சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.055
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, பண் - பழந்தக்கராகம் (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=2BP39HT21GU |
1.114
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குருந்து அவன், குருகு அவன், பண் - வியாழக்குறிஞ்சி (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=VuAmAPZ_kNI |
4.108
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாணிக்கு உயிர் பெறக் கூற்றை பண் - திருவிருத்தம் (திருமாற்பேறு அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=M5NdWJa-QAU |
5.059
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொரும் ஆற்றின் படை வேண்டி, பண் - திருக்குறுந்தொகை (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=t4fuho-6aPw |
5.060
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஏதும் ஒன்றும் அறிவு இலர் பண் - திருக்குறுந்தொகை (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=mvMHyNjAJWg |
6.080
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாரானை; பாரினது பயன் ஆனானை; பண் - திருத்தாண்டகம் (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=a7WooUMXuEM |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.055  
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு,
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருமாற்பேறு ; (திருத்தலம் அருள்தரு கருணைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மால்வணங்குமீசர் திருவடிகள் போற்றி )
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, உமை நீறு சேர் திருமேனியர் சேறு சேர் வயல் தென் திருமாற் பேற்றில் மாறு இலா மணிகண்டரே. | [1] |
தொடை ஆர் மா மலர் கொண்டு, இருபோது, உம்மை அடைவார் ஆம், அடிகள்! என மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு உடையீரே! உமை உள்கியே. | [2] |
பை ஆரும் அரவம் கொடு ஆட்டிய கையான் என்று வணங்குவர் மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற ஐயா! நின் அடியார்களே. | [3] |
சால மா மலர் கொண்டு, சரண்! என்று, மேலையார்கள் விரும்புவர் மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று நீலம் ஆர் கண்ட! நின்னையே. | [4] |
மாறு இலா மணியே! என்று வானவர் ஏறவே மிக ஏத்துவர் கூறனே! குலவும் திரு மாற்பேற்றில் நீறனே! என்றும் நின்னையே. | [5] |
உரையாதார் இல்லை, ஒன்றும் நின் தன்மையை; பரவாதார் இல்லை, நாள்களும்; திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்று அரையானே! அருள் நல்கிடே! | [6] |
அரசு அளிக்கும் அரக்கன் அவன்தனை உரை கெடுத்து, அவன் ஒல்கிட வரம் மிகுத்த எம் மாற்பேற்று அடிகளைப் பரவிடக் கெடும், பாவமே. | [7] |
இருவர்தேவரும் தேடித் திரிந்து, இனி ஒருவரால் அறிவு ஒண்ணிலன், மருவு நீள்கழல் மாற்பேற்று அடிகளைப் பரவுவார் வினை பாறுமே. | [8] |
தூசு போர்த்து உழல்வார், கையில் துற்று உணும் நீசர்தம் உரை கொள்ளேலும்! தேசம் மல்கிய தென்திருமாற்பேற்றின் ஈசன் என்று எடுத்து ஏத்துமே! | [9] |
மன்னி மாலொடு சோமன் பணி செயும் மன்னும் மாற்பேற்று அடிகளை மன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல் பன்னவே, வினை பாறுமே. | [10] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.114  
குருந்து அவன், குருகு அவன்,
பண் - வியாழக்குறிஞ்சி (திருத்தலம் திருமாற்பேறு ; (திருத்தலம் அருள்தரு கருணைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மால்வணங்குமீசர் திருவடிகள் போற்றி )
