சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Urdu
Cyrillic/Russian
Marati
சேக்கிழார்
புகழ்த்துணை நாயனார் புராணம்
12 -ஆம் திருமுறை 12.560
கடல் சூழ்ந்த சருக்கம்
'செருவிலிபுத்தூர்' என்ற பதியில் நிலைபெற்று வாழும் சிவ வேதியர் குலத்தில் தோன்றியவர், அரிய மலையை வில்லாக வளைத்தவரான சிவபெருமானின் அகம்படிமைத் தொழில் பூண்டு ஒழுகும் அத்தன்மையில் தமக்கு ஒப்பாக ஒருவரும் இல்லாதவர், இவ்வுலகில், பரந்தும் சிறந்தும் விளங்கும் ஒப்பற்ற புகழ் நீடிய 'புகழ்த்துணையார்' எனும் பெயருடையார். *** அருவரை - மேருமலை. பொரு - ஒப்பு. செருவிலிபுத்தூர் - இது கும்பகோணத்தில் இருந்து குடவாயிலுக்குச் (குடவாசல்) செல்லும் இடைவழியில் உள்ளது. அரிசில் கரைப்புத்தூர் எனத் திருமுறைகளில் அழைக்கப்பெறுவது. இக்காலத்து அழகாபுத்தூர் என மருவி வழங்குகிறது.
தம் பெருமானைத் தவத்தால், சிவாகம நெறியில் நின்று வழிபட்டு வரும் நாளில், பொங்கும் கடல் சூழ்ந்தவுலகத்தில் பஞ்சம் வந்து தமக்கு உணவில்லாமல் பசி மிக்கிருந்தும் 'எம் இறைவனை நான் விடுவேன் அல்லேன்' என்று இரவும் பகலுமாக, மணம் கமழும் பல மலர்களைக் கொண்டும் குளிர்நீரைக் கொண்டும் வழிபடுவாராகி, *** வற்கடம் - பஞ்சம்.
அவர் (ஒருநாள்) திருமாலும் நான்முகனும் தேடுதற்கரிய பெருமானை, நீராட்டும் பொழுது, மிகவும் பெருகிய பசியினால் வருந்தி நிலை தளர்ந்து அழகிய நிறைந்த நீரையுடைய குடத்தைத் தாங்கமாட்டாமையால், நஞ்சு அணிந்த கழுத்தையுடைய சிவபெருமானின் முடிமீது அது வீழ்ந்துவிடத் தளர்வாராகி,
குறிப்புரை:
சிவபெருமானின் திருவருளால் அதுபோது உறக்கம் வந்து தம்மைச் சேர, இறைவரும் கனவில் அவருக்கு அருள் செய்வா ராய், உண்ணும் உணவு குறைந்த காலம் (பஞ்சம்) தீருமளவும், இங்கு உனக்கு நாம் நாள்தோறும் ஒரு காசு வைப்போம்! என்று கூறியருள, நாயனாரும் துன்பம் நீங்கித் துயில் உணர்ந்து எழுந்தார். *** இம் மூன்று பாடல்களும் ஒரு முடிபின.
ஆனேற்றை ஊர்தியாகக் கொண்டு எழுந்தருளும் சிவபெருமான், பீடத்தின் கீழே, துன்பம் நீங்க நாளும் ஒரு பொற் காசை இட்டு அளித்திட, அன்பரும் அதைக் கைக்கொண்டு, பொருந் திய பசியினால் வாட்டம் கொண்ட உடலுடன் அதற்குப் பெரிதும் மகிழ்ந்து அகமும் முகமும் மலரும் உணர்வுடையரானார்.
குறிப்புரை: அற்றம் - சோர்வு; பசியினாலாய சோர்வு.
அந்நாளைப் போலவே, பின்வரும் நாள்களிலும் இறைவர் நாள்தோறும் தந்த பொற்காசினைக் கைக்கொண்டு துன்ப முடைய பசி மிகுதியால் நேர்ந்த வற்கடம் நீங்கிய பின்பு, ஒளியுடைய இறைவரின் மெய்யடிமைத் தொழிலான அகம்படித் தொண்டைத் தொடர்ந்து செய்து வாழ்ந்த, பின்பு, பொன் உலகில் உள்ள வானவர் தொழும்படி சிவபெருமானின் திருவடிகளைச் சேர்ந்தார். *** நீங்கியபின் என்பதைப் பசிப்பிணி என்பதனோடும், நாள் என்பதனோடும் தனித்தனியே கூட்டுக. நாள்தொறும் வருத்திய பசிப்பிணியும் நீங்கியது. பஞ்சமும் நீங்கியது. நீங்கியபின், அடியவர் தாம் ஆற்றிவந்த திருத்தொண்டினைத் தொடர்ந்து செய்து வந்த நாள் களில், ஒரு நாள் இறையடியடைந்தார்.
பந்தைச் சேரும் மென்மையான விரல்களையுடைய உமையம்மையாரை ஒரு கூற்றில் உடைய இறைவரின் திருவடிகளில் வந்து சேர்கின்ற மனத்துணை பெற்றவரான 'புகழ்த்துணையாரின்' திருவடிகளை வாழ்த்திச், சந்தனக் கலவை அணிந்த அழகிய தோள் களையுடைய ஒப்பில்லாதவரும், தலைவருமான மணம் கமழும் மாலை சூடிய 'கோட்புலியாரின்' திருத்தொண்டினை உரைப்பாம். *** புகழ்த்துணையாரின் தொண்டின் நெறியினை, 'அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர்காசு எய்திப், புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே' (தி. 2 ப. 63 பா. 7) என ஆளுடைய பிள்ளை யாரும்,
அகத்தடிமை செய்யும் அந்தணன்தான்
அரிசில்புனல் கொண்டு வந்து ஆட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்
This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
send corrections and suggestions to admin-at-sivaya.org
naayanmaar history