சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.010   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய
பண் - நட்டபாடை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=JseyYCTqhG0
Audio: https://sivaya.org/audio/1.010 unnamulai.mp3
1.069   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூ ஆர் மலர் கொண்டு
பண் - தக்கேசி   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
4.063   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓதி மா மலர்கள் தூவி-உமையவள்
பண் - திருநேரிசை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=fkS7G-zK1CU
5.004   திருநாவுக்கரசர்   தேவாரம்   வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,
பண் - திருக்குறுந்தொகை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=9CAtSB8CnTU
5.005   திருநாவுக்கரசர்   தேவாரம்   பட்டி ஏறு உகந்து ஏறி,
பண் - திருக்குறுந்தொகை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=-uVMU2Umgtc
Audio: https://www.youtube.com/watch?v=Ubkvgz7LOe8
8.107   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்
பண் -   (திருவண்ணாமலை )
Audio: https://sivaya.org/thiruvaasagam/07 Thiruvempavai Thiruvasagam.mp3
8.108   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ்
பண் -   (திருவண்ணாமலை )
Audio: https://sivaya.org/thiruvaasagam/08 Thiruammanai Thiruvasagam.mp3
Audio: https://sivaya.org/thiruvasagam2/08 Thiruammanai.mp3

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.010   உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய  
பண் - நட்டபாடை   (திருத்தலம் திருவண்ணாமலை ; (திருத்தலம் அருள்தரு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருவடிகள் போற்றி )
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,
பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ,
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.

[1]
தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி,
தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற,
ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல்
பூ மாங் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே.

[2]
பீலிமயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம்
சூலி மணி தரைமேல் நிறை சொரியும் விரி சாரல்,
ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே.

[3]
உதிரும் மயிர் இடு வெண்தலை கலனா, உலகு எல்லாம்
எதிரும் பலி உணவு ஆகவும், எருது ஏறுவது அல்லால்,
முதிரும் சடை இளவெண் பிறை முடிமேல் கொள, அடி மேல்
அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே.

[4]
மரவம், சிலை, தரளம், மிகு மணி, உந்து வெள் அருவி
அரவம் செய, முரவம் படும் அண்ணாமலை அண்ணல்
உரவம் சடை உலவும் புனல் உடன் ஆவதும் ஓரார்,
குரவம் கமழ் நறுமென்குழல் உமை புல்குதல் குணமே?

[5]
பெருகும் புனல் அண்ணாமலை, பிறை சேர், கடல் நஞ்சைப்
பருகும் தனை துணிவார், பொடி அணிவார், அது பருகிக்
கருகும் மிடறு உடையார், கமழ் சடையார், கழல் பரவி
உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே.

[6]
கரி காலன, குடர் கொள்வன, கழுது ஆடிய காட்டில்
நரி ஆடிய நகு வெண் தலை உதையுண்டவை உருள,
எரி ஆடிய இறைவர்க்கு இடம் இனவண்டு இசை முரல,
அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே.

[7]
ஒளிறூ புலி அதள் ஆடையன், உமை அஞ்சுதல் பொருட்டால்,
பிளிறூ குரல் மதவாரணம் வதனம் பிடித்து உரித்து,
வெளிறூபட விளையாடிய விகிர்தன்; இராவணனை
அளறூபட அடர்த்தான்; இடம் அண்ணாமலை அதுவே.

[8]
விளவு ஆர் கனி பட நூறிய கடல்வண்ணனும், வேதக்
கிளர் தாமரை மலர்மேல் உறை கேடு இல் புகழோனும்,
அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல்
தளராமுலை, முறுவல், உமை தலைவன் அடி சரணே!

[9]
வேர் வந்து உற, மாசு ஊர்தர, வெயில் நின்று உழல்வாரும்,
மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும்,
ஆரம்பர்தம் உரை கொள்ளன்மின்! அண்ணாமலை அண்ணல்,
கூர் வெண் மழுப்படையான், நல கழல் சேர்வது குணமே!

[10]
வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரிசாரல்,
அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை,
கொம்பு உந்துவ, குயில் ஆலுவ, குளிர் காழியுள் ஞான
சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.069   பூ ஆர் மலர் கொண்டு  
பண் - தக்கேசி   (திருத்தலம் திருவண்ணாமலை ; (திருத்தலம் அருள்தரு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருவடிகள் போற்றி )
பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார், வானோர்கள்;
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்
தூ மாமழை நின்று அதிர, வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

[1]
மஞ்சைப் போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார்
நஞ்சைக் கண்டத்து அடக்குமதுவும் நன்மைப் பொருள் போலும்
வெஞ்சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி,
அம் சொல் கிளிகள், ஆயோ! என்னும் அண்ணாமலையாரே.