குருந்து அவன், குருகு அவன், கூர்மை அவன், பெருந்தகை, பெண் அவன், ஆணும் அவன், கருந்தட மலர்க்கண்ணி காதல் செய்யும் மருந்து அவன், வள நகர் மாற்பேறே. | [1] |
பாறு அணி வெண்தலை கையில் ஏந்தி, வேறு அணி பலி கொளும் வேட்கையனாய், நீறு அணிந்து, உமை ஒருபாகம் வைத்த மாறு இலி வள நகர் மாற்பேறே. | [2] |
கரு உடையார் உலகங்கள் வேவ, செரு விடை ஏறி முன் சென்று நின்று, உரு உடையாள் உமையாளும் தானும் மருவிய வள நகர் மாற்பேறே. | [3] |
தலையவன், தலை அணிமாலை பூண்டு கொலை நவில் கூற்றினைக் கொன்று உகந்தான், கலை நவின்றான், கயிலாயம் என்னும் மலையவன், வள நகர் மாற்பேறே. | [4] |
துறை அவன், தொழிலவன், தொல் உயிர்க்கும் பிறை அணி சடை முடிப் பெண் ஓர்பாகன், கறை அணி மிடற்று அண்ணல், காலன் செற்ற மறையவன், வள நகர் மாற்பேறே. | [5] |
பெண்ணின் நல்லாளை ஓர்பாகம் வைத்துக் கண்ணினால் காமனைக் காய்ந்தவன்தன், விண்ணவர் தானவர் முனிவரொடு மண்ணவர் வணங்கும், நல் மாற்பேறே. | [6] |
தீது இலா மலை எடுத்த அரக்கன் நீதியால் வேத கீதங்கள் பாட, ஆதியான் ஆகிய அண்ணல், எங்கள் மாதி தன் வள நகர் மாற்பேறே. | [7] |
செய்ய தண் தாமரைக் கண்ணனொடும் கொய் அணி நறுமலர் மேல் அயனும் ஐயன் நன் சேவடி அதனை உள்க, மையல் செய் வள நகர் மாற்பேறே. | [8] |
குளித்து உணா அமணர், குண்டு ஆக்கர், என்றும் களித்து நன் கழல் அடி காணல் உறார்; முளைத்த வெண்மதியினொடு அரவம் சென்னி வளைத்தவன் வள நகர் மாற்பேறே. | [9] |
அந்தம் இல் ஞானசம்பந்தன் நல்ல செந்து இசை பாடல் செய் மாற்பேற்றைச் சந்தம் இன் தமிழ்கள் கொண்டு ஏத்த வல்லார் எந்தை தன் கழல் அடி எய்துவரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.108  
மாணிக்கு உயிர் பெறக் கூற்றை
பண் - திருவிருத்தம் (திருத்தலம் திருமாற்பேறு ; (திருத்தலம் அருள்தரு அபிராமியம்மை உடனுறை அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருவடிகள் போற்றி )
மாணிக்கு உயிர் பெறக் கூற்றை உதைத்தன; மாவலிபால் காணிக்கு இரந்தவன் காண்டற்கு அரியன; கண்ட தொண்டர் பேணிக் கிடந்து பரவப்படுவன; பேர்த்தும் அஃதே; மாணிக்கம் ஆவன-மாற்பேறு உடையான் மலர் அடியே. | [1] |
கருடத் தனிப்பாகன் காண்டற்கு அரியன; காதல் செய்யில் குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன; கோலம் மல்கும் செருடக் கடிமலர்ச் செல்வி தன் செங்கமலக்கரத்தால் வருடச் சிவப்பன-மாற்பேறு உடையான் மலர் அடியே. | [2] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.059  
பொரும் ஆற்றின் படை வேண்டி,
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருமாற்பேறு ; (திருத்தலம் அருள்தரு கருணைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மால்வணங்குமீசர் திருவடிகள் போற்றி )
பொரும் ஆற்றின் படை வேண்டி, நல் பூம் புனல் வரும் ஆற்றின் மலர் கொண்டு, வழிபடும் கருமாற்கு இன் அருள் செய்தவன் காண்தகு திரு மாற்பேறு தொழ, வினை தேயுமே. | [1] |
ஆலத்து ஆர் நிழலில்(ல்) அறம் நால்வர்க்குக் கோலத்தால் உரைசெய்தவன், குற்றம் இல் மாலுக்கு ஆர் அருள் செய்தவன், மாற்பேறு ஏலத்தான் தொழுவார்க்கு இடர் இல்லையே. | [2] |
துணி வண்ணச் சுடர் ஆழி கொள்வான் எண்ணி, அணி வண்ணத்து அலர்கொண்டு, அடி அர்ச்சித்த மணி வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு பணி வண்ணத்தவர்க்கு இல்லைஆம், பாவமே. | [3] |
தீது அவை செய்து தீவினை வீழாதே, காதல் செய்து கருத்தினில் நின்ற நல் மா தவர் பயில் மாற்பேறு கைதொழப் போதுமின்! வினை ஆயின போகுமே. | [4] |
வார் கொள் மென்முலை மங்கை ஓர் பங்கினன், வார் கொள் நல்முரசம்(ம்) அறைய(வ்) அறை வார் கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு- வார்கள் மன்னுவர், பொன்னுலகத்திலே. | [5] |
