சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.072   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விங்கு விளை கழனி, மிகு
பண் - சாதாரி   (திருமாகறல் அடைக்கலங்காத்தநாதர் புவனநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=KazBwKsulkI

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.072   விங்கு விளை கழனி, மிகு  
பண் - சாதாரி   (திருத்தலம் திருமாகறல் ; (திருத்தலம் அருள்தரு புவனநாயகியம்மை உடனுறை அருள்மிகு அடைக்கலங்காத்தநாதர் திருவடிகள் போற்றி )

எலும்பு முறிவு குணம் அடைவதற்கும் , இளம்பிள்ளை வாதம் , பக்க வாத நோய்கள் தீர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்
விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம்,
மங்குலொடு நீள்கொடிகள் மாடம் மலி, நீடு பொழில், மாகறல் உளான்-
கொங்கு விரிகொன்றையொடு, கங்கை, வளர் திங்கள், அணி செஞ்சடையினான்;
செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும், உடனே.

[1]
கலையின் ஒலி, மங்கையர்கள் பாடல் ஒலி, ஆடல், கவின் எய்தி, அழகு ஆர்
மலையின் நிகர் மாடம், உயர் நீள்கொடிகள் வீசும் மலி மாகறல் உளான்-
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி, எரிபுன் சடையினுள்
அலை கொள் புனல் ஏந்து பெருமான்-அடியை ஏத்த, வினை அகலும், மிகவே.

[2]
காலையொடு துந்துபிகள், சங்கு, குழல், யாழ், முழவு, காமருவு சீர்
மாலை வழிபாடு செய்து, மாதவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான்-
தோலை உடை பேணி, அதன்மேல் ஒர் சுடர் நாகம் அசையா, அழகிதாப்
பாலை அன நீறு புனைவான்-அடியை ஏத்த, வினை பறையும், உடனே.

[3]
இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தி, எழில் மெய்யுள் உடனே,
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி, மகிழ் மாகறல் உளான்-
கொங்கு, வளர் கொன்றை, குளிர்திங்கள், அணி செஞ்சடையினான்-அடியையே
நுங்கள் வினை தீர, மிக ஏத்தி, வழிபாடு நுகரா, எழுமினே!

[4]
துஞ்சு நறு நீலம், இருள் நீங்க, ஒளி தோன்றும் மது வார் கழனிவாய்,
மஞ்சு மலி பூம்பொழிலில், மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான்-
வஞ்ச மதயானை உரி போர்த்து மகிழ்வான், ஒர் மழுவாளன், வளரும்
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன்-அடியாரை நலியா, வினைகளே

[5]
மன்னும் மறையோர்களொடு பல்படிம மா தவர்கள் கூடி உடன் ஆய்
இன்ன வகையால் இனிது இறைஞ்சி, இமையோரில் எழு மாகறல் உளான்-
மின்னை விரி புன்சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே
உன்னுமவர், தொல்வினைகள் ஒல்க, உயர் வான் உலகம் ஏறல் எளிதே.

[6]
வெய்ய வினை நெறிகள் செல, வந்து அணையும் மேல்வினைகள் வீட்டல் உறுவீர்
மை கொள் விரி கானல், மது வார் கழனி மாகறல் உளான்-எழில் அது ஆர்
கைய கரி கால்வரையின் மேலது உரி-தோல் உடைய மேனி அழகு ஆர்
ஐயன்-அடி சேர்பவரை அஞ்சி அடையா, வினைகள்; அகலும், மிகவே.

[7]
தூசு துகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வன, பொன் மாடமிசையே,
மாசு படு செய்கை மிக, மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான்;
பாசுபத! இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி, அழகு ஆர்
பூசு பொடி ஈசன்! என ஏத்த, வினை நிற்றல் இல, போகும், உடனே.

[8]
தூய விரிதாமரைகள், நெய்தல், கழுநீர், குவளை, தோன்ற, மது உண்
பாய வரிவண்டு பலபண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான்-
சாய விரல் ஊன்றிய இராவணன் தன்மை கெட நின்ற பெருமான்-
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே.

[9]
காலின் நல பைங்கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார்
மாலும் மலரானும், அறியாமை எரி ஆகி, உயர் மாகறல் உளான்-
நாலும் எரி, தோலும் உரி, மா மணிய நாகமொடு கூடி உடன் ஆய்,
ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா, வினைகளே.

[10]
கடை கொள் நெடுமாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்கோன்-
அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன்-உரையால்,
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே
உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள்
ஒல்கும், உடனே.

[11]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list