[2]
ஞானத்திரள் ஆய் நின்ற பெருமான்-நல்ல அடியார் மேல்
ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப் பொருள் போலும்
ஏனத்திரளோடு இனமான் கரடி இழியும் இரவின்கண்
ஆனைத்திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

[3]
இழைத்த இடையாள் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்,
தழைத்த சடையார், விடை ஒன்று ஏறித் தரியார் புரம் எய்தார்
பிழைத்த பிடியைக் காணாது ஓடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்து, அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே.

[4]
உருவில்-திகழும் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்,
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றிச் செந்தீ எழுவித்தார்
பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம்
அருவித்திரளோடு இழியும் சாரல் அண்ணாமலையாரே.

[5]
எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த, இமையோர் பெருமானார்,
நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர், உறை கோயில்
கனைத்த மேதி காணாது ஆயன் கைம்மேல் குழல் ஊத,
அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே.

[6]
வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வரு மேல் வினையோடு
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில்
முந்தி எழுந்த முழவின் ஓசை, முது கல் வரைகள் மேல்
அந்திப் பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

[7]
மறம் தான் கருதி, வலியை நினைந்து, மாறு ஆய் எடுத்தான் தோள்
நிறம் தான் முரிய, நெரிய ஊன்றி, நிறைய அருள் செய்தார்
திறம் தான் காட்டி அருளாய்! என்று தேவர் அவர் வேண்ட,
அறம்தான் காட்டி, அருளிச் செய்தார் அண்ணாமலையாரே.

[8]
தேடிக் காணார், திருமால் பிரமன் தேவர் பெருமானை;
மூடி ஓங்கி முதுவேய் உகுத்த முத்தம்பல கொண்டு,
கூடிக் குறவர் மடவார் குவித்து, கொள்ள வம்மின்! என்று,
ஆடிப் பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே.

[9]
தட்டை இடுக்கித் தலையைப் பறித்துச் சமணே நின்று உண்ணும்
பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா; பேணித் தொழுமின்கள்!
வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில்,
அட்டம் ஆளித்திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே.

[10]
அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை,
நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன்
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.063   ஓதி மா மலர்கள் தூவி-உமையவள்  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருவண்ணாமலை ; (திருத்தலம் அருள்தரு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருவடிகள் போற்றி )
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் பங்கா! மிக்க
சோதியே! துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே!
ஆதியே! அமரர்கோவே! அணி அணாமலை உளானே!
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே.

[1]
பண் தனை வென்ற இன் சொல் பாவை ஓர்பங்க! நீல-
கண்டனே! கார் கொள் கொன்றைக் கடவுளே! கமலபாதா!
அண்டனே! அமரர்கோவே! அணி அணாமலை உளானே!
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே.

[2]
உருவமும் உயிரும் ஆகி, ஓதிய உலகுக்கு எல்லாம்
பெரு வினை பிறப்பு வீடு ஆய், நின்ற எம் பெருமான்! மிக்க
அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய்! அண்டர்கோவே!
மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே.

[3]
பைம்பொனே! பவளக்குன்றே! பரமனே! பால் வெண் நீற்றாய்!
செம்பொனே! மலர் செய் பாதா! சீர் தரு மணியே! மிக்க
அம் பொனே! கொழித்து வீழும் அணி அணாமலை உளானே!
என் பொனே! உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே.

[4]
பிறை அணி முடியினானே! பிஞ்ஞகா! பெண் ஓர்பாகா!
மறைவலா! இறைவா! வண்டு ஆர் கொன்றையாய்! வாம தேவா!
அறைகழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே!
இறைவனே! உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே.

[5]
புரிசடை முடியின் மேல் ஓர் பொரு புனல் கங்கை வைத்துக்
கரி உரி போர்வை ஆகக் கருதிய காலகாலா!
அரிகுலம் மலிந்த அண்ணாமலை உளாய்!-அலரின் மிக்க
வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே.

