சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.047
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பல் அடைந்த வெண் தலையில் பண் - பழந்தக்கராகம் (திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=jc-3lGGQv64 |
1.048
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நூல் அடைந்த கொள்கையாலே நுன் பண் - பழந்தக்கராகம் (திருச்சேஞலூர் சத்தகிரீசுவரர் சகிதேவிநாயகியம்மை) |
1.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
போகம் ஆர்த்த பூண் முலையாள் பண் - பழந்தக்கராகம் (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ba-MJnMHA28 |
1.050
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி, பண் - பழந்தக்கராகம் (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=qucQe6XZPzE |
1.051
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெங் கண் ஆனை ஈர் பண் - பழந்தக்கராகம் (திருச்சோபுரம் (தியாகவல்லி) சோபுரநாதர் சோபுரநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=H2I_u74H02A |
1.052
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மறை உடையாய்! தோல் உடையாய்! பண் - பழந்தக்கராகம் (திருநெடுங்களம் நித்தியசுந்தரர் ஒப்பிலாநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=u5teN1hhIxI |
1.053
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை பண் - பழந்தக்கராகம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=19dU8fmN7AA |
1.054
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூத் தேர்ந்து ஆயன கொண்டு, பண் - பழந்தக்கராகம் (திருஓத்தூர் (செய்யாறு) வேதநாதர் இளமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=eDjeCtZ_l10 Audio: https://sivaya.org/audio/1.054 Poothernthaayina .mp3 |
1.055
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, பண் - பழந்தக்கராகம் (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=2BP39HT21GU |
1.056
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கார் ஆர் கொன்றை கலந்த பண் - பழந்தக்கராகம் (திருப்பாற்றுறை திருமூலநாதர் மோகாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=0Q2QLIBw8lk |
1.057
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; பண் - பழந்தக்கராகம் (திருவேற்காடு வேற்காட்டீசுவரர் வேற்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=MfFlB0vxtJ4 |
1.058
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரியும், நம் வினை உள்ளன பண் - பழந்தக்கராகம் (திருக்கரவீரம் கரவீரேசுவரர் பிரத்தியட்சமின்னாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=wuzO5Hh_CQU |
1.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு, பண் - பழந்தக்கராகம் (திருத்தூங்கானைமாடம் சுடர்க்கொழுந்தீசர் கடந்தைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=EusYq6RgstU |
1.060
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண் தரங்கப் புனல் கமல பண் - பழந்தக்கராகம் (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=2yPMSDXb4nE |
1.061
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நறை கொண்ட மலர் தூவி, பண் - பழந்தக்கராகம் (திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை) Audio: https://www.youtube.com/watch?v=C_MQ8sSlZyk |
1.062
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நாள் ஆய போகாமே, நஞ்சு பண் - பழந்தக்கராகம் (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=apnzZFYxrWY |
4.012
திருநாவுக்கரசர்
தேவாரம்
சொல் மாலை பயில்கின்ற குயில் பண் - பழந்தக்கராகம் (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=TOqsM3Xa3Fs |
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால் பண் - பழந்தக்கராகம் (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=LtFr6FRYsgI |
5.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பண் - பழந்தக்கராகம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=X012Z-pSPW4 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.047  
பல் அடைந்த வெண் தலையில்
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருச்சிரபுரம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும், போய், வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம் செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே? | [1] |
கொல்லை முல்லை நகையினாள் ஓர் கூறு அது அன்றியும், போய், அல்லல் வாழ்க்கைப் பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னைகொல் ஆம் சொல்ல நீண்ட பெருமையாளர், தொல்கலை கற்று வல்லார், செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே? | [2] |
நீர் அடைந்த சடையின்மேல் ஓர் நிகழ்மதி அன்றியும், போய், ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப, சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே? | [3] |
கை அடைந்த மானினோடு கார் அரவு அன்றியும், போய், மெய் அடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல் என்னே கை அடைந்த களைகள் ஆகச் செங்கழுநீர் மலர்கள் செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே? | [4] |
புரம் எரித்த வெற்றியோடும் போர் மதயானை தன்னைக் கரம் எடுத்துத் தோல் உரித்த காரணம் ஆவது என்னே மரம் உரித்த தோல் உடுத்த மா தவர் தேவரோடும் சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே? | [5] |
கண்ணு மூன்றும் உடையது அன்றி, கையினில் வெண்மழுவும் பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே எண்ணும் மூன்று கனலும் ஓம்பி, எழுமையும் விழுமியர் ஆய், திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே? | [6] |
குறைபடாத வேட்கையோடு கோல்வளையாள் ஒருபால் பொறை படாத இன்பமோடு புணர்தரும் மெய்ம்மை என்னே இறை படாத மென்முலையார் மாளிகைமேல் இருந்து, சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே? | [7] |
மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச, ஒருவிரலால் நிலை எடுத்த கொள்கையானே! நின்மலனே! நினைவார் துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதிதோறும் சிலை எடுத்த தோளினானே! சிரபுரம் மேயவனே! | [8] |
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச, சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே? | [9] |
புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை என்று இருக்கும் பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை கொல் ஆம் மத்தயானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே, சித்தர் வந்து பணியும் செல்வச் சிரபுரம் மேயவனே? | [10] |
தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை பங்கம் நீங்கப் பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல் சங்கமோடு நீடி வாழ்வர், தன்மையினால் அவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.048  
நூல் அடைந்த கொள்கையாலே நுன்
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருச்சேஞலூர் ; (திருத்தலம் அருள்தரு சகிதேவிநாயகியம்மை உடனுறை அருள்மிகு சத்தகிரீசுவரர் திருவடிகள் போற்றி )
நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு மால் அடைந்த நால்வர் கேட்க, நல்கிய நல் அறத்தை, ஆல் அடைந்த நீழல் மேவி, அருமறை சொன்னது என்னே சேல் அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே? | [1] |
நீறு அடைந்த மேனியின் கண் நேரிழையாள் ஒருபால் கூறு அடைந்த கொள்கை அன்றி, கோல வளர் சடைமேல் ஆறு அடைந்த திங்கள் சூடி, அரவம் அணிந்தது என்னே சேறு அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே? | [2] |
ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து, கான் அடைந்த பேய்களோடு தம் கலந்து உடனே, மான் அடைந்த நோக்கி காண, மகிழ்ந்து எரி ஆடல் என்னே தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே? | [3] |
வீண் அடைந்த மும்மதிலும், வில் மலையா, அரவின் நாண் அடைந்த வெஞ்சரத்தால், நல் எரியூட்டல் என்னே பாண் அடைந்த வண்டு பாடும் பைம்பொழில் சூழ்ந்து அழகு ஆர் சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர் மேயவனே? | [4] |
பேய் அடைந்த காடு இடமாப் பேணுவது அன்றியும், போய், வேய் அடைந்த தோளி அஞ்ச, வேழம் உரித்தது என்னே வாய் அடைந்த நால்மறை ஆறு அங்கமோடு ஐவேள்வித் தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே? | [5] |
காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணம் ஆகி வந்து, வேடு அடைந்த வேடன் ஆகி, விசயனொடு எய்தது என்னே கோடு அடைந்த மால்களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள்செய் சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே? | [6] |
பீர் அடைந்த பால் அது ஆட்ட, பேணாது, அவன் தாதை வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர்த் தடிந்தான் தனக்குத் தார் அடைந்த மாலை சூட்டித் தலைமை வகுத்தது என்னே சீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே? | [7] |
மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன்தன் நா அடைந்த பாடல் கேட்டு நயந்து, அருள் செய்தது என்னே பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும் சே அடைந்த ஊர்தியானே, சேய்ஞலூர் மேயவனே? | [8] |
கார் அடைந்த வண்ணனோடு கனகம் அனையானும், பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார், சீர் அடைந்து வந்து போற்ற, சென்று அருள் செய்தது என்னே தேர் அடைந்த மா மறுகின் சேய்ஞலூர் மேயவனே? | [9] |
மாசு அடைந்த மேனியாரும், மனம் திரியாத கஞ்சி நேசு அடைந்த ஊணினாரும், நேசம் இலாதது என்னே வீசு அடைந்த தோகை ஆட, விரை கமழும் பொழில்வாய், தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே? | [10] |
சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவி, தோய் அடைந்த தண்வயல் சூழ் தோணி புரத் தலைவன்- சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன்-இன் உரைகள் வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.049  
போகம் ஆர்த்த பூண் முலையாள்
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருநள்ளாறு ; (திருத்தலம் அருள்தரு போகமார்த்தபூண்முலையம்மை உடனுறை அருள்மிகு தெர்ப்பாரணியர் திருவடிகள் போற்றி )
யாழ்ப்பாணர் அப்பதிகஇசை தம் கருவியில் அடங்காததை உணர்ந்து இக்கருவியினாலன்றோ உறவினர் ஞானசம்பந்தரையும் தன்னையும் ஏற்றத் தாழ்வு கற்பிக்க முற்பட்டனர் என, அதனை உடைத்தற்கு ஓங்கினார். ஞானசம்பந்தர் அதனைத் தடுத்து, இறைவன் பெருமை இக்கருவியில் அடங்குமெனக் கருதல் கூடாது. ஆயினும் இயன்றவாறு வாசிப்பீர் எனத் திரும்பக் கொடுத்து, இசைத் தொண்டு செய்யப் பணித்து, சிலநாள் அப்பதியில் தங்கி, திருநள்ளாறு அடைந்து போகமார்த்த பூண் முலையாள் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடி நள்ளாற்றிறைவரை வணங்கித் திருச்சாத்த மங்கைக்கு எழுந்தருளினார்.
