சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.068
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வான் அமர் திங்களும் நீரும் பண் - காந்தாரம் (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Q-PqFOi6AJw |
5.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
தளரும் கோள் அரவத்தொடு தண்மதி பண் - திருக்குறுந்தொகை (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை) Audio: https://www.youtube.com/watch?v=apt_My0HYZY |
5.020
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருவராய் இரு மூவரும் ஆயவன், பண் - திருக்குறுந்தொகை (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை) Audio: https://www.youtube.com/watch?v=1rmMXPsqTsg |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.068  
வான் அமர் திங்களும் நீரும்
பண் - காந்தாரம் (திருத்தலம் திருக்கடம்பூர் ; (திருத்தலம் அருள்தரு சோதிமின்னம்மை உடனுறை அருள்மிகு அமுதகடேசுவரர் திருவடிகள் போற்றி )
வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை, தேன் அமர் கொன்றையினானை, தேவர் தொழப்படுவானை, கான் அமரும் பிணை புல்கிக் கலை பயிலும் கடம்பூரில் தான் அமர் கொள்கையினானை, தாள் தொழ, வீடு எளிது ஆமே. | [1] |
அரவினொடு ஆமையும் பூண்டு, அம் துகில் வேங்கை அதளும், விரவும் திரு முடி தன் மேல் வெண்திங்கள் சூடி, விரும்பிப் பரவும் தனிக் கடம்பூரில் பைங்கண் வெள் ஏற்று அண்ணல் பாதம் இரவும் பகலும் பணிய, இன்பம் நமக்கு அது ஆமே. | [2] |
இளி படும் இன்சொலினார்கள் இருங்குழல்மேல் இசைந்து ஏற, தெளிபடு கொள்கை கலந்த தீத் தொழிலார் கடம்பூரில் ஒளிதரு வெண்பிறை சூடி, ஒண்ணுதலோடு உடன் ஆகி, புலி அதள் ஆடை புனைந்தான் பொன்கழல் போற்றுதும், நாமே. | [3] |
பறையொடு சங்கம் இயம்ப, பல்கொடி சேர் நெடுமாடம் கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர் கடம்பூரில் மறையொடு கூடிய பாடல் மருவி நின்று, ஆடல் மகிழும் பிறை உடை வார்சடையானைப் பேண வல்லார் பெரியோரே. | [4] |
தீ விரிய, கழல் ஆர்ப்ப, சேய் எரி கொண்டு, இடுகாட்டில், நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய, நட்டம் நவின்றோன் கா விரி கொன்றை கலந்த கண்நுதலான் கடம்பூரில், பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே. | [5] |
தண்புனல் நீள் வயல்தோறும் தாமரைமேல் அனம் வைக, கண் புணர் காவில் வண்டு ஏற, கள் அவிழும் கடம்பூரில், பெண் புனை கூறு உடையானை, பின்னுசடைப் பெருமானை, பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர் தாமே. | [6] |
பலி கெழு செம்மலர் சார, பாடலொடு ஆடல் அறாத, கலி கெழு வீதி கலந்த, கார் வயல் சூழ் கடம்பூரில், ஒலி திகழ் கங்கை கரந்தான், ஒண் நுதலாள் உமை கேள்வன், புலி அதள் ஆடையினான் தன் புனைகழல் போற்றல் பொருள் | [7] |
பூம் படுகில் கயல் பாய, புள் இரிய, புறங்காட்டில் காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில், மேம்படு தேவி ஓர்பாகம் மேவி! எம்மான்! என வாழ்த்தி, தேம் படு மா மலர் தூவி, திசை தொழ, தீய கெடுமே. | [8] |
திரு மரு மார்பில் அவனும், திகழ்தரு மா மலரோனும், இருவரும் ஆய், அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன் கருவரை காலில் அடர்த்த கண் நுதலான் கடம்பூரில் மருவிய பாடல் பயில்வார் வான் உலகம் பெறுவாரே. | [9] |
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும், அம் துவர் ஆடைச் சோடைகள், நன்நெறி சொல்லார்; சொல்லினும், சொல் அலகண்டீர்! வேடம் பல பல காட்டும் விகிர்தன், நம் வேதமுதல்வன், காடு அதனில் நடம் ஆடும் கண் நுதலான், கடம்பூரே. | [10] |
விடை நவிலும் கொடியானை, வெண்கொடி சேர் நெடுமாடம் கடை நவிலும் கடம்பூரில் காதலனை, கடல் காழி நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும், படை நவில் பாடல், பயில்வார் பழியொடு பாவம் இலாரே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.019  
தளரும் கோள் அரவத்தொடு தண்மதி
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருக்கடம்பூர் ; (திருத்தலம் அருள்தரு சோதிமின்னம்மை உடனுறை அருள்மிகு அமுதகடேசுவரர் திருவடிகள் போற்றி )