[6]
இரவியும், மதியும், விண்ணும், இரு நிலம், புனலும், காற்றும்,
உரகம் ஆர் பவனம் எட்டும், திசை, ஒளி, உருவம் ஆனாய்!
அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே!
பரவும் நின் பாதம் அல்லால், பரம! நான் பற்று இலேனே.

[7]
பார்த்தனுக்கு அன்று நல்கிப் பாசுபதத்தை ஈந்தாய்;
நீர்த் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய்-
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே!
தீர்த்தனே!-நின்தன் பாதத் திறம் அலால்-திறம் இலேனே.

[8]
பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே!
மாலும் நான்முகனும் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்!
ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே!
வால் உடை விடையாய்!-உன் தன் மலர் அடி மறப்பு இலேனே.

[9]
இரக்கம் ஒன்று யாதும் இல்லாக் காலனைக் கடிந்த எம்மான்!
உரத்தினால் வரையை ஊக்க, ஒரு விரல் நுதியினாலே!
அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய்! அமரர் ஏறே!
சிரத்தினால் வணங்கி ஏத்தித் திருவடி மறப்பு இலேனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.004   வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவண்ணாமலை ; (திருத்தலம் அருள்தரு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருவடிகள் போற்றி )
இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களிலும் திரிபுரங்கள் எரித்த செய்தி குறிப்பிடப் படுவது இந்த பதிகத்தின் தனிச் சிறப்பு. நினைத்தால் முக்தி தரும் தலம் என்று அண்ணாமலையை குறிப்பிடுவார்கள். அதனை உணர்த்தும் வண்ணம், இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், அண்ணாமலை அண்ணலை அடியேன் மறந்து உய்வினை அடைவேனோ என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பெருமானை எப்போதும் நினைத்தே தனது வாழ்க்கையின் இறுதி பகுதியை கழித்தவர் அப்பர் பிரான். எனவே இந்த அறிவுரை அவருக்கு தேவையான அறிவுரை அல்ல. தன்னைச் சுட்டிக் காட்டி நமக்கு அறிவுரை கூறும் பதிகம் இந்த பதிகம். பெருமானை நினைக்க மறந்தால் நீங்கள் உய்வினை அடைய மாட்டீர்கள் என்று நமக்கு உணர்த்தி, பெருமானை நினைத்து அவனைப் பணிய வேண்டிய அவசியத்தை நமக்கு அப்பர் பிரான் இந்த பதிகத்தின் மூலம் உணர்த்துகின்றார்.
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்-
சிட்டனை, திரு அண்ணாமலையனை,
இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும்
அட்டனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[1]
வானனை(ம்), மதி சூடிய மைந்தனை,
தேனனை, திரு அண்ணாமலையனை,
ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
ஆனனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[2]
மத்தனை(ம்), மதயானை உரித்த எம்
சித்தனை, திரு அண்ணாமலையனை,
முத்தனை(ம்), முனிந்தார் புரம்மூன்று எய்த
அத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[3]
காற்றனை, கலக்கும் வினை போய் அறத்
தேற்றனை, திரு அண்ணாமலையனை,
கூற்றனை, கொடியார் புரம்மூன்று எய்த
ஆற்றனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[4]
மின்னனை, வினை தீர்த்து எனை ஆட்கொண்ட
தென்னனை, திரு அண்ணாமலையனை,
என்னனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
அன்னனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[5]
மன்றனை(ம்), மதியாதவன் வேள்விமேல்
சென்றனை, திரு அண்ணாமலையனை,
வென்றனை, வெகுண்டார் புரம்மூன்றையும்
கொன்றனை, கொடியேன் மறந்து உய்வனோ?

[6]
வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்-
தீரனை, திரு அண்ணாமலையனை,
ஊரனை, உணரார் புரம் மூன்று எய்த
ஆரனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[7]
கருவினை, கடல்வாய் விடம் உண்ட எம்
திருவினை, திரு அண்ணாமலையனை,
உருவினை, உணரார் புரம் மூன்று எய்த
அருவினை,-அடியேன் மறந்து உய்வனோ?

[8]
அருத்தனை, அரவு ஐந்தலை நாகத்தைத்
திருத்தனை, திரு அண்ணாமலையனை,
கருத்தனை, கடியார் புரம்மூன்று எய்த
வருத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[9]
அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய
திருத்தனை, திரு அண்ணாமலையனை,
இரக்கம் ஆய் என் உடல் உறு நோய்களைத்
துரக்கனை,-தொண்டனேன் மறந்து உய்வனோ?