பச்சை திருப்பதிகம் - வினை நீக்கம் - சனிக்கிரக தாக்குதல் நீங்க ஓத வேண்டிய பதிகம்
போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம் பாகம் ஆர்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல், பரமேட்டி, ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின் மேல் நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே. | [1] |
தோடு உடைய காது உடையன், தோல் உடையன், தொலையாப் பீடு உடைய போர் விடையன், பெண்ணும் ஓர்பால் உடையன், ஏடு உடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த நாடு உடைய நம் பெருமான், மேயது நள்ளாறே. | [2] |
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி, அணியிழை ஓர் பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த, மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை நால் மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே. | [3] |
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி, பல்க வல்ல தொண்டர் தம் பொன்பாத நிழல் சேர, நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே. | [4] |
ஏறு தாங்கி, ஊர்தி பேணி, ஏர் கொள் இளமதியம் ஆறு தாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி, நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே. | [5] |
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன்-இமையோர்கள், எங்கள் உச்சி எம் இறைவன்! என்று அடியே இறைஞ்ச, தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம் நங்கள் உச்சி நம்பெருமான்-மேயது நள்ளாறே. | [6] |
வெஞ்சுடர்த் தீ அங்கை ஏந்தி, விண் கொள் முழவு அதிர, அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும், போய், செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி, திகழ்தரு கண்டத்துள்ளே நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே. | [7] |
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால் சுட்டு மாட்டி, சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும், போய்ப் பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி, நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே. | [8] |
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி, அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம் எண்ணல் ஆகா, உள் வினை என்று எள்க வலித்து, இருவர் நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே. | [9] |
மாசு மெய்யர், மண்டைத் தேரர், குண்டர் குணம் இலிகள் பேசும் பேச்சை மெய் என்று எண்ணி, அந் நெறி செல்லன்மின்! மூசு வண்டு ஆர் கொன்றை சூடி, மும்மதிலும் உடனே நாசம் செய்த நம் பெருமான் மேயது நள்ளாறே. | [10] |
தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன், நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன், நல்ல பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார் உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.050  
மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி,
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருவலிவலம் ; (திருத்தலம் அருள்தரு வாளையங்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு மனத்துணைநாதர் திருவடிகள் போற்றி )
மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி, வேதனையைத் துறந்து, செய்யர் ஆனார் சிந்தையானே! தேவர் குலக்கொழுந்தே! நைவன், நாயேன்; உன்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்; வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே! | [1] |
துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன், உன் திறமே; தஞ்சம் இல்லாத் தேவர் வந்து, உன் தாள் இணைக்கீழ்ப் பணிய, நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ? நாளும் நினைந்து, அடியேன், வஞ்சம் உண்டு என்று அஞ்சுகின்றேன்-வலிவலம் மேயவனே! | [2] |
புரிசடையாய்! புண்ணியனே! நண்ணலார் மூஎயிலும் எரிய எய்தாய்! எம்பெருமான்! என்று இமையோர் பரவும் கரி உரியாய்! காலகாலா! நீலமணி மிடற்று வரி அரவா! வந்து நல்காய் வலிவலம் மேயவனே! | [3] |
தாயும் நீயே! தந்தை நீயே! சங்கரனே! அடியேன் ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது, உள்ளம்; ஆயம் ஆய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்; மாயமே என்று அஞ்சுகின்றேன்-வலிவலம் மேயவனே! | [4] |
நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்! நின்னுடைய பொன்மலையை வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனைத் தேரொடும் போய் வீழ்ந்து அலற, திருவிரலால் அடர்த்த வார் ஒடுங்கும் கொங்கை பங்கா! வலிவலம் மேயவனே! | [5] |
ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு அரிய சோதியானே! நீதி இல்லேன் சொல்லுவன், நின் திறமே; ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம் வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே! | [6] |
பொதியிலானே! பூவணத்தாய்! பொன் திகழும் கயிலைப் பதியிலானே! பத்தர் சித்தம் பற்று விடாதவனே! விதி இலாதார் வெஞ்சமணர் சாக்கியர் என்று இவர்கள் மதி இலாதார் என் செய்வாரோ? வலிவலம் மேயவனே! | [7] |
வன்னி, கொன்றை, மத்தம், சூடும் வலிவலம் மேயவனைப் பொன்னி நாடன்-புகலி வேந்தன், ஞானசம்பந்தன்-சொன்ன பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும் மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே. | [8] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.051  
வெங் கண் ஆனை ஈர்
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருச்சோபுரம் (தியாகவல்லி) ; (திருத்தலம் அருள்தரு சோபுரநாயகியம்மை உடனுறை அருள்மிகு சோபுரநாதர் திருவடிகள் போற்றி )
வெங் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து, விளங்கும் மொழி மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை கொல் ஆம்? கங்கையோடு திங்கள் சூடி, கடி கமழும் கொன்றைத் தொங்கலானே! தூய நீற்றாய்! சோபுரம் மேயவனே! | [1] |
விடை அமர்ந்து, வெண்மழு ஒன்று ஏந்தி, விரிந்து இலங்கு சடை ஒடுங்க, தண் புனலைத் தாங்கியது என்னை கொள் ஆம்? கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த, தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய்! சோபுரம் மேயவனே! | [2] |
தீயர் ஆய வல் அரக்கர் செந்தழலுள் அழுந்தச் சாய எய்து, வானவரைத் தாங்கியது என்னை கொள் ஆம்? பாயும் வெள்ளை ஏற்றை ஏறி, பாய் புலித்தோல் உடுத்த தூய வெள்ளை நீற்றினானே! சோபுரம் மேயவனே! | [3] |
பல் இல் ஓடு கையில் ஏந்தி, பல்கடையும் பலி தேர்ந்து, அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை கொல் ஆம்? வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும் தொல்லை ஊழி ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே! | [4] |
நாற்றம் மிக்க கொன்றை துன்று செஞ்சடைமேல் மதியம் ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை கொல் ஆம்? ஊற்றம் மிக்க காலன்தன்னை ஒல்க உதைத்து அருளி, தோற்றம் ஈறும் ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே! | [5] |
கொல் நவின்ற மூ இலைவேல், கூர் மழுவாள் படையன், பொன்னை வென்ற கொன்றைமாலை சூடும் பொற்பு என்னை கொல் ஆம்? அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து, அரை சேர் துன்ன வண்ண ஆடையினாய்! சோபுரம் மேயவனே! | [6] |
குற்றம் இன்மை, உண்மை, நீ என்று உன் அடியார் பணிவார், கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை கொல் ஆம்? வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு, அயன் வெண் தலையில் துற்றல் ஆன கொள்கையானே! சோபுரம் மேயவனே! | [7] |
விலங்கல் ஒன்று வெஞ்சிலையாக் கொண்டு, விறல் அரக்கர் குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை கொல் ஆம்? இலங்கை மன்னு வாள் அவுணர்கோனை எழில் விரலால் துலங்க ஊன்றிவைத்து உகந்தாய்! சோபுரம் மேயவனே! | [8] |
விடம் கொள் நாகம் மால்வரையைச் சுற்றி, விரிதிரை நீர் கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை கொல் ஆம்? இடந்து மண்ணை உண்ட மாலும், இன் மலர்மேல் அயனும், தொடர்ந்து முன்னம் காணமாட்டாச் சோபுரம் மேயவனே! | [9] |
