வென்ற சிறுத்தொண்டரும், அவர் தம் நெஞ்சொத்த மனைவியாரும், மைந்தரும் தம்முன்பு வெளிப்பட்டுத் தோன்றிய பெருவாழ்வான சிவபெருமானின் காட்சியை முற்றும் கண்டு, தம் வயமிழந்து, அக்காட்சியின் அருள்வயமாய் நின்று, எலும்பும் உள்ளமும் கரைந்து உருக விழுந்தனர்; எழுந்தனர்; போற்றினர். இறைவர் அப்பெருமக்களுக்கேற்ற தகுதிப்பாட்டால் அருள் செய்வாராய்,
குறிப்புரை:

கொன்றை மலரைச் சூடிய சடையை உடைய சிவபெருமானும், அவர்தம் இடமருங்கை இடமாகக் கொண்ட உமை யம்மையாரும், வெற்றி பொருந்திய நீண்ட வேல் ஏந்திய மைந்தரான முருகப் பெருமானும், தம் மணமுடைய தாமரை மலர் போன்ற சேவடி களின் கீழ் விழுந்து எழுந்து போற்றி நிற்கும் சிறுத்தொண்டரையும் திருவெண்காட்டு நங்கையாரையும் மகனாரான சீராள தேவரையும் சந்தனத் தாதியாரையும் என்றும் தம்மைப் பிரியாமல் வணங்கி மகிழுமாறு, தம் சிவலோகத்துள் தம்முடன் அழைத்துச் சென்றனர். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
கங்கையாற்றைச் சடையில் ஏற்ற இறைவருக்கு அடியவர் என்று கறியமுதாகத் தம் களங்கமற்ற சிறந்த மகனாரை அரிந்து, அங்கு அமுது ஊட்ட வரும் அப்பெரும் பேற்றைப் பெற்றவ ரான சிறுத்தொண்ட நாயனார்தம் திருவடிகளை எம் தலையின் மீது தாங்கிக் கொண்டு வணங்கி, அத்துணையால், மற்ற உயிர்கள் எல்லாம் வெவ்வேறாகப் பேசும் மொழிகளை எல்லாம் அறியும் தன்மையி னால் 'கழறிற்றறிவார்' என்ற பெயரைப் பெற்ற நாயனாரின் பெருமையைக் கூறுவாம். சிறுத்தொண்டநாயனார் புராணம் முற்றிற்று. ***

This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

naayanmaar history