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.005   பட்டி ஏறு உகந்து ஏறி,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவண்ணாமலை ; (திருத்தலம் அருள்தரு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருவடிகள் போற்றி )
பட்டி ஏறு உகந்து ஏறி, பல இலம்
இட்டம் ஆக இரந்து உண்டு, உழிதரும்
அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழக்
கெட்டுப் போம், வினை; கேடு இல்லை; காண்மினே!

[1]
பெற்றம் ஏறுவர், பெய் பலிக்கு ஏன்று அவர்;
சுற்றமா மிகு தொல் புகழாளொடும்
அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நல்-தவத்தொடு ஞானத்து இருப்பரே.

[2]
பல் இல் ஓடு கை ஏந்திப் பல இலம்
ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர்,
அல்லல் தீர்க்கும், அண்ணாமலை கைதொழ
நல்லஆயின நம்மை அடையுமே.

[3]
பாடிச் சென்று பலிக்கு என்று நின்றவர்
ஓடிப் போயினர்; செய்வது ஒன்று என்கொலோ?
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போகும், நம் மேலை வினைகளே.

[4]
தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்!
நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்;
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போம், நமது உள்ள வினைகளே.

[5]
கட்டி ஒக்கும், கரும்பின் இடை; துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்,
அட்டமூர்த்தி, அண்ணாமலை மேவிய
நட்டம் ஆடியை, நண்ண நன்கு ஆகுமே.

[6]
கோணிக் கொண்டையர் வேடம் முன் கொண்டவர்,
பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்,
ஆணிப் பொன்னின், அண்ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே.

[7]
கண்டம்தான் கறுத்தான், காலன் ஆர் உயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்,
அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ
விண்டு போகும், நம் மேலைவினைகளே.

[8]
முந்திச் சென்று முப்போதும் வணங்குமின்,
அந்திவாய் ஒளியான் தன் அண்ணாமலை!
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும்,
கந்தமாமலர் சூடும் கருத்தனே.

[9]
மறையினானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன்
உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழப்
பறையும், நாம் செய்த பாவங்கள் ஆனவே.

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.107   திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்  
பண் -   (திருத்தலம் திருவண்ணாமலை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கொச்சகக்கலிப்பா
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடம் கண்
மாதே! வளருதியோ? வன் செவியோ நின் செவி தான்?
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே, விம்மி விம்மி, மெய்ம்மறந்து,
போது ஆர் அமளியின்மேல் நின்றும் புரண்டு, இங்ஙன்
ஏதேனும் ஆகாள், கிடந்தாள்; என்னே! என்னே!
ஈதே எம் தோழி பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்!

[1]
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய், இராப் பகல் நாம்
பேசும்போது; எப்போது இப் போது ஆர் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்!' நேரிழையீர்!
சீ! சீ! இவையும் சிலவோ? விளையாடி
ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப் பாதம் தந்தருள வந்தருளும்
தேசன், சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர்? யாம் ஆர்?' ஏல் ஓர் எம்பாவாய்!

[2]
முத்து அன்ன வெள் நகையாய்! முன் வந்து, எதிர் எழுந்து, என்
அத்தன், ஆனந்தன், அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடை திறவாய்'.
பத்து உடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்கு உடையீர்!
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால், பொல்லாதோ?'
எத்தோ நின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?'
சித்தம் அழகியார் பாடாரோ, நம் சிவனை?'
இத்தனையும் வேண்டும் எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்!

[3]
ஒள் நித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?'
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ?'
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம்: அவ்வளவும்
கண்ணைத் துயின்று, அவமே காலத்தைப் போக்காதே'
விண்ணுக்கு ஒரு மருந்தை, வேத விழுப் பொருளை,
கண்ணுக்கு இனியானை, பாடிக் கசிந்து, உள்ளம்
உள் நெக்கு, நின்று உருக, யாம் மாட்டோம்; நீயே வந்து
எண்ணி, குறையில், துயில்' ஏல் ஓர் எம்பாவாய்!

[4]
மால் அறியா, நான்முகனும் காணா, மலையினை, நாம்
போல் அறிவோம், என்று உள்ள பொக்கங்களே பேசும்
பால் ஊறு தேன் வாய்ப் படிறீ! கடை திறவாய்.
ஞாலமே, விண்ணே, பிறவே, அறிவு அரியான்
கோலமும், நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி, சிவனே! சிவனே! என்று
ஓலம் இடினும், உணராய், உணராய் காண்!
ஏலக்குழலி பரிசு' ஏல் ஓர் எம்பாவாய்!