புத்தரோடு புன்சமணர் பொய் உரையே உரைத்து, பித்தர் ஆகக் கண்டு உகந்த பெற்றிமை என்னை கொல் ஆம்? மத்தயானை ஈர் உரிவை போர்த்து, வளர் சடைமேல் துத்திநாகம் சூடினானே! சோபுரம் மேயவனே! | [10] |
சோலை மிக்க தண்வயல் சூழ் சோபுரம் மேயவனை, சீலம் மிக்க தொல்புகழ் ஆர் சிரபுரக் கோன்-நலத்தான், ஞாலம் மிக்க தண் தமிழான், ஞானசம்பந்தன்-சொன்ன கோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர், வான் உலகே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.052  
மறை உடையாய்! தோல் உடையாய்!
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருநெடுங்களம் ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாநாயகியம்மை உடனுறை அருள்மிகு நித்தியசுந்தரர் திருவடிகள் போற்றி )
இடர் களையும் பதிகம்
அவமானங்கள், வீண்பழி காரியத்திலும் தடை ஆகியனவற்றைத் தடுப்பதற்கு ஓத வேண்டிய பதிகம்.
மறை உடையாய்! தோல் உடையாய்! வார்சடை மேல் வளரும் பிறை உடையாய்! பிஞ்ஞகனே! என்று உனைப் பேசின் அல்லால், குறை உடையார் குற்றம் ஓராய்! கொள்கையினால் உயர்ந்த நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [1] |
கனைத்து எழுந்த வெண்திரை சூழ் கடல் இடை நஞ்சு தன்னைத் தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ! நின்னை மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி, இராப்பகலும் நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [2] |
நின் அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத, என் அடியான் உயிரை வவ்வேல்! என்று அடல் கூற்று உதைத்த பொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர் சுமக்கும் நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [3] |
மலை புரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்! அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா! தலை புரிந்த பலி மகிழ்வாய்! தலைவ! நின் தாள் நிழல் கீழ் நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [4] |
பாங்கின் நல்லார், படிமம் செய்வார், பாரிடமும் பலி சேர் தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி, தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ! நின் தாள் நிழல் கீழ் நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [5] |
விருத்தன் ஆகி, பாலன் ஆகி, வேதம் ஓர் நான்கு உணர்ந்து, கருத்தன் ஆகி, கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்! அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும் நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [6] |
கூறு கொண்டாய்! மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால் மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே! கொடிமேல் ஏறு கொண்டாய்! சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [7] |
குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை, அன்றி நின்ற, அரக்கர் கோனை அரு வரைக்கீழ் அடர்த்தாய்! என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி, இராப்பகலும், நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [8] |
வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும், சூழ எங்கும் நேட, ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்! கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான்! கேடு இலாப் பொன் அடியின் நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [9] |
வெஞ்சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும், தஞ்சம் இல்லாச் சாக்கியரும், தத்துவம் ஒன்று அறியார்; துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [10] |
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச் சேடர் வாழும் மா மறுகில் சிரபுரக் கோன் நலத்தால் நாட வல்ல பனுவல்மாலை, ஞானசம்பந்தன் சொன்ன பாடல் பத்தும், பாட வல்லார் பாவம் பறையுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.053  
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி )
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை சேர் நாவராயும், நண்ணு பாரும் விண் எரி கால் நீரும் மேவர் ஆய, விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் மூவர் ஆய, முதல் ஒருவன் மேயது முதுகுன்றே. | [1] |
பற்றும் ஆகி வான் உளோர்க்கு, பல் கதிரோன், மதி, பார், எற்று நீர், தீ, காலும், மேலைவிண், இயமானனோடு, மற்று மாது ஓர் பல் உயிர் ஆய், மால் அயனும் மறைகள் முற்றும் ஆகி, வேறும் ஆனான் மேயது முதுகுன்றே. | [2] |
வாரி, மாகம் வைகு திங்கள், வாள் அரவம், சூடி, நாரி பாகம் நயந்து, பூமேல் நான்முகன்தன் தலையில் சீரிது ஆகப் பலி கொள் செல்வன்; செற்றலும் தோன்றியது ஓர் மூரி நாகத்து உரிவை போர்த்தான்; மேயது முதுகுன்றே. | [3] |
பாடுவாருக்கு அருளும் எந்தை பனி முதுபௌவ முந்நீர் நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும், நாடுதானும் ஊடும் ஓடி, ஞாலமும் நான்முகனும் ஊடு காண, மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே. | [4] |
வழங்கு திங்கள், வன்னி, மத்தம், மாசுணம், மீது அணவி, செழுங் கல்வேந்தன் செல்வி காண, தேவர் திசை வணங்க, தழங்கு மொந்தை, தக்கை, மிக்க பேய்க்கணம் பூதம் சூழ, முழங்கு செந்தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே. | [5] |
சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல் அரா, நல் இதழி, சழிந்த சென்னி சைவவேடம் தான் நினைத்து, ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு மொழிந்த வாயான், முக்கண் ஆதி, மேயது முதுகுன்றே. | [6] |
மயங்கு மாயம் வல்லர் ஆகி, வானினொடு நீரும் இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்த புயங்க ராக மாநடத்தன், புணர் முலை மாது உமையாள் முயங்கு மார்பன், முனிவர் ஏத்த மேயது முதுகுன்றே. | [7] |
ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும்(ம்) அறியாக் கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும், கொய் மலரால் ஏல இண்டை கட்டி, நாமம் இசைய எப்போதும் ஏத்தும் மூல முண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே. | [8] |
உறி கொள்கையர், சீவரத்தர், உண்டு உழல் மிண்டர் சொல்லை நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழுமின்! மறி கொள் கையன், வங்க முந்நீர் பொங்கு விடத்தை உண்ட முறி கொள் மேனி மங்கை பங்கன்; மேயது முதுகுன்றே. | [9] |
மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை, பித்தர்வேடம் பெருமை என்னும் பிரமபுரத் தலைவன்...... | [10] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.054  
பூத் தேர்ந்து ஆயன கொண்டு,
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருஓத்தூர் (செய்யாறு) ; (திருத்தலம் அருள்தரு இளமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு வேதநாதர் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தர் கச்சித்திருஏகம்பப் பெருமானை வழிபடும் கருத்தினராய்ச் சீகாழியிலிருந்து புறப்பட்டுத் தில்லை சென்று ஆனந்தக் கூத்தனைப் பணிந்து மாணிகுழி, பாதிரிப் புலியூர், வடுகூர், வக்கரை இரும்பை மாகாளம் முதலிய தலங்களை வணங்கித் திருவதிகை வீரட்டம் தொழுது போற்றிக் கோவலூர் அறையணி நல்லூர் ஆகிய தலங்களை வணங்கி அண்ணாமலை சென்றடைந்தார். உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவனை வணங்கிப் பதிகங்கள் பாடி திருஓத்தூர் அடைந்து இறைவனைப் போற்றினார். சிவனடியார் ஒருவர் அடியவர்க்கெனத் தான் வளர்த்த பனைகள் அனைத்தும் ஆண்பனைகளாக இருத்தலையும் சமணர்கள் சிலர் சிவனருளால் காய்க்க வைக்க முடியுமா? என ஏளனமாகக் கேட்டதையும் ஞான சம்பந்தரிடம் கூற அவர் ஆலயம் சென்று வணங்கி, பூத்தேர்ந்தாயன என்னும் பதிகம் பாடிய அளவில் ஆண்பனைகளனைத்தும் பெண் பனைகளாய்க் குலையீன்றன. அடியவர் அதிசயித்தனர். சமணர்கள் பிழைபொறுக்க வேண்டியதோடு சைவ சமயத்தின் சிறப்பினை அறிந்து சைவ சமயத்திற்கு மதம் மாறி ஞானசம்பந்தரைப் போற்றினர்.
