பந்து ஆர் விரல் மடவாள் பாகமா, நாகம் பூண்டு, எருது ஏறி, அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண்சாரல் வந்து ஆர் மடமந்தி கூத்து ஆட, வார் பொழிலில் வண்டு பாட, செந்தேன் தெளி ஒளிர, தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே.
| [ 1]
|
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான், மற்றொரு கை வீணை ஏந்தி, ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான், இடம்போலும் இலை சூழ் கானில் ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட, முந்தூழ் ஓசைச் சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே.
| [ 2]
|
நன்று ஆங்கு இசை மொழிந்து, நன்நுதலாள் பாகம் ஆய், ஞாலம் ஏத்த, மின் தாங்கு செஞ்சடை எம் விகிர்தர்க்கு இடம்போலும் விரை சூழ் வெற்பில், குன்று ஓங்கி வன் திரைகள் மோத, மயில் ஆலும் சாரல்,செவ்வி சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே.
| [ 3]
|
கையில் மழு ஏந்தி, காலில் சிலம்பு அணிந்து, கரித்தோல்கொண்டு மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம்போலும் மிடைந்து வானோர், ஐய! அரனே! பெருமான்! அருள் என்று என்று ஆதரிக்க, செய்யகமலம் மொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே.
| [ 4]
|
முத்து ஏர் நகையாள் இடம் ஆக, தம் மார்பில் வெண் நூல் பூண்டு தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த அத் தேன் அளி உண் களியால் இசை முரல; ஆலத் தும்பி, தெத்தே என; முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே.
| [ 5]
|
Go to top |
வில் ஆர் வரை ஆக, மா நாகம் நாண் ஆக, வேடம் கொண்டு புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம்போலும் புலியும் மானும் அல்லாத சாதிகளும் அம் கழல்மேல் கைகூப்ப, அடியார் கூடி, செல்லா அரு நெறிக்கே செல்ல அருள் புரியும் திரு நணாவே.
| [ 6]
|
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி, ஆடு அரவு ஒன்று அரைமேல் சாத்தி, ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும் நானாவிதத்தால் விரதிகள் நன்நாமமே ஏத்தி வாழ்த்த, தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே.
| [ 7]
|
மன் நீர் இலங்கையர் தம் கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி, முந்நீர்க் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம்போலும் முழை சேர் சீயம், அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில், செந்நீர் பரப்பச் சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே.
| [ 8]
|
மை ஆர் மணிமிடறன், மங்கை ஓர்பங்கு உடையான், மனைகள் தோறும் கை ஆர் பலி ஏற்ற கள்வன், இடம்போலும் கழல்கள் நேடிப் பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற, மன்னிச் செய் ஆர் எரி ஆம் உருவம் உற, வணங்கும் திரு நணாவே.
| [ 9]
|
ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார், அல்லல் பேசி மூடு உருவம் உகந்தார், உரை அகற்றும் மூர்த்தி கோயில் ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார, சேடர் சிறந்து ஏத்த, தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே.
| [ 10]
|
Go to top |
கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழிக் கவுணி சீர் ஆர் நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும் சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல், வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர், இம் மண்ணின்மேலே.
| [ 11]
|