[5]
மானே! நீ நென்னலை, நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும், நாணாமே
போன திசை பகராய்; இன்னம் புலர்ந்தின்றோ?
வானே, நிலனே, பிறவே, அறிவு அரியான்
தானே வந்து, எம்மைத் தலையளித்து, ஆட்கொண்டருளும்
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு, உன் வாய் திறவாய்!
ஊனே உருகாய், உனக்கே உறும்; எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடு' ஏல் ஓர் எம்பாவாய்!

[6]
அன்னே, இவையும் சிலவோ? பல அமரர்
உன்னற்கு அரியான், ஒருவன், இரும் சீரான்,
சின்னங்கள் கேட்ப, சிவன் என்றே வாய் திறப்பாய்;
தென்னா என்னா முன்னம், தீ சேர் மெழுகு ஒப்பாய்;
என்னானை, என் அரையன், இன் அமுது, என்று எல்லோமும்
சொன்னோம் கேள், வெவ்வேறாய்; இன்னம் துயிலுதியோ?
வன் நெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்,
என்னே துயிலின் பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்!

[7]
கோழி சிலம்ப, சிலம்பும் குருகு எங்கும்;
ஏழில் இயம்ப, இயம்பும் வெண் சங்கு எங்கும்;
கேழ் இல் பரஞ்சோதி, கேழ் இல் பரங்கருணை,
கேழ் இல் விழுப் பொருள்கள் பாடினோம்; கேட்டிலையோ?
வாழி! ஈது என்ன உறக்கமோ? வாய் திறவாய்!
ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை,
ஏழை பங்காளனையே பாடு!' ஏல் ஓர் எம்பாவாய்!

[8]
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன் அடியார் தாள் பணிவோம்; ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம்;
அன்னவரே எம் கணவர் ஆவார்; அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்;
இன்ன வகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்,
என்ன குறையும் இலோம்' ஏல் ஓர் எம்பாவாய்!

[9]
பாதாளம் ஏழினும் கீழ் சொல் கழிவு பாத மலர்;
போது ஆர் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே!
பேதை ஒருபால்; திருமேனி ஒன்று அல்லன்;
வேத முதல்; விண்ணோரும், மண்ணும், துதித்தாலும்,
ஓத உலவா ஒரு தோழம் தொண்டர் உளன்;
கோது இல் குலத்து, அரன் தன் கோயில் பிணாப் பிள்ளைகாள்!
ஏது அவன் ஊர்? ஏது அவன் பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்?
ஏது அவனைப் பாடும் பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்!

[10]
மொய் ஆர் தடம் பொய்கை புக்கு, முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து, உன் கழல் பாடி,
ஐயா! வழி அடியோம் வாழ்ந்தோம் காண்; ஆர் அழல்போல்
செய்யா! வெள் நீறு ஆடீ! செல்வா! சிறு மருங்குல்
மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம், உய்ந்து ஒழிந்தோம்;
எய்யாமல் காப்பாய் எமை' ஏல் ஓர் எம்பாவாய்!

[11]
ஆர்த்த பிறவித் துயர் கெட, நாம் ஆர்த்து ஆடும்
தீர்த்தன்; நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும்
கூத்தன்; இவ் வானும், குவலயமும், எல்லோமும்,
காத்தும், படைத்தும், கரந்தும், விளையாடி,
வார்த்தையும் பேசி, வளை சிலம்ப, வார் கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய, அணி குழல்மேல் வண்டு ஆர்ப்ப,
பூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொன் பாதம்
ஏத்தி, இரும் சுனை நீர் ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

[12]
பைம் குவளைக் கார் மலரால், செம் கமலப் பைம் போதால்,
அங்கம் குருகு இனத்தால், பின்னும் அரவத்தால்,
தம்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்,
எங்கள் பிராட்டியும், எம் கோனும், போன்று இசைந்த
பொங்கு மடுவில், புகப் பாய்ந்து, பாய்ந்து, நம்
சங்கம் சிலம்ப; சிலம்பு கலந்து ஆர்ப்ப;
கொங்கைகள் பொங்க; குடையும் புனல் பொங்க;
பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