விவசாயம் செழிக்க, செடி கொடிகள், மலர்கள் வளர, மலர, நல்ல கனிகள் கிடைக்க
பூத் தேர்ந்து ஆயன கொண்டு, நின் பொன் அடி ஏத்தாதார் இல்லை, எண்ணுங்கால் ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக் கூத்தீர்! உம குணங்களே. | [1] |
இடை ஈர் போகா இளமுலையாளை ஓர் புடையீரே! புள்ளிமான் உரி உடையீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர்ச் சடையீரே! உம தாளே. | [2] |
உள்வேர் போல நொடிமையினார் திறம் கொள்வீர், அல்குல் ஓர் கோவணம்! ஒள் வாழைக்கனி தேன் சொரி ஓத்தூர்க் கள்வீரே! உம காதலே! | [3] |
தோட்டீரே! துத்தி ஐந்தலை நாகத்தை ஆட்டீரே! அடியார் வினை ஓட்டீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர் நாட்டீரே! அருள் நல்குமே! | [4] |
குழை ஆர் காதீர்! கொடுமழுவாள் படை உழை ஆள்வீர்! திரு ஓத்தூர் பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார் அழையாமே அருள் நல்குமே! | [5] |
மிக்கார் வந்து விரும்பிப் பலி இடத் தக்கார் தம் மக்களீர் என்று உட்காதார் உளரோ? திரு ஓத்தூர் நக்கீரே! அருள் நல்குமே! | [6] |
தாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடை நாதா! என்று நலம் புகழ்ந்து ஓதாதார் உளரோ? திரு ஓத்தூர் ஆதீரே! அருள் நல்குமே! | [7] |
என்தான் இம் மலை! என்ற அரக்கனை வென்றார் போலும், விரலினால்; ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர் என்றார் மேல் வினை ஏகுமே. | [8] |
நன்றா நால் மறையானொடு மாலும் ஆய்ச் சென்றார் போலும், திசை எலாம் ஒன்றாய்! உள் எரி ஆய் மிக, ஓத்தூர் நின்றீரே! உமை நேடியே! | [9] |
கார் அமண், கலிங்கத் துவர் ஆடையர் தேரர், சொல் அவை தேறன் மின்! ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர்ச் சீரவன், கழல் சேர்மினே! | [10] |
குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர் அரும்பு கொன்றை அடிகளை, பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல் விரும்புவார் வினை வீடே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.055  
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு,
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருமாற்பேறு ; (திருத்தலம் அருள்தரு கருணைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மால்வணங்குமீசர் திருவடிகள் போற்றி )
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, உமை நீறு சேர் திருமேனியர் சேறு சேர் வயல் தென் திருமாற் பேற்றில் மாறு இலா மணிகண்டரே. | [1] |
தொடை ஆர் மா மலர் கொண்டு, இருபோது, உம்மை அடைவார் ஆம், அடிகள்! என மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு உடையீரே! உமை உள்கியே. | [2] |
பை ஆரும் அரவம் கொடு ஆட்டிய கையான் என்று வணங்குவர் மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற ஐயா! நின் அடியார்களே. | [3] |
சால மா மலர் கொண்டு, சரண்! என்று, மேலையார்கள் விரும்புவர் மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று நீலம் ஆர் கண்ட! நின்னையே. | [4] |
மாறு இலா மணியே! என்று வானவர் ஏறவே மிக ஏத்துவர் கூறனே! குலவும் திரு மாற்பேற்றில் நீறனே! என்றும் நின்னையே. | [5] |
உரையாதார் இல்லை, ஒன்றும் நின் தன்மையை; பரவாதார் இல்லை, நாள்களும்; திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்று அரையானே! அருள் நல்கிடே! | [6] |
அரசு அளிக்கும் அரக்கன் அவன்தனை உரை கெடுத்து, அவன் ஒல்கிட வரம் மிகுத்த எம் மாற்பேற்று அடிகளைப் பரவிடக் கெடும், பாவமே. | [7] |
இருவர்தேவரும் தேடித் திரிந்து, இனி ஒருவரால் அறிவு ஒண்ணிலன், மருவு நீள்கழல் மாற்பேற்று அடிகளைப் பரவுவார் வினை பாறுமே. | [8] |
தூசு போர்த்து உழல்வார், கையில் துற்று உணும் நீசர்தம் உரை கொள்ளேலும்! தேசம் மல்கிய தென்திருமாற்பேற்றின் ஈசன் என்று எடுத்து ஏத்துமே! | [9] |
மன்னி மாலொடு சோமன் பணி செயும் மன்னும் மாற்பேற்று அடிகளை மன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல் பன்னவே, வினை பாறுமே. | [10] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.056  
கார் ஆர் கொன்றை கலந்த
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருப்பாற்றுறை ; (திருத்தலம் அருள்தரு மோகாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு திருமூலநாதர் திருவடிகள் போற்றி )
கார் ஆர் கொன்றை கலந்த முடியினர், சீர் ஆர் சிந்தை செலச் செய்தார் பாரார் நாளும் பரவிய பாற்றுறை யார், ஆர் ஆதி முதல்வரே. | [1] |
நல்லாரும் அவர்; தீயர் எனப்படும் சொல்லார்; நல்மலர் சூடினார்; பல் ஆர் வெண் தலைச் செல்வர் எம் பாற்றுறை எல்லாரும் தொழும் ஈசரே. | [2] |
விண் ஆர் திங்கள் விளங்கும் நுதலினர், எண்ணார் வந்து, என் எழில் கொண்டார் பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறை யுள் நாள்நாளும் உறைவரே. | [3] |
பூவும் திங்கள் புனைந்த முடியினர், ஏவின் அல்லார் எயில் எய்தார் பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை, ஓ! என் சிந்தை ஒருவரே. | [4] |
மாகம் தோய் மதி சூடி, மகிழ்ந்து, எனது ஆகம் பொன்நிறம் ஆக்கினார் பாகம் பெண்ணும் உடையவர், பாற்றுறை நாகம் பூண்ட நயவரே. | [5] |
போது பொன் திகழ் கொன்றை புனை முடி நாதர் வந்து, என் நலம் கொண்டார் பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை வேதம் ஓதும் விகிர்தரே. | [6] |
வாடல் வெண்தலை சூடினர், மால்விடை கோடல் செய்த குறிப்பினார் பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை ஆடல் நாகம் அசைத்தாரே. | [7] |
வெவ்வ மேனியராய், வெள்ளை நீற்றினர்; எவ்வம் செய்து, என் எழில் கொண்டார்; பவ்வநஞ்சு அடை கண்டர் எம் பாற்றுறை மவ்வல் சூடிய மைந்தரே. | [8] |
ஏனம் அன்னமும் ஆனவருக்கு எரி ஆன வண்ணத்து எம் அண்ணலார் பானல் அம்மலர் விம்மிய பாற்றுறை வான வெண்பிறை மைந்தரே. | [9] |
வெந்த நீற்றினர், வேலினர், நூலினர், வந்து என் நன் நலம் வௌவினார் பைந் தண் மாதவி சூழ்தரு பாற்றுறை மைந்தர்தாம் ஓர் மணாளரே. | [10] |
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய பத்து-நூறு பெயரனை, பத்தன் ஞானசம்பந்தனது இன் தமிழ் பத்தும் பாடிப் பரவுமே! | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.057  
ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்;
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருவேற்காடு ; (திருத்தலம் அருள்தரு வேற்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு வேற்காட்டீசுவரர் திருவடிகள் போற்றி )
ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; இவன் ஒளி வெள்ளியான் உறை வேற்காடு உள்ளியார் உயர்ந்தார்; இவ் உலகினில் தெள்ளியார்; அவர் தேவரே. | [1] |
ஆடல் நாகம் அசைத்து, அளவு இல்லது ஓர் வேடம் கொண்டவன் வேற்காடு பாடியும் பணிந்தார் இவ் உலகினில் சேடர் ஆகிய செல்வரே. | [2] |
பூதம் பாடப் புறங்காட்டு இடை ஆடி, வேதவித்தகன், வேற்காடு, போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு ஏதம் எய்துதல் இல்லையே. | [3] |
ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன், வீழ்சடையினன், வேற்காடு, தாழ்வு உடை மனத்தால், பணிந்து ஏத்திட, பாழ்படும், அவர் பாவமே. | [4] |
காட்டினானும், அயர்த்திடக் காலனை வீட்டினான், உறை வேற்காடு பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர் ஓட்டினார், வினை ஒல்லையே. | [5] |
தோலினால் உடை மேவ வல்லான், சுடர் வேலினான், உறை வேற்காடு நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர், மாலினார், வினை மாயுமே. | [6] |
மல்லல் மும்மதில் மாய்தர எய்தது ஓர் வில்லினான் உறை வேற்காடு சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர் செல்ல வல்லவர், தீர்க்கமே. | [7] |
மூரல் வெண் மதி சூடும் முடி உடை வீரன் மேவிய வேற்காடு வாரம் ஆய் வழிபாடு நினைந்தவர் சேர்வர், செய் கழல்; திண்ணமே. | [8] |
பரக்கினார் படு வெண் தலையில் பலி விரக்கினான் உறை வேற் காட்டூர், அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை நெருக்கினானை நினைமினே! | [9] |
மாறு இலா மலரானொடு மால் அவன் வேறு அலான் உறை வேற்காடு ஈறு இலா மொழியே மொழியா எழில் கூறினார்க்கு இல்லை, குற்றமே. | [10] |
விண்ட மாம்பொழில் சூழ் திரு வேற்காடு கண்டு, நம்பன் கழல் பேணி, சண்பை ஞானசம்பந்தன் செந்தமிழ் கொண்டு பாட, குணம் ஆமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.058  
அரியும், நம் வினை உள்ளன
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருக்கரவீரம் ; (திருத்தலம் அருள்தரு பிரத்தியட்சமின்னாளம்மை உடனுறை அருள்மிகு கரவீரேசுவரர் திருவடிகள் போற்றி )
அரியும், நம் வினை உள்ளன ஆசு அற வரி கொள் மாமணி போல் கண்டம் கரியவன், திகழும் கரவீரத்து எம் பெரியவன், கழல் பேணவே. | [1] |
தங்குமோ, வினை தாழ்சடை மேலவன், திங்களோடு உடன்சூடிய கங்கையான், திகழும் கரவீரத்து எம் சங்கரன், கழல் சாரவே? | [2] |
ஏதம் வந்து அடையா, இனி நல்லன பூதம் பல்படை ஆக்கிய காதலான், திகழும் கரவீரத்து எம் நாதன், பாதம் நணுகவே. | [3] |
பறையும் நம் வினை உள்ளன பாழ்பட மறையும் மாமணி போல் கண்டம் கறையவன், திகழும் கரவீரத்து எம் இறையவன், கழல் ஏத்தவே. | [4] |
பண்ணின் ஆர் மறை பாடலன், ஆடலன், விண்ணின் ஆர் மதில் எய்த முக் கண்ணினான், உறையும் கரவீரத்தை நண்ணுவார் வினை நாசமே. | [5] |
நிழலின் ஆர் மதி சூடிய நீள் சடை அழலினார், அனல் ஏந்திய கழலினார், உறையும் கரவீரத்தைத் தொழ வல்லார்க்கு இல்லை, துக்கமே. | [6] |
வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன், அண்டன், ஆர் அழல் போல் ஒளிர் கண்டனார் உறையும் கரவீரத்துத் தொண்டர்மேல் துயர் தூரமே. | [7] |
புனல் இலங்கையர் கோன் முடிபத்து இறச் சின வல் ஆண்மை செகுத்தவன், கனலவன், உறைகின்ற கரவீரம் என வல்லார்க்கு இடர் இல்லையே. | [8] |
வெள்ளத் தாமரையானொடு மாலும் ஆய்த் தெள்ள, தீத்திரள் ஆகிய கள்ளத்தான் உறையும் கரவீரத்தை உள்ளத் தான் வினை ஓயுமே. | [9] |
செடி அமணொடு சீவரத்தார் அவர் கொடிய வெவ் உரை கொள்ளேன் மின்! கடியவன் உறைகின்ற கரவீரத்து அடியவர்க்கு இல்லை, அல்லலே. | [10] |
வீடு இலான், விளங்கும் கரவீரத்து எம் சேடன் மேல் கசிவால்-தமிழ் நாடும் ஞானசம்பந்தன் சொல் இவை பாடுவார்க்கு இல்லை, பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.059  
ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு,
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருத்தூங்கானைமாடம் ; (திருத்தலம் அருள்தரு கடந்தைநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுடர்க்கொழுந்தீசர் திருவடிகள் போற்றி )
ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழியத் தவம் அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம், அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம், கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள் தோறும் மறையின் ஒலி தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம் தொழுமின்களே! | [1] |
பிணி நீர சாதல், பிறத்தல், இவை பிரியப் பிரியாத பேர் இன்பத்தோடு அணி நீர மேல் உலகம் எய்தல் உறில், அறிமின்! குறைவு இல்லை; ஆன் ஏறு உடை மணி நீலகண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும் துணி நீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே! | [2] |
சாம் நாளும் வாழ் நாளும் தோற்றம் இவை சலிப்பு ஆய வாழ்க்கை ஒழியத் தவம் ஆம் ஆறு அறியாது, அலமந்து, நீர் அயர்ந்தும் குறைவு இல்லை; ஆன் ஏறு உடைப் பூ மாண் அலங்கல் இலங்கு கொன்றை புனல் பொதிந்த புன்சடையினான் உறையும் தூ மாண் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே! | [3] |
ஊன்றும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழியத் தவம் மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம், மனம் திரிந்து, மண்ணில் மயங்காது, நீர் மூன்று மதில் எய்த மூவாச் சிலை முதல்வர்க்கு இடம்போலும் முகில் தோய் கொடி தோன்றும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே! | [4] |
மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறுஆதலால், வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின், மிக்கு ஒன்றும் வேண்டா; விமலன் இடம் உயர் தீர ஓங்கிய நாமங்களால், ஓவாது நாளும் அடி பரவல்செய் துயர் தீர்-கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே! | [5] |