பண்டை வல்வினை பற்று அறுக்கும் வகை உண்டு; சொல்லுவன்; கேண்மின்: ஒளி கிளர் வண்டு சேர் பொழில் சூழ் திரு மாற்பேறு கண்டு கைதொழ, தீரும், கவலையே. | [6] |
மழுவலான் திருநாமம் மகிழ்ந்து உரைத்து அழ வலார்களுக்கு, அன்புசெய்து இன்பொடும் வழு இலா அருள்செய்தவன் மாற்பேறு தொழ வலார் தமக்கு, இல்லை, துயரமே. | [7] |
முன்னவன்(ன்), உலகுக்கு; முழுமணிப் பொன் அவன், திகழ் முத்தொடு; போகம் ஆம் மன்னவன்; திரு மாற்பேறு கைதொழும் அன்னவர் எமை ஆள் உடையார்களே. | [8] |
வேடனாய் விசய(ன்)னொடும் எய்து வெங் காடு நீடு உகந்து, ஆடிய கண்ணுதல்- மாடம் நீடு உயரும்-திரு மாற்பேறு பாடுவார் பெறுவார், பரலோகமே. | [9] |
கருத்தனாய்க் கயிலாய மலை தனைத் தருக்கினால் எடுத்தானைத் தகரவே வருத்தி, ஆர் அருள் செய்தவன் மாற்பேறு அருத்தியால்-தொழுவார்க்கு இல்லை, அல்லலே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.060  
ஏதும் ஒன்றும் அறிவு இலர்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருமாற்பேறு ; (திருத்தலம் அருள்தரு கருணைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மால்வணங்குமீசர் திருவடிகள் போற்றி )
ஏதும் ஒன்றும் அறிவு இலர் ஆயினும், ஓதி அஞ்சு எழுத்தும்(ம்) உணர்வார்கட்குப் பேதம் இன்றி, அவர் அவர் உள்ளத்தே மாதும் தாமும் மகிழ்வர், மாற்பேறரே. | [1] |
அச்சம் இல்லை; நெஞ்சே! அரன் நாமங்கள் நிச்சலும் நினையாய், வினை போய் அற! கச்ச மா விடம் உண்ட கண்டா! என, வைச்ச மா நிதி ஆவர், மாற்பேறரே. | [2] |
சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்! கோத்திர(ம்) மும் குலமும் கொண்டு என் செய்வீர்? பாத்திரம் சிவன் என்று பணிதிரேல், மாத்திரைக்குள் அருளும், மாற்பேறரே. | [3] |
இருந்து சொல்லுவன்; கேண்மின்கள்: ஏழைகாள்! அருந்தவம் தரும், அஞ்சு எழுத்து ஓதினால்; பொருந்து நோய் பிணி போகத் துரப்பது ஓர் மருந்தும் ஆகுவர், மன்னும் மாற்பேறரே. | [4] |
சாற்றிச் சொல்லுவன்; கேண்மின்: தரணியீர்! ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால், கூற்றை நீக்கிக் குறைவு அறுத்து ஆள்வது ஓர் மாற்று இலாச் செம்பொன் ஆவர், மாற்பேறரே. | [5] |
ஈட்டும் மா நிதி சால இழக்கினும், வீட்டும் காலன் விரைய அழைக்கினும், காட்டில் மாநடம் ஆடுவாய், கா! எனில், வாட்டம் தீர்க்கவும் வல்லர், மாற்பேறரே. | [6] |
ஐயனே! அரனே! என்று அரற்றினால், உய்யல் ஆம்; உலகத்தவர் பேணுவர்; செய்ய பாதம் இரண்டும் நினையவே, வையம் ஆளவும் வைப்பர், மாற்பேறரே. | [7] |
உந்திச் சென்று மலையை எடுத்தவன் சந்து தோளொடு தாள் இற ஊன்றினான் மந்தி பாய் பொழில் சூழும்-மாற்பேறு என, அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே. | [8] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.080  
பாரானை; பாரினது பயன் ஆனானை;
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருமாற்பேறு ; (திருத்தலம் அருள்தரு கருணைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மால்வணங்குமீசர் திருவடிகள் போற்றி )
பாரானை; பாரினது பயன் ஆனானை; படைப்பு ஆகிப் பல் உயிர்க்கும் பரிவோன் தன்னை; ஆராத இன்னமுதை, அடியார் தங்கட்கு, அனைத்து உலகும் ஆனானை; அமரர் கோனை; கார் ஆரும் கண்டனை; கயிலை வேந்தை; கருதுவார் மனத்தானை; காலற் செற்ற சீரானை; செல்வனை; திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே. | [1] |