[13]
காது ஆர் குழை ஆட, பைம் பூண் கலன் ஆட,
கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆட,
சீதப் புனல் ஆடி, சிற்றம்பலம் பாடி,
வேதப் பொருள் பாடி, அப் பொருள் ஆமா பாடி,
சோதி திறம் பாடி, சூழ் கொன்றைத் தார் பாடி,
ஆதி திறம் பாடி, அந்தம் ஆமா பாடி,
பேதித்து நம்மை, வளர்த்து எடுத்த பெய்வளை தன்
பாதத் திறம் பாடி, ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

[14]
ஓர் ஒரு கால் எம்பெருமான் என்று என்றே, நம் பெருமான்
சீர் ஒரு கால் வாய் ஓவாள்; சித்தம் களி கூர,
நீர் ஒரு கால் ஓவா நெடும் தாரை கண் பனிப்ப,
பார் ஒரு கால் வந்தனையாள்; விண்ணோரைத் தான் பணியாள்;
பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும்
ஆர் ஒருவர்? இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்,
வார் உருவப் பூண் முலையீர், வாய் ஆர நாம் பாடி,
ஏர் உருவப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

[15]
முன்னி, கடலை, சுருக்கி எழுந்து, உடையாள்
என்னத் திகழ்ந்து, எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து, எம்பிராட்டி திருவடிமேல்
பொன் அம் சிலம்பில் சிலம்பி, திருப் புருவம்
என்னச் சிலை குலவி, நம்தம்மை ஆள் உடையாள்
தன்னில் பிரிவு இலா எம் கோமான் அன்பர்க்கு
முன்னி, அவள், நமக்கு முன் சுரக்கும் இன் அருளே
என்னப் பொழியாய் மழை' ஏல் ஓர் எம்பாவாய்!

[16]
செம் கண் அவன்பால், திசைமுகன்பால், தேவர்கள்பால்,
எங்கும் இலாதது ஓர் இன்பம் நம்பாலதா,
கொங்கு உண் கரும் குழலி! நம் தம்மைக் கோதாட்டி,
இங்கு, நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளி,
செம் கமலப் பொன் பாதம் தந்தருளும் சேவகனை,
அம் கண் அரசை, அடியோங்கட்கு ஆர் அமுதை,
நங்கள் பெருமானை, பாடி, நலம் திகழ,
பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

[17]
அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித் தொகை வீறு அற்றால்போல்,
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்ப,
தண் ஆர் ஒளி மழுங்கி, தாரகைகள் தாம் அகல,
பெண் ஆகி, ஆண் ஆய், அலி ஆய், பிறங்கு ஒலி சேர்
விண் ஆகி, மண் ஆகி, இத்தனையும் வேறு ஆகி,
கண் ஆர் அமுதமும் ஆய், நின்றான் கழல் பாடி,
பெண்ணே! இப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

[18]
உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம், என்று
அங்கு அப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்,
எங்கள் பெருமான், உனக்கு ஒன்று உரைப்போம், கேள்!
எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க;
எம் கை உனக்கு அல்லாது எப் பணியும் செய்யற்க;
கங்குல், பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க.
இங்கு இப் பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல்,
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு?' ஏல் ஓர் எம்பாவாய்!

[19]
போற்றி! அருளுக, நின் ஆதி ஆம் பாத மலர்.
போற்றி! அருளுக, நின் அந்தம் ஆம் செம் தளிர்கள்.
போற்றி! எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொன் பாதம்.
போற்றி! எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூம் கழல்கள்.
போற்றி! எல்லா உயிர்க்கும் ஈறு ஆம் இணை அடிகள்.
போற்றி! மால், நான்முகனும், காணாத புண்டரிகம்.
போற்றி! யாம் உய்ய, ஆட்கொண்டருளும் பொன் மலர்கள்.
போற்றி! யாம் மார்கழி நீர் ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.108   திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ்  
பண் -   (திருத்தலம் திருவண்ணாமலை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
செம் கண் நெடுமாலும் | சென்று இடந்தும்,| காண்பு அரிய
பொங்கு மலர்ப் பாதம் |பூதலத்தே |போந்தருளி,
எங்கள் பிறப்பு அறுத்திட்டு,| எம் தரமும் |ஆட்கொண்டு,
தெங்கு திரள் சோலை,| தென்னன் |பெருந்துறையான்,
அம் கணன், அந்தணன் ஆய், | அறைகூவி,| வீடு அருளும்
அம் கருணை வார் கழலே| பாடுதும் காண்;| அம்மானாய்!