பல்-நீர்மை குன்றி, செவி கேட்பு இலா, படர் நோக்கின் கண் பவளநிற நன்நீர்மை குன்றி, திரைதோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன், பொன் நீர்மை துன்றப் புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன்சடையினான்உறையும் தொல்-நீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே! | [6] |
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழியத் தவம் நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம், நீள் கழலே நாளும் நினைமின்!சென்னிப் பிறை, சூழ் அலங்கல் இலங்கு கொன்றை, பிணையும் பெருமான் பிரியாத நீர்த் துறை சூழ் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே! | [7] |
பல் வீழ்ந்து, நாத் தளர்ந்து, மெய்யில் வாடி, பழிப்பு ஆய வாழ்க்கை ஒழியத் தவம் இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும்! கல் சூழ் அரக்கன் கதறச் செய்தான், காதலியும் தானும் கருதி வாழும், தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே! | [8] |
நோயும் பிணியும் அருந்துயரமும் நுகர் உடைய வாழ்க்கை ஒழியத் தவம் வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர்மிசைய நான்முகனும், மண்ணும் விண்ணும் தாய அடி அளந்தான், காணமாட்டாத் தலைவர்க்கு இடம்போலும் தண் சோலை விண் தோயும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே! | [9] |
பகடு ஊர்பசி நலிய, நோய் வருதலால், பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய, தவம் முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடிச் சொன்ன திகழ் தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா; திருந்திழையும் தானும் பொருந்தி வாழும் துகள் தீர் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே! | [10] |
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன், நல்ல பெண்ணாகடத்துப் பெருங்கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானை மாடம் மேயான் கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணரக் கற்றாரும் கேட்டாரும் போய், விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும்; வினை மாயுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.060  
வண் தரங்கப் புனல் கமல
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு தோணியப்பர் திருவடிகள் போற்றி )
வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும் ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே! ஒளி மதியத் துண்டர், அங்கப்பூண் மார்பர், திருத் தோணிபுரத்து உறையும் பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே! | [1] |
எறி சுறவம் கழிக் கானல் இளங் குருகே! என் பயலை அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே! செறி சிறார் பதம் ஓதும் திருத் தோணிபுரத்து உறையும் வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே! | [2] |
பண் பழனக் கோட்டு அகத்து வாட்டம் இலாச் செஞ்சூட்டுக் கண்பு அகத்தின் வாரணமே! கடுவினையேன் உறு பயலை, செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து உறையும் பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ? மொழியாயே! | [3] |
காண் தகைய செங்கால் ஒண் கழி நாராய்! காதலால் பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று, வளர் சேண் தகைய மணி மாடத் திருத் தோணிபுரத்து உறையும் ஆண்தகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே! | [4] |
பாராரே, எனை ஒரு கால்; தொழுகின்றேன், பாங்கு அமைந்த கார் ஆரும் செழு நிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்! தேர் ஆரும் நெடுவீதித் திருத் தோணிபுரத்து உறையும் நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே! | [5] |
சேற்று எழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர் வீச, வீற்றிருந்த அன்னங்காள்! விண்ணோடு மண் மறைகள் தோற்றுவித்த திருத் தோணிபுரத்து ஈசன், துளங்காத கூற்று உதைத்த, திருவடியே கூடுமா கூறீரே! | [6] |
முன்றில்வாய் மடல் பெண்ணைக் குரம்பை வாழ், முயங்கு சிறை, அன்றில்காள்! பிரிவு உறும் நோய் அறியாதீர்; மிக வல்லீர்; தென்றலார் புகுந்து உலவும் திருத் தோணிபுரத்து உறையும் கொன்றை வார்சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே! | [7] |
பால் நாறும் மலர்ச் சூதப் பல்லவங்கள் அவை கோதி, ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளங்குயிலே! தேன் ஆரும் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து அமரர் கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே! | [8] |
நல் பதங்கள் மிக அறிவாய்; நான் உன்னை வேண்டுகின்றேன்; பொற்பு அமைந்த வாய் அலகின் பூவைநல்லாய்! போற்றுகின்றேன்; சொல்பதம் சேர் மறையாளர் திருத் தோணிபுரத்து உறையும் வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய்ப் பயலை விளம்பாயே! | [9] |
சிறை ஆரும் மடக்கிளியே! இங்கே வா! தேனோடு பால் முறையாலே உணத் தருவன்; மொய் பவளத்தொடு தரளம் துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன், துளங்கும் இளம் பிறையாளன், திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே! | [10] |
போர் மிகுத்த வயல்-தோணிபுரத்து உறையும் புரிசடை எம் கார் மிகுத்த கறைக் கண்டத்து இறையவனை, வண்கமலத் தார் மிகுத்த வரைமார்பன்-சம்பந்தன்-உரைசெய்த சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.061  
நறை கொண்ட மலர் தூவி,
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருச்செங்காட்டங்குடி ; (திருத்தலம் அருள்தரு திருக்குழல்மாதம்மை உடனுறை அருள்மிகு கணபதீசுவரர் திருவடிகள் போற்றி )
நறை கொண்ட மலர் தூவி, விரை அளிப்ப, நாள் தோறும் முறை கொண்டு நின்று, அடியார் முட்டாமே பணி செய்ய, சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள், கறை கொண்ட கண்டத்தான்-கணபதீச்சரத்தானே. | [1] |
வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப, ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவாச் சீர் ஏற்றம் உடைத்து ஆய செங்காட்டங்குடி அதனுள், கார் ஏற்ற கொன்றையான்-கணபதீச்சரத்தானே. | [2] |