தளரும் கோள் அரவத்தொடு தண்மதி வளரும் கோல வளர்சடையார்க்கு இடம்- கிளரும் பேர் இசைக் கின்னரம் பாட்டு அறாக் களரும் கார்க் கடம்பூர்க் கரக்கோயிலே. | [1] |
வெல வலான், புலன் ஐந்தொடு; வேதமும் சொல வலான்; சுழலும் தடுமாற்றமும் அல வலான்; மனை ஆர்ந்த மென்தோளியைக் கல வலான்; கடம்பூர்க் கரக்கோயிலே. | [2] |
பொய் தொழாது, புலி உரியோன் பணி செய்து எழா எழுவார் பணி செய்து எழா, வைது எழாது எழுவார் அவர் எள்க, நீர் கைதொழா எழுமின், கரக்கோயிலே! | [3] |
துண்ணெனா, மனத்தால்-தொழு, நெஞ்சமே! பண்ணினால் முனம் பாடல் அது செய்தே; எண் இலார் எயில் மூன்றும் எரித்த முக்- கண்ணினான் கடம்பூர்க் கரக்கோயிலே! | [4] |
சுனையுள் நீலமலர் அன கண்டத்தன், புனையும் பொன்நிறக் கொன்றை புரிசடைக் கனையும் பைங்கழலான், கரக்கோயிலை நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே. | [5] |
குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும் வணங்கி வாழ்த்துவர், அன்பு உடையார் எலாம்- வணங்கி வான் மலர் கொண்டு அடி வைகலும் கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே. | [6] |
பண்ணின் ஆர் மறை பல்பலபூசனை மண்ணினார் செய்வது அன்றியும், வைகலும் விண்ணினார்கள் வியக்கப்படுமவன் கண்ணின் ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே. | [7] |
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன், மங்கை பாட மகிழ்ந்து உடன் வார்சடைக் கங்கையான், உறையும் கரக்கோயிலைத் தம் கையால்-தொழுவார் வினை சாயுமே. | [8] |
நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன், தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான் தன் கடன்(ன்) அடியேனையும் தாங்குதல்; என் கடன் பணி செய்து கிடப்பதே. | [9] |
பணம் கொள் பாற்கடல் பாம்பு அணையானொடும், மணம் கமழ் மலர்த்தாமரையான் அவன், பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம்- கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே. | [10] |
வரைக்கண் நால்-அஞ்சுதோள் உடையான் தலை அரைக்க ஊன்றி அருள் செய்த ஈசனார், திரைக்கும் தண் புனல் சூழ், கரக்கோயிலை உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.020  
ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருக்கடம்பூர் ; (திருத்தலம் அருள்தரு சோதிமின்னம்மை உடனுறை அருள்மிகு அமுதகடேசுவரர் திருவடிகள் போற்றி )
ஒருவராய் இரு மூவரும் ஆயவன், குரு அது ஆய குழகன், உறைவு இடம்- பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ் கரு அது ஆம் கடம்பூர்க் கரக்கோயிலே. | [1] |
வன்னி, மத்தம், வளர் இளந்திங்கள், ஓர் கன்னியாளை, கதிர் முடி வைத்தவன்; பொன்னின் மல்கு புணர்முலையாளொடும் மன்னினான்; கடம்பூர்க் கரக்கோயிலே. | [2] |
இல்லக் கோலமும், இந்த இளமையும், அல்லல் கோலம், அறுத்து உய வல்லிரே! ஒல்லைச் சென்று அடையும், கடம்பூர் நகர்ச் செல்வக் கோயில் திருக்கரக்கோயிலே! | [3] |
வேறு சிந்தை இலாதவர் தீவினை கூறு செய்த குழகன் உறைவு இடம்- ஏறு செல்வத்து இமையவர்தாம் தொழும் ஆறு சேர் கடம்பூர்க் கரக்கோயிலே. | [4] |
திங்கள் தங்கிய செஞ்சடைமேலும் ஓர் மங்கை தங்கும் மணாளன் இருப்பு இடம்- பொங்கு சேர் மணல் புன்னையும், ஞாழலும், தெங்கு, சேர் கடம்பூர்க் கரக்கோயிலே. | [5] |
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம் எல்லை ஆன பிரானார் இருப்பு இடம்- கொல்லை முல்லை, கொழுந் தகை மல்லிகை, நல்ல சேர் கடம்பூர்க் கரக்கோயிலே. | [6] |
தளரும் வாள் அரவத்தொடு தண்மதி வளரும் பொன்சடையார்க்கு இடம் ஆவது- கிளரும் பேர் ஒலிக் கின்னரம் பாட்டு அறாக் களரி ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே. | [7] |
உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம் பெற்றார் ஆய பிரானார் உறைவு இடம்- முற்றார் மும்மதில் எய்த முதல்வனார், கற்றார் சேர், கடம்பூர்க் கரக்கோயிலே. | [8] |
வெள்ளை நீறு அணி மேனியவர்க்கு எலாம் உள்ளம் ஆய பிரானார் உறைவு இடம்- பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான், கள்வன், சேர் கடம்பூர்க் கரக்கோயிலே. | [9] |
பரப்புநீர் இலங்கைக்கு இறைவன்(ன்) அவன் உரத்தினால் அடுக்கல்(ல்) எடுக்கல்(ல்) உற, இரக்கம் இன்றி இறை விரலால்-தலை அரக்கினான் கடம்பூர்க் கரக்கோயிலே. | [10] |