[1]
பாரார், விசும்பு உள்ளார்,| பாதாளத்தார், | புறத்தார்,
ஆராலும் காண்டற்கு |அரியான்; |எமக்கு எளிய
பேராளன்; தென்னன்; |பெருந்துறையான்; | பிச்சு ஏற்றி,
வாரா வழி அருளி, | வந்து, என்| உளம் புகுந்த
ஆரா அமுது ஆய்,| அலை கடல்வாய் | மீன் விசிறும்
பேர் ஆசை வாரியனை | பாடுதும் காண்; |அம்மானாய்!

[2]
இந்திரனும், மால், அயனும்,| ஏனோரும், | வானோரும்,
அந்தரமே நிற்க, | சிவன் அவனி | வந்தருளி,
எம் தரமும் ஆட்கொண்டு,| தோள் கொண்ட | நீற்றன் ஆய்;
சிந்தனையை வந்து உருக்கும் | சீர் ஆர் |பெருந்துறையான்,
பந்தம் பறிய,| பரி மேல்கொண்டான், |தந்த
அந்தம் இலா ஆனந்தம்| பாடுதும் காண்; |அம்மானாய்!

[3]
வான் வந்த தேவர்களும்,| மால், அயனோடு,| இந்திரனும்,
கான் நின்று வற்றியும்,| புற்று எழுந்தும்,| காண்பு அரிய
தான் வந்து, நாயேனைத் |தாய்போல் |தலையளித்திட்டு,
ஊன் வந்து உரோமங்கள், |உள்ளே உயிர்ப்பு எய்து
தேன் வந்து, அமுதின் |தெளிவின் |ஒளி வந்த,
வான் வந்த, வார் கழலே |பாடுதும் காண்; |அம்மானாய்!

[4]
கல்லா மனத்துக் | கடைப்பட்ட |நாயேனை,
வல்லாளன், தென்னன், |பெருந்துறையான், | பிச்சு ஏற்றி,
கல்லைப் பிசைந்து | கனி ஆக்கி, |தன் கருணை
வெள்ளத்து அழுத்தி, | வினை கடிந்த | வேதியனை,
தில்லை நகர் புக்கு,| சிற்றம்பலம் |மன்னும்
ஒல்லை விடையானை |பாடுதும் காண்; | அம்மானாய்!

[5]
கேட்டாயோ தோழி! | கிறி செய்த | ஆறு ஒருவன்
தீட்டு ஆர் மதில் புடை சூழ்,| தென்னன் |பெருந்துறையான்,
காட்டாதன எல்லாம் | காட்டி,| சிவம் காட்டி,
தாள் தாமரை காட்டி, | தன் கருணைத் | தேன் காட்டி,
நாட்டார் நகை செய்ய,| நாம் மேலை | வீடு எய்த,
ஆள் தான் கொண்டு ஆண்டவா| பாடுதும் காண்; |அம்மானாய்!

[6]
ஓயாதே உள்குவார் உள் இருக்கும் உள்ளானை,
சேயானை, சேவகனை, தென்னன் பெருந்துறையின்
மேயானை, வேதியனை, மாது இருக்கும் பாதியனை,
நாய் ஆன நம் தம்மை ஆட்கொண்ட நாயகனை,
தாயானை, தத்துவனை, தானே உலகு ஏழும்
ஆயானை, ஆள்வானை பாடுதும் காண்; அம்மானாய்!

[7]
பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,
கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை
மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்!

[8]
துண்டப் பிறையான், மறையான், பெருந்துறையான்,
கொண்ட புரிநூலான், கோல மா ஊர்தியான்,
கண்டம் கரியான், செம் மேனியான், வெள் நீற்றான்,
அண்டம் முதல் ஆயினான், அந்தம் இலா ஆனந்தம்,
பண்டைப் பரிசே, பழ அடியார்க்கு ஈந்தருளும்;
அண்டம் வியப்பு உறுமா பாடுதும் காண்; அம்மானாய்!

[9]
விண் ஆளும் தேவர்க்கும் மேல் ஆய வேதியனை,
மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பு ஆகி நின்றானை,
தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானை,
பெண் ஆளும் பாகனை, பேணு பெருந்துறையில்
கண் ஆர் கழல் காட்டி, நாயேனை ஆட்கொண்ட
அண்ணாமலையானை பாடுதும் காண்; அம்மானாய்!