வரந்தையான், சோபுரத்தான், மந்திரத்தான், தந்திரத்தான், கிரந்தையான், கோவணத்தான், கிண்கிணியான், கையது ஓர் சிரந்தையான், செங்காட்டங்குடியான், செஞ்சடைச் சேரும் கரந்தையான், வெண் நீற்றான்-கணபதீச்சரத்தானே. | [3] |
தொங்கலும் கமழ்சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு, அங்கையால் தொழுது ஏத்த, அருச்சுனற்கு அன்று அருள்செய்தான்; செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள், கங்கை சேர் வார்சடையான்-கணபதீச்சரத்தானே. | [4] |
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி, நூலினால் மணமாலை கொணர்ந்து, அடியார் புரிந்து ஏத்த, சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள், காலினால் கூற்று உதைத்தான்-கணபதீச்சரத்தானே. | [5] |
நுண்ணியான், மிகப் பெரியான், நோய் உளார் வாய் உளான், தண்ணியான், வெய்யான், நம் தலைமேலான், மனத்து உளான், திண்ணியான், செங்காட்டங்குடியான், செஞ்சடை மதியக் கண்ணியான், கண் நுதலான்-கணபதீச்சரத்தானே. | [6] |
மையின் ஆர் மலர் நெடுங்கண் மலைமகள் ஓர் பாகம் ஆம் மெய்யினான், பை அரவம் அரைக்கு அசைத்தான், மீன் பிறழ் அச் செய்யின் ஆர் அகன் கழனிச் செங்காட்டங்குடி அதனுள் கையின் ஆர் கூர் எரியான்-கணபதீச்சரத்தானே. | [7] |
தோடு உடையான், குழை உடையான், அரக்கன்தன் தோள் அடர்த்த பீடு உடையான், போர் விடையான், பெண் பாகம் மிகப் பெரியான், சேடு உடையான், செங்காட்டங்குடி உடையான், சேர்ந்து ஆடும் காடு உடையான், நாடு உடையான்-கணபதீச்சரத்தானே. | [8] |
ஆன் ஊரா உழி தருவான், அன்று இருவர் தேர்ந்து உணரா வான் ஊரான், வையகத்தான், வாழ்த்துவார் மனத்து உளான், தேனூரான், செங்காட்டங்குடியான், சிற்றம்பலத்தான், கானூரான், கழுமலத்தான்-கணபதீச்சரத்தானே. | [9] |
செடி நுகரும் சமணர்களும், சீவரத்த சாக்கியரும் படி நுகராது அயர் உழப்பார்க்கு அருளாத பண்பினான்; பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாகக் கடி நகர் ஆய் வீற்றிருந்தான்-கணபதீச்சரத்தானே. | [10] |
கறை இலங்கு மலர்க்குவளை கண் காட்டக் கடிபொழிலின் நறை இலங்கு வயல் காழித் தமிழ் ஞானசம்பந்தன், சிறை இலங்கு புனல் படப்பைச் செங்காட்டங்குடி சேர்த்தும் மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.062  
நாள் ஆய போகாமே, நஞ்சு
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருக்கோளிலி (திருக்குவளை) ; (திருத்தலம் அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு கோளிலியப்பர் திருவடிகள் போற்றி )
நாள் ஆய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே ஆள் ஆய அன்பு செய்வோம்; மட நெஞ்சே! அரன் நாமம் கேளாய்! நம் கிளை கிளைக்கும் கேடு படாத் திறம் அருளிக் கோள் ஆய நீக்குமவன்-கோளிலி எம்பெருமானே. | [1] |
ஆடு அரவத்து, அழகு ஆமை, அணி கேழல் கொம்பு, ஆர்த்த தோடு அரவத்து ஒரு காதன், துணை மலர் நல் சேவடிக்கே பாடு அரவத்து இசை பயின்று, பணிந்து எழுவார் தம் மனத்தில் கோடரவம் தீர்க்குமவன்-கோளிலி எம்பெருமானே. | [2] |
நன்று நகு நாள்மலரால், நல் இருக்கு மந்திரம் கொண்டு, ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல் கன்றி வரு காலன் உயிர் கண்டு, அவனுக்கு அன்று அளித்தான்- கொன்றைமலர் பொன் திகழும் கோளிலி எம்பெருமானே. | [3] |
வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும் சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அத் தந்தைதனைச் சாடுதலும், சண்டீசன் என்று அருளி, கொந்து அணவும் மலர் கொடுத்தான்-கோளிலி எம்பெருமானே. | [4] |
வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி, வைகலும் நல் பூசனையால், நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி எனவே நினையும் பஞ்சவரில் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்து உகந்தான்- கொஞ்சுகிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே. | [5] |
தாவியவன் உடன் இருந்தும் காணாத தற்பரனை, ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி, அங்கணன் என்று ஆதரிக்கும் நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன்- கோ இயலும் பூ எழு கோல் கோளிலி எம்பெருமானே. | [6] |
கல்-நவிலும் மால்வரையான், கார் திகழும் மாமிடற்றான், சொல்-நவிலும் மாமறையான், தோத்திரம் செய் வாயின் உளான், மின் நவிலும் செஞ்சடையான்; வெண்பொடியான், அம் கையினில் கொல்-நவிலும் சூலத்தான்-கோளிலி எம்பெருமானே. | [7] |
அந்தரத்தில்-தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப, சுந்தரத் தன் திருவிரலால் ஊன்ற, அவன் உடல் நெரிந்து, மந்திரத்த மறை பாட, வாள் அவனுக்கு ஈந்தானும் கொந்து அரத்த மதிச் சென்னிக் கோளிலி எம்பெருமானே. | [8] |
நாணம் உடை வேதியனும் நாரணனும் நண்ண ஒணாத் தாணு, எனை ஆள் உடையான், தன் அடியார்க்கு அன்பு உடைமை பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான்- கோணல் இளம்பிறைச் சென்னிக் கோளிலி எம்பெருமானே. | [9] |
தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல் இடுக்கண் வரும் மொழி கேளாது, ஈசனையே ஏத்துமின்கள்! நடுக்கம் இலா அமருலகம் நண்ணலும் ஆம்; அண்ணல் கழல் கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலி எம்பெருமானே. | [10] |
நம்பனை, நல் அடியார்கள் நாம் உடை மாடு என்று இருக்கும் கொம்பு அனையாள் பாகன், எழில் கோளிலி எம்பெருமானை, வம்பு அமரும் தண் காழிச் சம்பந்தன் வண் தமிழ் கொண்டு இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள், ஈசனையே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.012  
சொல் மாலை பயில்கின்ற குயில்
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருப்பழனம் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி )
விடம் கண்டு இறந்த மூத்த திருநாவுக் கரசு, அப்பரின் இறை பதிகத்தால், உறங்கி எழுவாரைப்போல எழுந்து பணிந்தார். அப்பூதியாரின் வேண்டுகோளின்படி மீண்டும் அவர்தம் வீட்டிற்கு எழுந்தருளி எல்லோரையும் ஒக்க இருக்கச்செய்து அமுது செய்தருளினார். பின் சில நாட்கள் திங்களூரில் தங்கியிருந்து அப்பூதி அடிகளுடன் திருப்பழனம் சென்று பணிந்து பாடினார். அங்குப் பாடிய திருப்பதிகத்தில் அப்பூதி அடிகளின் பெருமையையும் அமைத்துப் பாடினார்.
சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள்! சொல்லீரே- பல் மாலை வரிவண்டு பண் மிழற்றும் பழனத்தான், முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடிச் சென்னிப் பொன் மாலை மார்பன்(ன்), என புது நலம் உண்டு இகழ்வானோ? | [1] |
கண்டகங்காள்! முண்டகங்காள்! கைதைகாள்! நெய்தல்காள பண்டரங்க வேடத்தான், பாட்டு ஓவாப் பழனத்தான், வண்டு உலா(அ)ம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர்வண்ணம் கொண்ட(ந்)நாள் தான் அறிவான், குறிக் கொள்ளா தொழிவானோ? | [2] |
மனைக் காஞ்சி இளங் குருகே! மறந்தாயோ?-மத முகத்த பனைக்கை மா உரி போர்த்தான், பலர் பாடும் பழனத்தான், நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ, நிகழ் வண்டே?- சுனைக்கு வளைமலர்க்கண்ணாள் சொல்-தூது ஆய்ச் சோர்வார் | [3] |
புதியை ஆய் இனியை ஆம் பூந் தென்றல்! புறங்காடு பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான், மதியா தார் வேள்வி தனை மதித்திட்ட மதி கங்கை விதியாளன், என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ? | [4] |
மண் பொருந்தி வாழ்பவர்க்கும், மா தீர்த்த வேதியர்க்கும், விண் பொருந்து தேவர்க்கும், வீடு பேறு ஆய் நின்றானை; பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை, என் கண் பொருந்தும் போழ் தத்தும், கைவிட நான் கடவேனோ? | [5] |
பொங்கு ஓதமால் கடலில் புறம் புறம் போய் இரை தேரும் செங்கால் வெண் மட நாராய்! செயல் படுவது அறியேன், நான்! அம் கோல வளை கவர்ந்தான், அணி பொழில் சூழ் பழனத்தான், தம் கோல நறுங்கொன்றைத்தார் அருளா தொழி வானோ? | [6] |
துணை ஆர முயங்கிப் போய்த் துறை சேரும் மடநாராய்! பணை ஆரவாரத்தான், பாட்டு ஓவாப் பழனத்தான், கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடி செய்த இணை ஆர மார்பன்(ன்) என் எழில் நலம் உண்டு இகழ்வானோ? | [7] |
கூவைவாய் மணி வரன்றிக் கொழித்து ஓடும் காவிரிப்பூம்- பாவை வாய் முத்து இலங்கப் பாய்ந்து ஆடும் பழனத்தான், கோவைவாய் மலைமகள் கோன், கொல் ஏற்றின் கொடி ஆடைப் பூவைகாள்! மழலைகாள்! போகாத பொழுது உளதே? | [8] |
புள்ளிமான் பொறி அரவம், புள் உயர்த்தான் மணி நாகப்- பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான் உள்ரூவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர், உலகு எல்லாம்; கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ? | [9] |
வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும், பஞ்சிக்கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான் அஞ்சிப் போய்க் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி குஞ்சிப் பூ ஆய் நின்ற சேவடியாய்!-கோடு இயையே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.013  
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால் யாதொன்றும் இடகிலேன்; அமணர்கள் தம் அறவுரை கேட்டு அலமந்தேன்; தொடர்கின்றேன், -உன்னுடைய தூ மலர்ச் சேவடி காண்பான், அடைகின்றேன்; ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [1] |
செம்பவளத் திரு உருவர், திகழ் சோதி, குழைக் காதர் கொம்பு அமரும் கொடிமருங்குல் கோல் வளையாள் ஒருபாகர், வம்பு அவிழும் மலர்க்கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த அம் பவள ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [2] |
நணியானே! சேயானே! நம்பானே! செம் பொன்னின் துணியானே! தோலானே! சுண்ண வெண் நீற்றானே! மணியானே! வானவர்க்கு மருந்து ஆகிப் பிணி தீர்க்கும் அணியானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [3] |
ஊழித் தீ ஆய் நின்றாய்! உள்குவார் உள்ளத்தாய்! வாழித் தீ ஆய் நின்றாய்! வாழ்த்துவார் வாயானே! பாழித் தீ ஆய் நின்றாய்! படர் சடை மேல் பனிமதியம் ஆழித் தீ ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [4] |
சடையானே! சடை இடையே தவழும் தண் மதியானே! விடையானே! விடை ஏறிப் புரம் எரித்த வித்தகனே! உடையானே! உடை தலை கொண்டு ஊர் ஊர் உண் பலிக்கு உழலும் அடையானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [5] |
நீரானே! தீயானே! நெதியானே! கதியானே! ஊரானே! உலகானே! உடலானே! உயிரானே! பேரானே! பிறை சூடீ! பிணி தீர்க்கும் பெருமான்! என்று ஆராத ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [6] |
கண் ஆனாய்! மணி ஆனாய்! கருத்து ஆனாய்! அருத்து ஆனாய்! எண் ஆனாய்! எழுத்து ஆனாய்! எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய்! விண் ஆனாய்! விண் இடையே புரம் எரித்த வேதியனே! அண் ஆன ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [7] |
மின் ஆனாய்! உரும் ஆனாய்! வேதத்தின் பொருள் ஆனாய்! பொன் ஆனாய்! மணி ஆனாய்! பொரு கடல் வாய் முத்து ஆனாய்! நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி அன்னானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [8] |
முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்தப் பத்தர் பலர் நீர் மூழ்கிப் பலகாலும் பணிந்து ஏத்த, எத்திசையும் வானவர்கள், எம்பெருமான் என இறைஞ்சும் அத் திசை ஆம் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [9] |
கருவரை சூழ் கடல் இலங்கைக் கோமானைக் கருத்து அழியத் திரு விரலால் உதகரணம் செய்து உகந்த சிவமூர்த்தி, பெருவரை சூழ் வையகத்தார், பேர் நந்தி என்று ஏத்தும் அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.001  
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் திருவடிகள் போற்றி )
சிவபெருமான் திருவருளால், பெண்ணாகடம் தலத்தில் தனது உடலில் சூலம் மற்றும் இடபக் குறிகள் பொறிக்கப் பெற்ற பின்னர் அப்பர் பிரான் தில்லை வந்தடைந்தார். பத்தனாய் பாடமாட்டேன் என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடி சில நாட்கள் தில்லைப் பதியில் உழவாரப் பணி செய்துவந்தார். சிவபிரான் தன்னுடன் நேரில் பேசி அருளியதால் மிகவும் அகமகிழ்ந்த அப்பர் பிரான், தில்லையில் உழவாரப் பணிகள் செய்த போது பாடிய பதிகம் இது. உள்ளத்தில் இருந்து எழுந்த அன்பொடு செய்யப்பட்ட பணி என்பதால், கண்களிலிருந்து பொழிந்த ஆனந்தக் கண்ணீர், உடலில் பூசப்பட்டிருந்த திருநீற்றுடன் கலந்து வண்டலாக மாறியது என்று சேக்கிழார் கூறுகின்றார். சிதம்பரத்தில் அன்னதானம் இன்றும் சிறப்பாக நடைபெறுவதை நாம் காணலாம். அப்பர் பிரான் காலத்திலும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்று இருக்கவேண்டும் அதனால் தான் அன்னம் பாலிக்கும் என்று இந்தப் பதிகத்தினை தொடங்குகின்றார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. தினமும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் கோயில் தில்லைச் சிற்றம்பலம்.
சாப்பாடு குறைவின்றி கிடைக்க. உணவிற்கு முன் கூற வேண்டிய பாடல்.
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே | [1] |
அரும்பு அற்றப் பட ஆய் மலர் கொண்டு, நீர், சுரும்பு அற்றப் படத் தூவி, தொழுமினோ- கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன், பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே! | [2] |
அரிச்சு உற்ற(வ்) வினையால் அடர்ப்புண்டு, நீர், எரிச் சுற்றக் கிடந்தார் என்று அயலவர் சிரிச்சு உற்றுப் பல பேசப்படாமுனம், திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே! | [3] |
அல்லல் என் செயும்? அருவினை என் செயும்? தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும்?- தில்லை மா நகர்ச் சிற்றம்பலவனார்க்கு எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே. | [4] |
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம் நான் நிலாவி இருப்பன், என் நாதனை; தேன் நிலாவிய சிற்றம்பலவனார் வான் நிலாவி இருக்கவும் வைப்பரே. | [5] |
சிட்டர், வானவர், சென்று வரம் கொளும் சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலத்து உறை சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச் சிட்டர்பால் அணுகான், செறு காலனே. | [6] |
ஒருத்தனார், உலகங்கட்கு ஒரு சுடர், திருத்தனார், தில்லைச் சிற்றம்பலவனார், விருத்தனார், இளையார், விடம் உண்ட எம் அருத்தனார், அடியாரை அறிவரே. | [7] |
விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா கண் நிறைந்த கடிபொழில் அம்பலத்து உள்-நிறைந்து நின்று ஆடும், ஒருவனே. | [8] |
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம் வல்லை வட்டம் மதில் மூன்று உடன்மாய்த்தவன் தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை ஒல்லை, வட்டம் கடந்து, ஓடுதல் உண்மையே. | [9] |