விளைக்கின்ற நீர் ஆகி, வித்தும் ஆகி, விண்ணோடு மண் ஆகி, விளங்கு செம்பொன் துளைக்கின்ற துளை ஆகி, சோதி ஆகி, தூண்ட(அ)ரிய சுடர் ஆகி, துளக்கு இல் வான் மேல் முளைக்கின்ற கதிர் மதியும் அரவும் ஒன்றி முழங்கு ஒலி நீர்க்கங்கையொடு மூவாது என்றும் திளைக்கின்ற சடையானை; திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே. , விளைக்கின்ற நீர் ஆகி, வித்தும் ஆகி, விண்ணோடு மண் ஆகி, விளங்கு செம்பொன் துளைக்கின்ற துளை ஆகி, சோதி ஆகி, தூண்ட(அ)ரிய சுடர் ஆகி, துளக்கு இல் வான் மேல் முளைக்கின்ற கதிர் மதியும் அரவும் ஒன்றி முழங்கு ஒலி நீர்க்கங்கையொடு மூவாது என்றும் திளைக்கின்ற சடையானை; திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே. | [2] |
மலைமகள் தம்கோன் அவனை, மாநீர் முத்தை, மரகதத்தை, மாமணியை, மல்கு செல்வக் கலை நிலவு கையானை, கம்பன் தன்னை, காண்பு இனிய செழுஞ்சுடரைக், கனகக் குன்றை, விலை பெரிய வெண் நீற்று மேனியானை, மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை, சிலை நிலவு கரத்தானை, திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை, சென்று அடைந்தேன், நானே. | [3] |
உற்றானை, உடல் தனக்கு ஓர் உயிர் ஆனானை, ஓங்காரத்து ஒருவனை, அங்கு உமை ஓர்பாகம் பெற்றானை, பிஞ்ஞகனை, பிறவாதானை, பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே கற்றானை, கற்பனவும் தானே ஆய கச்சி ஏகம்பனை, காலன் வீழச் செற்றானை, திகழ் ஒளியை, திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே. | [4] |
நீறு ஆகி, நீறு உமிழும் நெருப்பும் ஆகி, நினைவு ஆகி, நினைவு இனிய மலையான் மங்கை கூறு ஆகி, கூற்று ஆகி, கோளும் ஆகி, குணம் ஆகி, குறையாத உவகைக் கண்ணீர் ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அநாசாரம் பொறுத்து அருளி, அவர்மேல் என்றும் சீறாத பெருமானை; திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே. | [5] |
மருவு இனிய மறைப் பொருளை, மறைக்காட்டானை, மறப்பு இலியை, மதி ஏந்து சடையான் தன்னை, உரு நிலவும் ஒண்சுடரை, உம்பரானை, உரைப்பு இனிய தவத்தானை, உலகின் வித்தை, கரு நிலவு கண்டனை, காளத்தி(ய்)யை, கருதுவார் மனத்தானை, கல்விதன்னை, செரு நிலவு படையானை, திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை, சென்று அடைந்தேன், நானே. | [6] |
பிறப்பானை, பிறவாத பெருமையானை, பெரியானை, அரியானை, பெண் ஆண் ஆய நிறத்தானை, நின் மலனை, நினையாதாரை நினையானை, நினைவோரை நினைவோன் தன்னை, அறத்தானை, அறவோனை, ஐயன் தன்னை, அண்ணல் தனை, நண்ண(அ)ரிய அமரர் ஏத்தும் திறத்தானை, திகழ் ஒளியை, திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை, சென்று அடைந்தேன், நானே. | [7] |
வானகத்தில் வளர் முகிலை, மதியம் தன்னை, வணங்குவார் மனத்தானை, வடிவு ஆர் பொன்னை, ஊன் அகத்தில் உறுதுணையை, உலவாதானை, ஒற்றியூர் உத்தமனை, ஊழிக் கன்றை, கானகத்துக் கருங்களிற்றை, காளத்தி(ய்)யை, கருதுவார் கருத்தானை, கருவை, மூலத் தேன் அகத்தில் இன்சுவையை, திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை, சென்று அடைந்தேன், நானே. | [8] |
முற்றாத முழுமுதலை; முளையை; மொட்டை; முழுமலரின் மூர்த்தியை; முனியாது என்றும் பற்று ஆகிப் பல் உயிர்க்கும் பரிவோன் தன்னை; பராபரனை; பரஞ்சுடரை; பரிவோர் நெஞ்சில் உற்றானை; உயர் கருப்புச் சிலையோன் நீறு ஆய் ஒள் அழல்வாய் வேவ உறும் நோக்கத்தானை; செற்றானை, திரிபுரங்கள்; திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே. | [9] |
விரித்தானை, நால் மறையோடு அங்கம் ஆறும்; வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி நெரித்தானை; நின்மலனை; அம்மான் தன்னை; நிலா நிலவு செஞ்சடைமேல் நிறை நீர்க்கங்கை தரித்தானை; சங்கரனை; சம்புதன்னை; தரியலர்கள் புரம்மூன்றும் தழல்வாய் வேவச் சிரித்தானை; திகழ் ஒளியை; திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே. | [10] |