[10]
செப்பு ஆர் முலை பங்கன், தென்னன், பெருந்துறையான்,
தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான்,
அப் பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பு ஆர் சடை அப்பன், ஆனந்த வார் கழலே
ஒப்பு ஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும்
அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண்; அம்மானாய்!

[11]
மைப்பொலியும் கண்ணி! கேள்; மால், அயனோடு, இந்திரனும்,
எப் பிறவியும் தேட, என்னையும் தன் இன் அருளால்
இப் பிறவி ஆட்கொண்டு, இனிப் பிறவாமே காத்து
மெய்ப்பொருள்கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய்
எப்பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும்
அப்பொருள் ஆம் நம் சிவனைப் பாடுதும் காண் அம்மானாய்!

[12]
கைஆர் வளை சிலம்பக் காதுஆர் குழை ஆட
மைஆர் குழல் புரழத் தேன் பாய வண்டு ஒலிப்பச்
செய்யானை வெண் நீறு அணிந்தானைச் சேர்ந்து அறியாக்
கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை
ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானை!

[13]
ஆனை ஆய்க் கீடம் ஆய் மானுடர் ஆய்த் தேவர் ஆய்
ஏனைப் பிற ஆய், பிறந்து, இறந்து எய்த்தேனை
ஊனையும் நின்று உருக்கி, என் வினையை ஓட்டு உகந்து,
தேனையும், பாலையும், கன்னலையும் ஒத்து, இனிய
கோன் அவன் போல் வந்து, என்னை, தன் தொழும்பில் கொண்டருளும்
வானவன் பூம் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!

[14]
சந்திரனைத் தேய்த்தருளி, தக்கன் தன் வேள்வியினில்
இந்திரனைத் தோள் நெரித்திட்டு, எச்சன் தலை அரிந்து,
அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்து,
சிந்தித் திசை திசையே தேவர்களை ஓட்டு உகந்த,
செம் தார்ப் பொழில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதும் காண்; அம்மானாய்!

[15]
ஊன் ஆய், உயிர் ஆய், உணர்வு ஆய், என்னுள் கலந்து,
தேன் ஆய், அமுதமும் ஆய், தீம் கரும்பின் கட்டியும் ஆய்,
வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும்,
தேன் ஆர் மலர்க் கொன்றைச் சேவகனார், சீர் ஒளி சேர்
ஆனா அறிவு ஆய், அளவு இறந்த பல் உயிர்க்கும்
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்; அம்மானாய்!

[16]
சூடுவேன் பூம் கொன்றை; சூடிச் சிவன் திரள் தோள்
கூடுவேன்; கூடி, முயங்கி, மயங்கி நின்று,
ஊடுவேன்; செவ் வாய்க்கு உருகுவேன்; உள் உருகித்
தேடுவேன்; தேடி, சிவன் கழலே சிந்திப்பேன்;
வாடுவேன்; பேர்த்தும் மலர்வேன்; அனல் ஏந்தி
ஆடுவான் சேவடியே பாடுதும் காண்; அம்மானாய்!

[17]
கிளி வந்த இன் மொழியாள் கேழ் கிளரும் பாதியனை,
வெளி வந்த மால், அயனும், காண்பு அரிய வித்தகனை,
தெளி வந்த தேறலை, சீர் ஆர் பெருந்துறையில்
எளிவந்து, இருந்து, இரங்கி, எண் அரிய இன் அருளால்
ஒளி வந்து, என் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ,
அளி வந்த அந்தணனை பாடுதும் காண்; அம்மானாய்!

[18]
முன்னானை, மூவர்க்கும்; முற்றும் ஆய், முற்றுக்கும்
பின்னானை; பிஞ்ஞகனை; பேணு பெருந்துறையின்
மன்னானை; வானவனை; மாது இயலும் பாதியனை;
தென் ஆனைக்காவானை; தென் பாண்டி நாட்டானை;
என்னானை, என் அப்பன்' என்பார்கட்கு இன் அமுதை
அன்னானை; அம்மானை பாடுதும் காண்: அம்மானாய்!

[19]
பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான், பெருந்துறையான்,
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளி, தன் அடியார்
குற்றங்கள் நீக்கி, குணம் கொண்டு, கோதாட்டி,
சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான் தொல் புகழே
பற்றி, இப் பாசத்தைப் பற்று அற நாம் பற்றுவான்,
பற்றிய பேர் ஆனந்தம் பாடுதும் காண்; அம்மானாய்!
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[20]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list